‘அட, ஆஃபரைச் சொல்லுங்க… நானே அனுப்பி வச்சிடறேன்!’
June 13, 2013 by The Editor
Filed under Nation, Politics, இது எப்படி இருக்கு
’அட, ஆஃபரைச் சொல்லுங்க… நானே அனுப்பி வச்சிடறேன்!’
‘ஏங்க முதல்வர் மேடம்… எதுக்கு நீங்க இவ்ளோ சிரமப்படறீங்க… அவங்களை எம்எல்ஏவாக்குனது நான்தான்… அவனுங்களுக்கு என்ன ‘ஆஃபரோ’ அதை நேரடியா என்கிட்டயே கொடுத்துடுங்க…. மிச்சமிருக்கிற மொத்தப் பேரையும் நானே ‘தொகுதிப் பிரச்சினையைப் பேச’ அனுப்பி வச்சிடறேன்!’
-என்வழி
எனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தில் கல்லூரி தேர்வு எழுத உத்தரவு போட்டிருக்கிறார்கள்! – ஜெயலலிதா
May 28, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தேர்வுகள் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் – ஜெ

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள்தேர்வுகளை பயிற்சிகள் மற்றும் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமக்குத் தெரியாமலேயே, தன் கவனத்துக்கு கொண்டு வராமலேயே வெளியிடப்பட்டது என்றும், இந்த உத்தரவை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.
இந்த விவாதத்தின் போது, ஆங்கில வழியில் பயிலும் மாணவ மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
என் கவனத்துக்கு வராமலேயே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ மாணவியர் தமிழில் உள்தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் ஆகும்.
எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.
எனவே, அனைத்து மாணவ மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதல்வர் கூறியுள்ளார்.
-என்வழி செய்திகள்
டிஎம்எஸ் போல அவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை! – முதல்வர் ஜெயலலிதா
May 26, 2013 by The Editor
Filed under Celebrities, election, election 2011, Entertainment, General
டிஎம்எஸ் போல அவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை! – முதல்வர் ஜெயலலிதா
சென்னை: அமரர் டிஎம் சவுந்திரராஜனைப் போல முழுத் திறமைப் படைத்த பாடகர் ஒருவர் இவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை, என்று புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
டிஎம்எஸ் மறைவுக்கு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
“தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘டி.எம்.எஸ்.’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான டி.எம். சவுந்தரராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
“ராதே என்னை விட்டு ஓடாதேடி” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்தரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னணி பாடும்போது எம்.ஜி.ஆர் அவர்களின் குரலுக்கேற்ற வாறும், சிவாஜி கணேசன் அவர்களுக்கு பின்னணி பாடும்போது, சிவாஜி கணேசன் அவர்களின் குரல் போலவும், மற்ற நடிகர்களுக்குப் பாடும் போது அவரவரது குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை வித்தியாசப்படுத்தி பாடுவதிலும் வல்லவர் டி.எம்.எஸ். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு உச்சரித்துப் பாடியவர்.
முருகக் கடவுள் மீது பக்திகொண்ட டி.எம். சவுந்தரராஜன், முருகப் பெருமான் மீதான “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”, “உள்ளம் உருகுதய்யா முருகா”, “சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா”, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” போன்ற பல பாடல்களுக்கு தானே இசையமைத்து உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
“நான் ஆணையிட்டால்”, “அச்சம் என்பது மடமையடா”, “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு”, “நாணமோ இன்னும் நாணமோ”, “வசந்த முல்லை போலே வந்து”, “மலர்ந்தும் மலராத”, “ஆடலுடன் பாடலைக் கேட்டு”, “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.
டிஎம்எஸ்ஸுடன் பாடிய அனுபவம்
‘அன்பைத் தேடி’ என்ற திரைப்படத்தில் “சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்” என்று துவங்கும் பாடலிலும், ‘சூரியகாந்தி’ என்ற திரைப்படத்தில் “ஓ…மேரி தில் ரூபா” என்று துவங்கும் பாடலிலும் இவருடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக விளங்கிய டி.எம். சவுந்தர ராஜன், 1960, 1970-களில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.
இவர் போல இனியொருவர் இருக்கப் போவதில்லை…
நகைச்சுவையானாலும், சோகரசமானாலும், காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாடலானாலும் அனைத்து உணர்வுகளையும் முழுமையாக வெளிப்படுத்தி பாடக் கூடியவர். இவரைப் போன்று முழுத் திறமைப் படைத்த பாடகர் ஒருவர் இவருக்கு முன்னரும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை என்று கூறுமளவுக்கு ஈடு இணையற்ற திறமை படைத்த ஒரு பின்னணிப் பாடகர் என்று சொன்னால் அது மிகையல்ல.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகத் திறம்படப் பணியாற்றியவர். எனது 2001 – 2006 ஆட்சிக் காலத்தில் எனது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர்.
டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டு அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.
டி.எம்.சவுந்தரராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன்? பயமா? – கேள்வி – பதில்
May 17, 2013 by The Editor
Filed under General, Nation, Politics, Questions, இன்றைய சூடான அலசல்
ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன்? பயமா? – கேள்வி – பதில் 31
கேள்வி: ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து ஏதாவது எழுதியிருப்பீர்கள் என்று பார்த்தேன். ஆனால் அமைதியாக தலைவர் செய்திகளுக்கு தாவிவிட்டது ஏன்? வழக்கு பயமா? ஜெ அவ்வளவு நல்லாட்சியா தந்துவிட்டார்?
- தேவராஜன், எஸ் வெங்கடேசன், ரா சிவகுமார், நாட்ரம்பள்ளி செந்தில்
பதில்: நினைத்தேன், இப்படி ஒரு கேள்வி எழும் என்று. நீங்கள் மட்டுமல்ல, நிறைய நண்பர்கள் கேட்டுவிட்டார்கள்.
எழுத வேண்டாம் என்ற நினைப்பு ஒன்றுமில்லை. நேற்று முழுக்க ஒவ்வொரு நாளிதழும் நான்கு பக்கங்களுக்கு அம்மா ஆட்சியின் சாதனைகள் என்று விளம்பரங்களாய் வெளியிட்டுத் தள்ளியதைப் பார்த்தபோது, ஒரு சலிப்பே வந்துவிட்டது.
பொய்யெனத் தெரிந்தும் விளம்பரங்கள் தருகிறார்கள்… அது பொய்தான் எனத் தெரிந்தே ஊடகங்கள் அலங்காரமாய் பரப்புகின்றன. மக்களும் மிகுந்த கவனத்துடன் அந்த விளம்பரங்களை செய்திகளைப் படிக்கும் பாவனையுடன் படிப்பதை நேற்று முழுக்க பார்க்க முடிந்தது.
ஒரு பக்கம் ஒரேயடியாக ஜெயலலிதாவின் பாதார விந்தமே சரணம் என ஒரு கோஷ்டியும், இன்னொரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு ஜெயலலிதா திட்டித் தீர்க்கும் கோஷ்டியுமாய் சமூக வலைத் தளங்கள்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே ஒருவித சலிப்பும் மன முறுகலும் ஏற்பட்டு எழுதத் தோன்றாமல் போய்விட்டதுதான் உண்மை.
இன்னொன்று, ஜெயலலிதா ஆட்சி சாதனையா வேதனையா என்பதை மீடியா சொல்லித்தானா மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? அந்த அளவுக்குக் கூட அவர்களால் சுயமாக யோசிக்க முடியாமல் போய்விட்டதா?
பொழுதுபோக்கு போதை, டாஸ்மாக் போதை, எப்போதும் எதாவது ஒரு அக்கப்போருக்கு அலைபாயும் போதை… என போதையில் மிதக்கும் இந்த மக்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் ஏற்கப் போவதில்லை. பார்த்து, பட்டு, திருந்தினால் திருந்தட்டும்… இல்லை மீண்டும் இதேமாதிரி ஒரு ஆட்சியை அனுபவிக்கட்டும் என்ற மனநிலைதான் மக்களுக்காக எழுதிய பலர் மனதிலும் இன்றைக்கு உள்ளது.
மற்றபடி, அவரை விமர்சித்து எழுதினால் வழக்கு வரும் என்று ஒரு போதும் பயந்ததில்லை. காரணம் கருணாநிதி, ஜெயலலிதா இருவர் ஆட்சியிலுமே இதுபோன்ற வழக்குகளைச் சந்தித்து வெளிவந்த அனுபவம் உண்டு.
ஜெயலலிதாவின் ஆட்சி சரியில்லை என்றால், அது அவர் தவறல்ல. அவரைப் பற்றி நன்கு தெரிந்தும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களின் தவறு அது. தங்களுக்காக உண்மையாய் உழைக்கும் எந்த அரசியல்வாதியையும் அவர்கள் அங்கீகரித்ததே இல்லை.
கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளாக மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்துவரும் வைகோ போன்றவர்களை இன்னும் கூட தோற்கடித்துதானே இவர்களுக்குப் பழக்கம்… அதை விவாதப் பொருளாக்கி ரசிக்கிற குரூர மனம் படைத்தவர்களுக்கு ஏற்ற ஆட்சிதான் இது.
நல்லவர்கள் ஏன் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்… அல்லது விலகி ஓடுகிறார்கள்? இந்த மக்களின் மனநிலை புரிந்துதான். அரசியலில் இவர்களுக்கு எப்போதும் ஒரு அக்கப்போர் தேவை. அது சுவாரஸ்யமாக புனையப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த பாம்பு – கீரி சண்டையைத் தாண்டிய ஆரோக்கிய அரசியல் சூழல் இனி உருவாகுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டதால்தான், ரஜினி போன்ற நல்ல மனிதர்கள், அரசியலை சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலை!
கேள்விக்கு வருகிறேன்… ஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி பற்றிய தனி கட்டுரை இன்று வெளியாகிறது.
அதற்கு முன் சுருக்கமாக…
ஜெயலலிதாவின் இந்த இரண்டாண்டு ஆட்சி மட்டுமல்ல.. அடுத்த மூன்றாண்டு கால ஆட்சியிலும் பெரிதாக எந்த மாறுதலும் வந்துவிடாது. 110 விதியின் கீழ் அறிவிப்பு மழை மட்டும் ஓயாமல் பொழியும். இது வெறும் அறிக்கை ஆட்சி…
வானத்தைப் போல என்ற படத்தில் தன் மட்டமான ஹோட்டலுக்கு வந்து ‘மகராசன் நல்லாயிருக்கணும்’ என தன்னை வாழ்த்தும் பிச்சைக்காரனுக்கு, இட்லி, கெட்டிச் சட்னி, பூரி, கிழங்கு எல்லாம் கட்டித் தரச் சொல்வார் சொல்வார் செந்தில். ஆனால் தரமாட்டார். ‘நீ நல்லதா நாலு வார்த்தை சொன்னே. நானும் நல்லதா நாலு வார்த்தை சொன்னேன். சரியா போச்சு.. போயிட்டு வா..’, என்பார்.
அந்த பிச்சைக்காரன்தான் தமிழ்நாட்டு மக்கள்!
-வினோ
என்வழி ஸ்பெஷல்
தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
March 27, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை: தனித் ‘தமிழீழம்’ நாடு அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர் சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அவர் முன்மொழிந்த தீர்மானத்தில்,
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இல்லாமல், உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை என்றார் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்;
இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்;
தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்;
ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்தினை சட்டசபை ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
-என்வழி செய்திகள்
சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடமாட்டார்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
March 27, 2013 by The Editor
Filed under General, ஸ்போர்ட்ஸ்
சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடமாட்டார்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருக்கிற சூழ்நிலையில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் இடம்பெறாத போட்டிகளை மட்டுமே சென்னையில் நடத்த அனுமதிக்க முடியும் என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியது நினைவிருக்கலாம்.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல். நிர்வாகிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் கடிதம்…
இது தொடர்பாக ஐ.பி.எல். தலைவரும், பாராளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க அமைச்சருமான ராஜீவ் சுக்லா விடுத்துள்ள அறிக்கை:
சென்னையில் நடைபெறுகிற ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் பங்கேற்பதை நான் அனுமதிக்க முடியாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக ஐ.பி.எல். நிர்வாகக் குழு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கூடியது.
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கிற வீரர்கள், போட்டிகளை காண வருகிற பார்வையாளர்கள், மைதானங்களில் பணியாற்றுகிறவர்கள் என அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் தருகிறது. எனவே இரண்டு அம்சங்களை நாங்கள் கவனத்தில் கொண்டோம். உள்ளூர் உணர்வுகள், இலங்கை வீரர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு கவனத்தில் கொண்டது.
இலங்கை வீரர்கள் பங்கேற்பு இல்லை
உள்ளூர் நிர்வாகம் ஒன்றைக் கூறுகிறபோது, நாங்கள் அதற்கு செவி சாய்த்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில், இந்தப் போட்டியை நடத்துவதில் குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாநில அரசு அதிகாரிகளின் உதவி எங்களுக்கு தேவையாக இருக்கிறது.
உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது.எனவே சென்னையில் நடைபெறுகிற பெப்சி ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி 9 ஐ.பி.எல். அணிகளுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய தடகளப் போட்டிகளைத் தொடர்ந்து…
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால், 20 வது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த முடியாது. வேறு எங்காவது நடத்திக் கொள்ளுங்கள் என முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தது நினைவிருக்கலாம்.
இலங்கை வீரர்கள் யார் யார்?
ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 13 இலங்கை வீரர்கள் உள்ளனர். தில்ஷான், சங்கக்கரா, மலிங்கா, ஜெயவர்தன, ஏஞ்சலோ மாத்யூஸ், குலசேகர, அகிலா தனஞ்செயா, ஜீவன் மென்டிஸ், சசித்ர சனநாயக, அஜந்தா மென்டிஸ், குசால் பெரேரா, முத்தையா முரளிதரன், திசரா பெரேரா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்கள் 8 ஐபிஎல் அணிகளில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குலசேகரா மற்றும் தனஞ்செயா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்போது அவர்களை நீக்கிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஹைதராபாத் அணியிலிருந்து திசரா பெரேரா மற்றும் சங்கக்கரா இன்னும் நீக்கப்படவில்லை.
-என்வழி செய்திகள்
நீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாறு படைக்கும் தமிழக மாணவர்கள்… மவுனம் இனியும் கைகொடுக்காது பாரதமே!
March 18, 2013 by The Editor
Filed under Nation, Politics, இன்றைய சூடான அலசல்
நீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாறு படைக்கும் தமிழக மாணவர்கள்… மவுனம் இனியும் கைகொடுக்காது பாரதமே!
இப்படியொரு போராட்டத்தை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என்ற பேதமில்லாமல், பார்க்கும் இடமெல்லாம் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி கேட்டும், தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்பு கோரியும், ரத்தம் குடித்த கொலைவெறியன் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரியும்… அனைத்து மாணவர்களும் கொந்தளித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
லயோலா கல்லூரியில் சில மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ இன்று உலகை தகிக்கத் தொடங்கியிருக்கிறது. மன்மோகன் சிங்கும், சோனியாவும் இன்ன பிற காங்கிரஸ் தலைவர்களும் வழக்கம் போல மவுனம் காத்து தமிழர் உணர்வை அவமானப்படுத்தி வருகின்றனர். தமிழகத் தலைவர்களோ எப்படி இந்தப் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது என்று கணக்குப் போட்டு வருகின்றனர்.
பாலச்சந்திரன் என்ற அந்த பாலகன், தன் உடலில் வாங்கிக் கொண்ட துப்பாக்கிக் குண்டுகள் இன்று இறுக மூடிக் கொண்டிருக்கும் நீதியின் கதவுகளை துளைக்க ஆரம்பித்துள்ளன.
அரசியல் பின்னணி, ஊடக பிரச்சாரம் ஏதுமின்றி தன்னெழுச்சியாய் தொடங்கிய மாணவர் போராட்டம், இன்று மக்கள் போராட்டமாக மாறி அரசின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளது.
இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய கடந்த திமுக அரசைப் போலவே, இப்போதைய ஜெயலலிதா அரசும் பல தந்திரங்களை, அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அறிவித்து, தேர்வுகளையும் ரத்து செய்துள்ளார்.
அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களை மேலும் தீவிர போராட்டத்துக்கு தள்ளியுள்ளது. இப்போது பெற்றோர் சம்மதத்துடன் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தை அடக்குமுறையாலோ அல்லது திமிரான பிடிவாதத்தாலோ புறந்தள்ளிவிடலாம் என மத்திய மாநில அரசுகள் நினைக்கலாம். அது அத்தனை எளிதானதல்ல..

சென்னையில் மாணவர்களை ஆதரித்து பீகார் எம்எல்ஏ சோம் பிரகாஷ்… ‘ராஜபக்சே கயா வந்தபோது கொல்காரனே உன் கால் இந்த மண்ணில் படக்கூடாது,’ என போர்க்குரல் எழுப்பியவர்…
மாணவர் போராட்டங்களும் கருணாநிதி ஜெயலலிதா அரசுகளும்…
March 11, 2013 by The Editor
Filed under Nation, Politics, இன்றைய சூடான அலசல்
மாணவர் போராட்டங்களும் கருணாநிதி ஜெயலலிதா அரசுகளும்…
மாணவர்கள் போராட்டம் வலுவடைவது தங்களுக்கு பெரும் ஆபத்து என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இவர்களால் மாணவர்களின் தன்னெழுச்சியை சகித்துக் கொள்ள முடிவதில்லை.
ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும், ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு தண்டனை வேண்டும், தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய எட்டு மாணவர்கள் திலீபன், ஜோசப் பிரிட்டோ, அந்தோணி சாஜ், பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முகப் பிரியன், லியோ ஸ்டாலின் ஆகியோரை, ஞாயிறு நள்ளிரவு வலுக்கட்டாயமாக தூக்கிப் போய் மருத்துவனையில் சிகிச்சைப் பெற வைத்துள்ளனர்.
ஈழ மக்கள் விடுதலைக்காக முத்துக்குமார் தன்னை எரித்து புதிய எழுச்சியை உருவாக்கிய நேரத்தில் அதை முற்றாக மழுங்கடிப்பதில் வெற்றி பெற்றது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. மத்திய அரசு செய்வதையெல்லாம் நியாயப்படுத்தி, மாணவர் போராட்டங்களை முற்றாக ஒடுக்கியது. கல்லூரிகள், விடுதிகளைக் கூட மூடி மாணவர்களை கிராமங்களுக்கு விரட்டியது.
இன்று அந்த அளவு கூட விட்டுவைக்கவில்லை ஜெயலலிதா அரசு. போலீஸைப் பயன்படுத்தி சத்தமின்றி உண்ணாவிரதமிருந்த மாணவர்களை தூக்கிச் சென்றுள்ளது.
அரசு அல்லது பிரதான கட்சிகள் என்றில்லை… ஓட்டுப் பிழைப்பு நடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுமே இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டியது வெளிப்படையாகத் தெரிந்தது.
தன்னெழுச்சியாக போராடத் தொடங்கியுள்ள மாணவர்களை, அதை முடித்துக் கொண்டு தங்கள் பின்னாள் திரளச் செய்துவிட வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் காட்டியதை இந்த முறை பார்க்க முடிந்தது.
ஆனால் எதற்கும் இணங்காத மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் உறுதியுடன் இருந்து, அரசின் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால் அவர்கள் ஆரம்பித்த போராட்ட உணர்வு இப்போது அனைத்துக் கல்லூரிகளுக்கும் பரவியிருக்கிறது.
இன்று தமிழகமும் முழுவதும் பல கல்லூரிகளில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர் மாணவர்கள்.
மாணவர் போராட்டங்கள் மகத்தானவை.. சுயநலமற்றவை… அந்த வயதில் மட்டுமே அது சாத்தியம். அதை களங்கப்படுத்தாமல், ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதுதான் மக்களின் கடமை.
இப்போது அரசியல்வாதிகளின் முகங்கள் அம்பலப்பட்டுவிட்டதால், தங்களை நோக்கி வரும் தலைவர்களை மாணவர்கள் நம்பாமல் விரட்டியடிக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்கள்தான் இந்தப் போராட்டங்களை மேலும் வலிமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும்.
மக்களின் ஏகோபித்த ஆதரவும் இணைந்தால் மாணவர் போராட்டத்துக்கு இந்த முறை ஒரு பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!
-என்வழி செய்திகள்
துரியோதனனும் கர்ணனும்! – இது ‘பொன்னியின் செல்வி’ ஜெயலலிதா சொன்ன கதை!
March 10, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
துரியோதனனும் கர்ணனும்! – இது ‘பொன்னியின் செல்வி’ ஜெயலலிதா சொன்ன கதை!
தஞ்சாவூர்: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவேரி பாசன விவசாயிகள் சார்பில் தஞ்சையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழக்கம்போல தன் பாணியில் அரசியல் கதை ஒன்றைக் கூறினார்.
அந்தக் கதை:
வாரி வழங்குவதிலே கர்ணனுக்கு நிகர் யாருமில்லை என்பார்கள். இதன் காரணமாக யாருக்கும் இல்லாத புகழ் கர்ணனுக்கு இருந்தது.
கர்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே சென்றது. ஒரு நாள் துரியோதனனின் அமைச்சர், துரியோதனனிடம், “கர்ணன் ஒரு சிறிய நாட்டைத்தான் ஆள்கிறார். அந்த நாட்டைக் கொடுத்ததும் நீங்கள் தான். ஆனால் கர்ணனின் புகழ் தான் ஓங்கி இருக்கிறது – இது சரி தானா?” என்று குதர்க்கமாக கேள்வி கேட்டார்.
துரியோதனனுக்கு, அமைச்சர் கூறுவது சரி என்று தோன்றியது. துரியோதனன் உடனே அமைச்சரைப் பார்த்து, “நானும் கர்ணன் மாதிரி புகழ் பெற ஏதாவது ஒரு யோசனையை சொல்” என்று கேட்டார்.
“மகா பிரபுவே தாங்களும் கர்ணனைப் போல் கொடை கொடுக்கத் துவங்கிவிடுங்கள். பின்னர் தங்களுக்கு ‘கொடை வள்ளல்’ என்ற பெயர் கிடைக்கும்”, என்றார் அமைச்சர்.
துரியோதனனும் “சரி, அப்படியே செய்கிறேன்” என்றார்.
உடனே அமைச்சர், “அருமையான யோசனை சொன்ன எனக்கு ஏதாவது பரிசு தரக் கூடாதா?” என்று கேட்டார். அதற்கு துரியோதனன், “அதற்குத் தான் சம்பளம் தருகிறேனே” என்றார்.
மறு நாள், “துரியோதன மகாராசாவும் கொடை கொடுப்பார்”, என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டவுடன், பகவான் கிருஷ்ணர் தள்ளாத முதியவர் வேடத்தில், துரியோதனனிடம் வந்து, “அய்யா, எனக்கு ஒரு பொருள், தானமாக வேண்டும்”, என்று கேட்டார்.
உடனே துரியோதனன், “என்ன வேண்டும்? கேளுங்கள் தருகிறேன்” என்று கூறினார்.
அதற்கு அந்த முதியவர், “இன்னும் ஒரு மாதம் கழித்து இதே நாளில் வந்து நான் விரும்பும் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
பின்னர் பகவான் கிருஷ்ணர், வருண பகவானை அழைத்து, “இன்னும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து மழை பெய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். ஒரு மாதத்திற்கு தொடர்ந்து அடைமழை பெய்தது.
மீண்டும் கிருஷ்ணர், முதியவர் வேடத்தில் துரியோதனனைப் பார்த்து, “நான் உங்களை முன்பே சந்தித்து எனக்குக் கொடையாக ஒரு பொருளைத் தர வேண்டும் என்று கேட்டிருந்தேன். தாங்களும், தருவதாக சொன்னீர்கள். நினைவு இருக்கிறதா?” என்று கேட்டார்.
அதற்கு துரியோதனன், “நினைவு இருக்கிறது. தங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள்” என்று கேட்டார்.
கிருஷ்ணர், “கொடை வள்ளலே என் மகளின் திருமணத்திற்காக எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும்” என்று கேட்டார்.
இதற்கு துரியோதனன், “ஒரு மாதமாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. நாங்களே விறகு இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். விறகு மட்டும் கேட்காதீர். வேறு ஏதாவது வேண்டும் என்றால் கேளுங்கள்,” என்று சினத்துடன் கூறினார்.
இதற்கு பதிலளித்த கிருஷ்ணர், “தாங்கள் எனக்கு கொடுத்த வாக்கு என்னாவது?” என்று கேட்டார். அதற்கு துரியோதனன், “வாக்காவது, போக்காவது” என்று கூறினார்.
முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் அங்கிருந்து புறப்பட்டு கர்ண மகாராசாவின் அரண்மனைக்கு சென்றார்.
முதியவரைப் பார்த்த கர்ணன், முதியவருக்கு உடுத்திக் கொள்ள மாற்று உடையும்; துவட்டிக் கொள்ள துண்டும் அளிக்குமாறு உத்தரவிட்டார். முதியவரும் உலர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டார். அவருக்கு சூடான பாலும் கொடுக்கப்பட்டது.
சற்று இளைப்பாறிய முதியவர், “அய்யா, என் மகளின் திருமணத்தை முன்னிட்டு எனக்கு ஒரு வண்டி நிறைய காய்ந்த விறகு வேண்டும். அதை கொடையாக கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன்.” என்றார்.
உடனே கர்ணன், “நம் நாட்டில் உள்ள பாழடைந்த அரண்மனையில் நிறைய தூண்களும் உத்திரங்களும் உள்ளன. அவை மழையில் நனையாமல் காய்ந்த நிலையில் உள்ளன. அவற்றை வண்டியில் ஏற்றி, அவை நனையாமல் இருக்க, அவற்றின் மேல் ஓலைகளை கூரை போல் வேய்ந்து, முதியவரின் ஊருக்கு அனுப்பி வையுங்கள்” என்று அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கர்ண மகாராசாவின் உத்தரவுப்படி விறகினைப் பெற்றுக் கொண்ட முதியவர், துரியோதனன் மாளிகை வழியாக சென்றார்.
“பெரியவரே காய்ந்த விறகு கிடைத்து விட்டதா?” என்று வினவினார் அமைச்சர். அதற்கு, “கொடை வள்ளல் கர்ண மகாராசா தான் கொடுத்தார்” என்று கூறினார், அந்த முதியவர்.
கொடை கொடுக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. கொடை உள்ளமும், கூர்த்த அறிவும் வேண்டும் என்னும் உண்மை துரியோதனனுடைய அமைச்சருக்கு புரிந்தது.
கொடை கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும். பிறவிக் குணம் இல்லாமல் கொடை கொடுக்கிற மனம் தானாக வராது. அதே போல் தான், தமிழர்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்கும் மனம் வேண்டும். தன்னலத்தைப் கொண்டிருப்பவர்களுக்கு தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தரக் கூடிய மனம் தானாக வராது.
-என்வழி செய்திகள்
மகளிர் தின ஸ்பெஷல் சர்வே: சோனியாவுக்கு முதலிடம்… ‘வருங்கால பிரதமர்’ ஜெ-க்கு 17 வது இடம்!!
March 8, 2013 by The Editor
Filed under General, Nation, Politics
மகளிர் தின ஸ்பெஷல் சர்வே: சோனியாவுக்கு முதலிடம்… ‘வருங்கால பிரதமர்’ ஜெ-க்கு 17 வது இடம்!!
டெல்லி: இந்தியாவின் பிரபலமான, அதிகாரமிக்க பெண் சோனியா காந்திதான் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. வருங்கால பிரதமர் என்று வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவுக்கு 17வது இடமும், அதே கனவில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 18வது இடமும் கிடைத்துள்ளன.
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி அசோசெம் மற்றும் ஜீ பிஸினஸ் ஆகியவை இணைந்து இந்தியாவில் 2012-ம் ஆண்டுக்கான பிரபலமான பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தின.
இதில் டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், இந்தூர், பாட்னா, புனா, சண்டிகார் உள்பட இந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
32 பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலை இந்திய பிரபல பெண்கள் பட்டியலை வெளியிட்டது.
சோனியாவுக்கு முதலிடம்
இதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அவரைத்தொடர்ந்து ஐ.சி. ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் 2-வது இடத்தையும், பெப்ஸி நிறுவன தலைவர் இந்திரா நூயி 3-வது இடத்தையும், பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா 4-வது இடத்தையும் பெற்றனர்.
ஐஸ்வர்யா ராய்க்கு 5வது இடம்
முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் 5-வது இடத்தையும், இந்தி நடிகை வித்யா பாலன் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 6-வது இடத்தை ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா பெற்றார்.
ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு 8-வது இடமும், பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 9-வது இடமும் கிடைத்தது. இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடிக்கு 10-வது இடம் கிடைத்தது.
எச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர் நைனா லால் கித்வாய்க்கு 11-வது இடமும், பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர் பிரமால்க்கு 12-வது இடமும், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மிக்கு 13-வது இடமும், இந்தி டி.வி. சீரியல் இயக்குநர் ஏக்தா கபூருக்கு 14-வது இடமும், இந்திப்பட இயக்குநர் சோயா அக்தருக்கு 15-வது இடமும் கிடைத்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜுக்கு 16-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு 17வது இடம்
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 17-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவர் எனப்படும் ஜெயலலிதா முதல் பத்து இடங்களில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட இந்தியாவின் ஜெயலலிதா எனப்படும் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 18-வது இடமும், பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாருக்கு 19-வது இடமும், உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.க்கு 20-வது இடமும் கிடைத்துள்ளது.
-என்வழி செய்திகள்
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது! – ஜெயலலிதா அதிரடி
February 21, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது! – ஜெயலலிதா

சென்னை: இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கும் இலங்கைக்கும் பெரும் அதிர்ச்சியை முதல்வரின் இந்த அறிவிப்பு தந்துள்ளது என்றால் மிகையல்ல.
தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் இது ஒரு இனப்படுகொலை. இலங்கை மீது உடனடியாக பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து மற்ற நாடுகளுடன் இந்தியா கலந்து பேச வேண்டும்,” என்றும் வலியுறுத்தியிருந்தார் முதல்வர்.
இந்த நிலையில், இதற்கான ஆரம்ப நடவடிக்கையை தானே முன்னெடுத்துள்ளார் ஜெயலலிதா.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
உடல் உறுப்புகளின் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், நினைவாற்றலை பலப்படுத்துவதற்கும், இளைஞர்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கும், ஆற்றல்களை வெளிக்கொணருவதற்கும், உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கும், நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றல் உலகெங்கும் பரவுவதற்கும் இன்றியமையாததாக விளங்குவது விளையாட்டு என்றால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில், பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், உள் விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், ஊக்கத் தொகைகளை வழங்குதல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வரும் எனது தலைமையிலான அரசு இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திடவும் முடிவு எடுத்திருந்தது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேசமயத்தில், இலங்கை வாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும், கவுரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
பொருளாதாரத் தடை…
நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அப்பாவி இலங்கைத் தமிழர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்,
தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிங்களர்களுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி கூடாது
இது மட்டுமல்லாமல், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு பல கடிதங்களை நான் எழுதியுள்ளேன்.
இதுவன்றி, இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த ஆண்டு தமிழகம் வந்தனர். அப்போது அவர்களுக்கு தமிழகம் வர அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்ததோடு, இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்தப் போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று நான் உத்தரவிட்டேன்.
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தினேன்.
செவிடன் காதில் ஊதிய சங்கு
இருப்பினும், ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ போல் தமிழர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளிய கோரக் காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும். இது என்னுடைய மனதை மிகவும் நெகிழ வைத்துள்ளது.
இதேபோன்று இன்னும் பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களும் வெளிவந்துள்ளன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவிற்கு இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்று இருப்பது தெரிய வருகிறது.
போர்க்குற்றவாளி இலங்கை
இலங்கை அரசின் மாபாதகச் செயல்களை, மனிதாபிமானமற்ற செயல்களை, மனித நேயமற்ற செயல்களை, ஈவு இரக்கமற்ற செயல்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்; அமெரிக்கா உட்பட பிற இணக்க நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 20.2.2013 நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறியிருந்தேன்.
தமிழர் உணர்வைப் புண்படுத்தும் செயல்…
இலங்கை அரசு இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வருகிற ஜூலை மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால், இலங்கை வீரர்கள் 20வது ஆசியத் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரிலுள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மேல், நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன.
வேறு எங்காவது நடத்திக் கொள்ளுங்கள்…
இருப்பினும், இதுநாள் வரை ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித பதிலும், தகவலும் தமிழக அரசிற்கு கிடைக்கப்பெறவில்லை. ஆசிய தடகளக் கழகத்திடமிருந்து எவ்வித சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது என்பதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ள இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது என்பதையும், இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகளக் கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருக்கிரது. இப்படியொரு அறிக்கை தரவே தனி மனத் துணிவு வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத் தடையை மத்திய அரசு விதிக்காவிட்டால் என்ன… இந்த அதிரடி அவமானங்களை இலங்கைக்கு தமிழக அரசாலேயே தர முடியுமே என்று முதல்வர் நிரூபித்திருக்கிறார். அடுத்து சென்னையில் இலங்கை பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கும் இதே தடையை முதல்வர் ஏற்படுத்தினால்.. அப்போது தெரியும் அவமானத்தின் உச்சம்.
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது, இறுதிவரை அவர் உறுதியாக நின்றால்!
-என்வழி செய்திகள்
விஸ்வரூபம்…. சில கேள்விகள்.. மொத்தமாய் ஒரு பதில்!
February 21, 2013 by The Editor
Filed under Celebrities, Entertainment, Questions, இன்றைய சூடான அலசல்
விஸ்வரூபம்…. சில கேள்விகள்.. மொத்தமாய் ஒரு பதில்!
விஸ்வரூபம் படம் பற்றி பட்டும் படாமலும் எழுதறீங்களே…
அந்தப் படத்தோட வசூல் குறித்து வருவதெல்லாம் நிஜமான செய்திகள்தானா…
எந்திரன் வசூலை ஒரு ஏரியாவிலாவது அந்தப் படம் தாண்டியிருக்கா?
படம் மகா போர்.. இன்னொரு ஆளவந்தானா ஆகியிருக்க வேண்டியது… இஸ்லாமியர்களும் முதல்வர் ஜெயலலிதாவும் மறைமுகமா தூக்கிவிட்டுட்டாங்க என்பதுதானே உண்மை…
படத்தோட பட்ஜெட் ரூ 100 கோடின்னு சொன்ன கமல், அந்த பட்ஜெட்டில் இன்னொரு படத்தையும் ரகசியமா எடுத்து வச்சிட்டு வீடு மூழ்கப் போகுதுன்னு சொன்னதெல்லாம் நேர்மையான செயலா…
முக்கியமா அந்த டிடிஎச் மேட்டர் என்னதான் ஆச்சி..?
-இதெல்லாம் என்னிடம் தொடர்ந்து பலரும் கேட்கும் கேள்விகள்!
நானும் இந்தப் படம் குறித்து எழுத வேண்டாம் என்று தவிர்த்து வந்தாலும், மொத்தமாய் ஒரு கட்டுரையைத் தந்துவிடலாம் என்றே இப்போது எழுதுகிறேன்.
விஸ்வரூபம் பற்றி எழுதுமளவுக்கு அது ஒரு ஆகச் சிறந்த படமல்ல. என்வழியில் இதற்குமுன் அந்தப் படத்துக்கு எழுதப்பட்ட விமர்சனம், நமது அமெரிக்க நண்பரால் எழுதப்பட்டது. அப்போது படம் பார்க்காததால் எந்தக் கருத்தும் நான் எழுதவில்லை.
தூக்கத்துக்கு நல்ல மருந்து
அந்தப் படத்தை நான் ஒரே ஒரு முறைதான் பார்த்தேன். ஏன் பார்த்தோம் எனும் அளவுக்குதான் அந்தப் படம் இருந்தது. ஆப்கானிஸ்தான் தொடர்பான காட்சிகள் வந்தபோது, தூக்கம் இமைகளை இழுக்க.. நான் பிடிவாதமாக விழிக்க.. ஒரே உறக்கப் போராட்டம்!
இப்படி ஒரு படம், அமெரிக்காவில் செட்டிலாகப் போகும் கமலுக்கு நிச்சயம் அவசியம்தான். தன்னை அமெரிக்க விமான நிலையத்தில் சோதித்ததற்காக பெயரை Qumal Hassan என மாற்றிக் கொள்ளப் போவதாகக் கூறிய ஒரு நடிகர், சோதித்த அமெரிக்காவுக்கு சோப் போட்டு படமெடுத்தது நிச்சயம் அமெரிக்கா மீதுள்ள கரிசனத்தால் அல்ல. கிரீன் கார்டுக்காக படத்தில் கமலைக் கல்யாணம் செய்து கொள்ளும் பூஜா குமார் செய்கிற காரியத்துக்கு ஒப்பானது ‘ஆஸ்கர் ஆசை கொண்ட’ கமல் எடுத்திருக்கும் இந்தப் படம்!
தமிழ்ப் பேசும் ஜிகாதி என்ற போர்வையில் ஒரு இந்திய உளவாளி தலிபான்கள் கோட்டைக்குள் ஒற்றறியப் போகிறான்… பெயர் விஸாம் அஹமத் கஷ்மீரி… அவனைப் பற்றித் தெரிந்ததெல்லாம் ஒரு துண்டுப் பிரசுரம். அவனுக்கு அரபி தெரியாதாம்! அதை தலிபான் ஜிகாதிகளும் அப்படியே ஒப்புக் கொள்கிறார்களாம்… அதுமட்டுமல்ல.. என்ன ஏது என்றே கேட்காமல் தங்கள் அத்தனை ரகசியத்தையும் அவனுக்கு காட்டிவிடுகிறார்களாம்… (இந்தி தெரியாதவனை டெல்லிக்காரர்களே சேர்த்துக் கொள்வதில்லை… அரபி என்றால் என்னவென்றே தெரியாதவனை எப்படி ஜிகாதியாக்கிக் கொள்வார்கள்!!)
அமெரிக்காவைத் தகர்க்கும் தலிபான்கள் திட்டத்தை இந்த உளவாளி இந்திய அரசுக்குக் கூட சொல்லாமல், ஒரு டான்ஸ் மாஸ்டர் போர்வையில் அமெரிக்கா போய், அங்கே சிஐஏவுக்குக் கூட சொல்லாமல் தானே முனைந்து சதியைக் கண்டுபிடித்து முறியடித்து அமெரிக்காவைக் காப்பாற்றி, அப்படியே அடுத்து இந்தியாவைக் காக்க புது அவதாரம் எடுக்கப் போகிறானாம், இரண்டாம் பாகத்தில்.
இதில் முஸ்லிம்கள் கோபித்துக் கொள்ள என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்டுள்ளனர். அடப்பாவிகளா… இந்தப் படம் பார்த்து முடித்த பிறகு ஒரு இஸ்லாமியன் பற்றிய உங்கள் மதிப்பீடு எப்படி மாறியிருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சியையே கேட்டுப் பாருங்கள்!
‘பாப்பாத்தியம்மா… இதை டேஸ்ட் பண்ணிப்பாரு’ என சிக்கன் செய்து தருகிறார் கமல். இதே வசனத்தை ஒரு இஸ்லாமி்ய இயக்குநர் தன் படத்தில் வைத்திருந்தால்… அல்லது பிராமணரல்லாதோர் வைத்திருந்தால் எப்படியெல்லாம் குதித்திருப்பார்கள்… நல்லாருக்குய்யா உங்க நியாயம்!
சமூக அமைதியைக் கெடுக்கிற வகையில் படமெடுப்பது கமலின் தனி மன அரிப்பு. ஹேராம், உன்னைப் போல் ஒருவனில் அது மறைமுகமாக வெளிப்பட்டது. விஸ்வரூபத்தில் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அடுத்த படத்தில் இன்னும் பகிரங்கமாகத் தெரியப் போகிறது. அதுவும் கோவை குண்டு வெடிப்பை படமாக்கியிருக்கிறார்… சமூகம் மறந்துபோன ஒரு விரும்பத்தகாத விஷயத்தை மீண்டும் மீண்டும் கிளறி, அமைதியைக் கெடுப்பதற்குப் பெயர் கலையல்ல… கொலை!
எது உலகத் தரம்?
இதில் எங்கே உலகத் தரம் வந்ததென்று புரியவே இல்லை. முக்கால்வாசிப் படம் பூரா அரபியும் ஆங்கிலமும் பேசுவதாலா… அல்லது அமெரிக்க வீதிகளையும், ஆப்கானிஸ்தான் மலைகுன்றுகளையும் காட்டுவதாலா… அல்லது உபயோகிக்கும் காரிலிருந்து சவரக் கத்தி வரை அத்தனையும் மேட் இன் அமெரிக்கா என்பதாலா… அல்லது பிரஷர் குக்கரால் சீஸியம் குண்டை செயலிழக்கச் செய்யும் ‘அபார டெக்னிக்காலா’… புரியவில்லை!
அணுகுண்டு பயங்கரவாதத்தில் அப்பா டக்கர் வில்லனே அமெரிக்காதானே… உலகம் முழுக்க அவர்கள் அரங்கேற்றிவரும் பயங்கரவாதம் சாமானியமானதா… அறிவு ஜீவி கமலுக்கு இது தெரியாம போச்சேப்பா…
துளியும் சுவாரஸ்யமற்ற ஒரு சாதாரணப் படத்துக்கு மீடியா மற்றும் இஸ்லாமியர் தயவில் சர்வதேச அந்தஸ்து தேடியிருக்கிறார் கமல். நிச்சயம் இந்த டெக்னிக் ஒருவழிப் பாதையாகவே அவருக்கு முடியும். விஸ்வரூபத்தின் பிஸினஸ் உண்மை அம்பலமாக ஆக…ஆக… அவரது அடுத்தடுத்தப் படங்களின் நிலையை யோசிக்கக் கூட முடியவில்லை. எல்லா நேரமும் இந்த இலவச பப்ளிசிட்டி கை கொடுக்காது!
உலகத் தரமான சினிமா என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், ஹரிதாஸ் என்ற ஒரு சிம்பிளான தமிழ்ப் படம் நாளை வருகிறது…. அதைப் பாருங்கள். விஸ்வரூபம் பார்த்து புல்லரித்ததற்காக நிச்சயம் வெட்கப்படுவார்கள்!!
இந்தப் படத்தின் வசூல் குறித்து…
தமிழகத்தில் படம் வெளியான அடுத்த நாளே விஸ்வரூபம் ரூ 100 கோடியைத் தொட்டுவிட்டது… 120 கோடியை அள்ளிவிட்டது என்றெல்லாம் கதைகள் கரை புரண்டன.
ஒரு வாரம் கழித்து இந்தப் படம் ரூ 100 கோடிக்கும் மேல் குவித்துவிட்டதாக கமல்ஹாஸனும் அறிவித்திருந்தார். அவரைப் பொருத்தவரை லாபம் என்பது அடுத்த படம் ஓடும்போதுதான். அதாவது விஸ்வரூபம் இரண்டாம் பாகம். காரணம், அவர் காட்டிய ரூ 100 கோடி பட்ஜெட் என்பது விஸ்வரூபம் முதல் பாகத்துக்கு மட்டுமல்ல. இரண்டாம் பாகம் வெளியாகி ஓடும் போது, வருகிற எல்லாமே அவருக்கு லாபம்தான். ஆனால் அதற்கு என்னென்ன கணக்கு காட்டப் போகிறாரோ…
ஆனால் படத்தை ஓட வைக்க இரண்டாம் பாகத்தில் அவர் கையிலெடுத்திருப்பது, கோவை குண்டுவெடிப்பு சம்பவமாம். அவர் கையிலெடுத்திருக்கும் குண்டு அவரை நோக்கித் திரும்பாமலிருந்தால் சரி!
எந்திரனை முந்திவிட்டதா?
இந்தப் படத்தின் வசூல் எந்திரனை முந்திவிட்டதா என்றும் பலர் கேட்டு வருகின்றனர். எந்திரன் வசூல் முறியடிக்கப்பட முடியாதது அல்ல. ஆனால் அதை நிச்சயம் ஒரு கமல் படம் செய்ய முடியாது. இன்னொரு ரஜினி படம் வேண்டுமானால் சாதிக்கலாம். இப்போதைக்கு எந்திரன் வசூலில் நான்கில் ஒரு பங்குதான் விஸ்வரூபம் சாதித்திருக்கிறது. அதுகூட அவர்களாவே சொல்லிக் கொள்வதுதான். ஆதாரப்பூர்வமானதில்லை!
ஒரு வேடிக்கை பாருங்கள்… சிவாஜியை தசாவதாரம் மிஞ்சியதாகச் சொன்னார்கள். வசூல் ரூ 250 கோடி என்றார்கள். அப்படிப் பார்த்தால், கமல் தன் விஸ்வரூபம், தசாவதாரத்தை மிஞ்சியது என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர்களே ஒரு விஷயத்தை தங்களை மறந்து சொல்லிவிட்டார்கள்… எந்திரன், சிவாஜிக்குப் பிறகு ரூ 100 கோடியைத் தாண்டிய படம் விஸ்வரூபம் என்று. அப்படியெனில் தசாவதார வசூல் பொய்யாகிவிட்டதல்லவா..!
அதே நேரம்.. விஸ்வரூபத்தின் வசூல் விபரங்களை இனி விரிவாக சொல்வார்களா என்றும் தெரியவில்லை. காரணம், அதில் அத்தனை குழப்பங்கள் உள்ளன. பங்காளிகள் நிறைய பேர் காத்திருக்கிறார்கள். எப்படியோ… இனி வீடு போகப் போகிறதென்று ஓவர் ஆக்ட் செய்ய வேண்டியதில்லை!
நிச்சயம் விஸ்வரூபம் தப்பித்ததற்கு கமல் நன்றி சொல்ல வேண்டியது, இஸ்லாமிய அமைப்புகளுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், வரிசையாக வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறிய திரையுலகினருக்கும்… முக்கியமாக எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதல் நபராய் ஆதரவுக் குரல் எழுப்பி, பிரச்சினை தீர பெருமுயற்சி எடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும்தான்!
இந்த முயற்சிகள், பரபரப்புகள் இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் இந்தப் படம் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கும் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. காரணம், விஸ்வரூபம் கிட்டத்தட்ட 8 மாதங்கள் வரை வியாபாரமாகாமல் இருந்த படம். இதன் ஆடியோ வெளியீட்டுத் தேதி அறிவித்த பிறகுகூட, அதன் உரிமையை யாரும் வாங்க முன்வரவில்லை என்ற கவலையில் கமல் உடல்நலமின்றிப் போனதெல்லாம் செய்திகளாக வந்தது நினைவிருக்கலாம்.
உண்மையான பட்ஜெட் என்ன?
கமல் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி என்றது தவறான தகவல். காரணம், இன்னொரு படத்தையும் இந்த பட்ஜெட்டிலேயே அவர் எடுத்து வைத்துவிட்டார். அமெரிக்காவில் செட்டிலாகும் முன் அவர் அதை வெளியிட்டுவிட்டுத்தான் செல்வார். அதில் இஸ்லாமியர்கள் ஆட்சேபிக்கும் அளவுக்கு ஏராளமான காட்சிகளும் இருக்கும் என்பதால், ‘இங்கு மதச் சார்பின்மை இல்லை.. நான் போகிறேன் அமெரிக்காவுக்கு,’ என்று அறிக்கை விடவும் அவர் தயாராகவே இருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் ஒரு நேர்மையற்ற வர்த்தகராக தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.
கடைசியாக அந்த டிடிஎச் மேட்டர்…
இந்த வாரமே பெரும்பாலான அரங்குகளில் தூக்கப்பட்டுவிட்டது விஸ்வரூபம். ஆதிபகவன் படம் வெளியாகும் நாளன்று 90 சதவீத அரங்குகளிலிருந்து இந்தப் படம் வெளியேறுகிறது. எனவே அடுத்த வாரம் டிடிஎச் ஒளிபரப்பு என கமல் அறிவிக்கக் கூடும் என்கிறார்கள். ஒரு படத்தில் கவுண்டர் சொல்வதுபோல… இனி வந்தா என்ன.. வராட்டி போனாதான் என்ன!!
குறிப்பு: பல முறை யோசித்து, பலரை விசாரித்த பிறகே இந்தக் கட்டுரையைத் தந்துள்ளேன். ‘நீங்கள் ரஜினி ரசிகர்… இப்படித்தான் எழுதுவீர்கள்’ என்று சிலர் நினைக்கக் கூடும். அது இயல்புதான். ஆனால் சர்வநிச்சயமாக… இங்கே நான் தந்துள்ள அனைத்து விவரங்களுமே உண்மையானவை என்பதை, அந்த சிலர் ‘மூ’ வெளியாகும் தருணத்திலாவது புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்!
-வினோ
ஜெயலலிதா – வைகோ சந்திப்பு எதேச்சையானதல்ல… ஆனால் நல்லது!
February 20, 2013 by The Editor
Filed under Nation, Politics, இன்றைய சூடான அலசல்
ஜெயலலிதா – வைகோ சந்திப்பு எதேச்சையானதல்ல… ஆனால் நல்லது!
கடந்த இரு தினங்களாக நடைபயணத்திலிருந்த வைகோவை முதல்வர் ஜெயலலிதா திடீரென வழியில் சந்தித்தது குறித்த செய்திகளும், அதுகுறித்த மோசமான கமெண்ட்களையும் பார்த்து வருகிறேன்.
முதலில் இது ஒரு திடீர் அல்லது எதிர்ப்பாராத சந்திப்பு என்பதே தவறு. காரணம், சந்தித்தவர் மாநிலத்தின் முதல்வர். அவரது வாகனம் செல்லும் பாதையில் நூறு மீட்டருக்கு ஒரு போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கிளம்பும் முன்பே வழியில் என்னென்ன சமாச்சாரங்கள் நடக்கின்றன என்பதையெல்லாம் போலீசார் சொல்லிவிடுவார்கள். இந்த சந்திப்பு பல டிவி சேனல்களுக்கு வேறு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது!
எனவே வைகோ நடைபயணத்தில் இருப்பது தெரிந்துதான் முதல்வர் அந்த நேரத்தில் தன் வாகன பரிவாரங்களுடன் வந்திருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் கூட்டணியிலிருந்து பிணக்குடன் வைகோ வெளியேறினாலும், கடந்த இரு ஆண்டுகளாக அவர் முதல்வரை கடுமையாக விமர்சித்ததில்லை. கண்ணியமாகவே பேசி வந்திருக்கிறார். அவரது அதிகபட்ச விமர்சனம், ‘ஜெயலலிதா மாறவில்லை’ என்பதுதான். மற்றபடி அரசின் முடிவுகளை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார். ஆர்ப்பாட்டங்கள் நடத்தியிருக்கிறார். எனவே முதல்வருக்கு வைகோ மீது ஆத்திரம் வர காரணங்கள் ஏதுமில்லை.
தனக்கு எந்த வகையிலும் விரோதமாக இல்லாத ஒரு அரசியல் தலைவர் வைகோ. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வேறு நெருங்குகிறது. வலுவான பிரச்சார பீரங்கி அவர். எனவே உறவை இணக்கமாக வைத்துக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா விரும்பினாலும் ஆச்சர்யமோ தவறோ இல்லையே!
தன் காரை விட்டிறங்கிய முதல்வர், வைகோவுடன் பேசியது (வைகோவே சொன்னது..)
ஜெயலலிதா: நன்றாக இருக்கிறீர்களா மிஸ்டர் வைகோ?
வைகோ: ஆமாம்மா, நன்றாக இருக்கிறேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
ஜெயலலிதா: ஆமாம்… எங்க ஊருக்கு அல்லவா வந்து இருக்கிறீர்கள்?
வைகோ: ஆமாம் அம்மா.
ஜெயலலிதா: சாப்பிட்டுவிட்டீர்களா?
வைகோ: இல்லை. இனிமேல்தான் சாப்பிட வேண்டும்.
ஜெயலலிதா: ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கிறீர்கள். உங்களது கோரிக்கை என்ன?
வைகோ: பூரண மதுவிலக்குதான் எங்கள் கோரிக்கை.
ஜெயலலிதா: அம்மா, துணைவியார், பிள்ளைகளைக் கேட்டதாக சொல்லுங்கள்.. அவர்களை நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள்.
வைகோ: நன்றி. அம்மா உங்களுக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாண்டுகள் நலமோடு வெற்றிகரமாக வாழ வாழ்த்துகிறேன். 100 ஆண்டுகள் கடந்து வாழ வாழ்த்துகிறேன்!
ஜெயலலிதா: மிக்க நன்றி. போய் வருகிறேன்.
வைகோ: நாங்கள் நடந்து வருவதை பார்த்து காரை நிறுத்தி நலம் விசாரித்ததற்கு நன்றி அம்மா.
-இதுதான் அந்த உரையாடல்.
(வைகோ இடத்தில் முக ஸ்டாலின் இருந்திருந்தால் கூட, இந்த உரையாடல் இப்படித்தான் அமைந்திருக்கும்)
இன்னொரு விஷயம்… வைகோ எதற்காக நடக்கிறார் என்பதே ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? என்ற விமர்சனம்.
தெரியாமல் இருக்குமா… அப்படிக் கேட்பது ஒரு அடிப்படை நாகரீகம். இந்த சந்திப்பு குறித்து வைகோ கூறும்போது, “அரசியலில் வேறுபட்டிருந்தாலும், கூட்டணியில் இல்லாவிட்டாலும் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது நலம் விசாரிக்கிற உன்னதமான அரசியல் நாகரீகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்றைக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். அது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த சந்திப்பை அரசியல் ரீதியாக சிந்திப்பதே இந்த நாகரீகத்தை கொச்சைப்படுத்திவிடும்,” என்றார்.
மதுவிலக்கு கோரி கடந்த மூன்று மாதங்களாக வைகோ கடுமையான பிரச்சாரம் செய்துவருகிறார். இப்போது அவர் செய்வது இரண்டாம் கட்ட நடைப் பிரச்சாரம். வைகோவின் கோரிக்கையைக் கேட்ட ஜெயலலிதா, அதுபற்றி பதிலே கூறாமல், வேறு விஷயம் குறித்துப் பேசியிருக்கிறார்.
வைகோவின் கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ… அதிமுகவுடன் அவர் கூட்டணி சேரப் போகிறாரோ இல்லையோ… ஆனால் ஜெயலலிதா அவரை நடுவழியில் சந்தித்து நட்பு பாராட்டியிருப்பது… நல்ல அரசியல். இதை குதர்க்கமாகப் பார்ப்பதோ, வக்கிரமாக கமெண்ட் அடிப்பதோ.. இந்த நல்ல மாற்றத்தை விரும்பாத மனநிலையையே காட்டுகிறது!
இதற்காக ஜெயலலிதா மாறிவிட்டார்… அவரது ஆட்சி பொற்காலத்துக்கு திரும்பிவிட்டது என்றெல்லாம் நாம் சொல்ல வரவில்லை. இரண்டாண்டுகளை நெருங்கும் வேளையிலும் ஆட்சி என்பது இன்னும் சாபக்கேடாகத்தான் இருக்கிறது. அதில் ஆரோக்கிய மாற்றம் வருவது எந்நாளோ?
-விதுரன்
என் 30 ஆண்டு அரசியலில் இன்றுதான் மிக மகிழ்ச்சியான நாள்! – ஜெயலலிதா
February 20, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
கடந்த 30 ஆண்டு காலத்தில் இன்றுதான் மிக மகிழ்ச்சியான நாள்! – ஜெயலலிதா
சென்னை: காவிரி் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு இன்று கெஜட்டில் (அரசிதழ்) வெளியிட்ட இந்த நாள் தான், எனது 30 வருட அரசியல் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்த இடைக்கால உத்தரவை மத்திய அரசு இன்று அரசிதழில் வெளியிட்டுவிட்டது. நதிநீர்ப் பங்கீடு குறித்து கர்நாடகத்துடன் உள்ள பெரும் பிரச்சினை தீர இந்த உத்தரவு உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நிருபர்களைச் சந்தித்துப் பேசினார் ஜெயலலிதா.
அவர் கூறியதாவது:
இன்று காவிரி இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இது கடந்த 22 ஆண்டு காலமாக நான் இடைவிடாது நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இந்தச் செய்தி எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது.
நான் 1991ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதன்முதலாக முதல்வராக பொறுப்பேற்றேன். 21ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அப்போதே அதை கர்நாடகம் எதிர்த்தது. அந்த ஆணையை செயல்படுத்த முடியாதவாறும், செயலற்றுப் போகும் வகையிலும் சட்டம் ஒன்றை இயற்றியது.
கெஜட்டில்…
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன். இதையடுத்து அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவாவை விசாரிக்க ஒரு நடுவர் மன்றத்தை அமைக்கும்போது, அந்த நடுவர் மன்றம் தரும் தீர்ப்பை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமானால் அதை மத்திய அரசு அதை கெஜட்டில் வெளியிட வேண்டும். ஆனால், அதை அப்போது இருந்த மத்திய அரசாங்கம் கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் பிறகு என்னுடைய முயற்சியின் காரணமாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைவிடாது எடுத்த முயற்சியின் விளைவாக 91ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் அதையும் கர்நாடக அரசு மதிக்காமல் தொடர்ந்து காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை திறந்து விட மறுத்து வந்தது.
உண்ணாவிரதம்
இடைக்கால ஆணையை செயல்படுத்துவதற்கு மத்திய அரசும் ஏற்பாடு செய்யவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். நானும் சென்னை மெரினா கடற்கரையில் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். இதையடுத்து அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த சுக்லா சென்னைக்கு வந்து இடைக்காலத் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதைத் தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நான் அதை வாபஸ் பெற்றேன். ஆனாலும் காவிரி நதிநீர் நமக்கு போதிய அளவு வழங்கப்படவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து 4 அணைகளும் நிரம்பிய பிறகு வரும் உபரி நீர் மட்டும்தான் தமிழகத்திற்கு கிடைக்கும் நிலை இருந்தது. இதற்காக பல்வேறு வழக்குகளை திரும்ப திரும்ப உச்ச நீதிமன்றத்தில் நாம் தொடுத்ததின் விளைவாக காவிரி நதி நீர் ஆணையமும் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன.
நான் முதல்வராகி வழக்குப் போட்ட பிறகுதான்…
இதுமட்டுமல்ல கடந்த 9 ஆண்டுகளாக காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை மத்திய அரசு கூட்டவில்லை. 2011ம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தியும் மத்திய அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. வேறு வழியின்றி ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு பிறகுதான் காவிரி நதி நீர் ஆணைய கூட்டமே கூட்டப்பட்டது.
அந்த ஆணையம் வழங்கிய உத்தரவையும் கர்நாடகம் மதிக்கவில்லை. நமக்கு உரிய தண்ணீரை தரவில்லை. பின்னர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும் வந்தது. இதையடுத்து இடைக்கால ஆணை தற்போது இல்லை, இறுதி ஆணையும் செயல்படவில்லை. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடகா கூறியது.
வழக்கு மேல் வழக்கு…
இதனால் ஆணையை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரினேன். ஆனால், மத்திய அரசு செவிமடுக்கவில்லை. இதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி மீண்டும் மீண்டும் போராடி இன்று வெற்றி பெற்றிருக்கிறேன்.
30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் மகத்தான நாள்
என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் கிடைத்த மகத்தான, பிரம்மாண்டமான வெற்றி இதுவே என்று கூறலாம்.
என்னுடைய 30 ஆண்டு கால அரசியல் பொது வாழ்வில் இன்று தான் சாதனை புரிந்ததாக நான் மன நிறைவடைகிறேன். நான் எவ்வளவோ சாதனைகள் செய்ததாக எத்தனையோ பேர் பாராட்டினாலும் அவற்றையெல்லாம் நான் சாதனையாக கருதவில்லை.
இதைத்தான் மகத்தான சாதனையாக கருதி நான் மனநிறைவு கொள்கிறேன். எனக்கும் எனது தலைமையிலான அரசுக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது.
இனி ஏமாற்ற முடியாது…
இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. இனி காலாகாலத்திற்கும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி காவிரி நீரை கர்நாடகா கட்டாயம் திறந்துவிட வேண்டும்.
மத்திய அரசிதழில் இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டிருப்பதால் இது நிச்சயம் கர்நாடகாவை கட்டுப்படுத்தும். அணைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது ஆண்டுதோறும் நமக்கு தேவையான அளவு தண்ணீரை அவர்கள் திறந்து விட வேண்டும்.
போதிய மழை இல்லாவிட்டால் இருக்கிற நீரை இந்த தீர்ப்பின் படி பகிர்ந்து கொள்வோம். இனிமேல் கர்நாடகம் தமிழகத்தை ஏமாற்ற முடியாது. தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
-என்வழி செய்திகள்
பாலச்சந்திரன் கொலை மிகப் பெரிய போர்க்குற்றம்… இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்! – முதல்வர்
February 20, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
பாலச்சந்திரனைக் கொன்றது மிகப் பெரிய போர்க்குற்றம்.. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்! – முதல்வர்

சென்னை: பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனைக் கொன்றது மிகப் பெரிய மன்னிக்க முடியாத போர்க்குற்றம். இதற்குக் காரணமான இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும், என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் முதல்வர். அப்போது அவர் கூறுகையில், “பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
அந்த 12 வயது குழந்தை எந்த குற்றமும் புரியவில்லை. பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கை ராணுவம் அவனை சுட்டுத் தள்ளியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் பல பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
இந்த ஆதாரங்களையும், இன்னும் பல தகவல்களையும் பார்க்கும்போது தற்போதுள்ள இலங்கை அரசின் தன்மை, மனப்பான்மை, எண்ணம் ஆகியவை முன்பு ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல், இன்று இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கிறது.
எனவே மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கவனத்தில் கொண்டு இவற்றிற்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இதுதவிர, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். வர்த்தக ரீதியான தடைகளையும் ஒத்த நாடுகளுடன் பேசி விதிக்க வேண்டும். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே சென்று வாழும் வரை, இலங்கையில் உள்ள சிங்கள பிரஜைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்கும் வரை… இந்த பொருளாதார தடை நீடிக்க வேண்டும்.
12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிகப்பெரிய போர்க்குற்றம். போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்,” என்றார்.
-என்வழி செய்திகள்
ஒரு டம்ளர் பால்… சிறுவனின் பதவி ஆசை… முதல்வர் சொன்ன நீதிக் கதைகள்!
February 15, 2013 by The Editor
Filed under election, election 2011

சென்னை: தனது பிறந்த நாளையொட்டி 65 ஜோடிகளுக்கு இன்று திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா இரண்டு கதைகளையும் சொல்லி மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா சொன்ன குட்டிக் கதைகள்:
பழிப்புக்கு இடமில்லாத வாழ்க்கையை இல்லறம் என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், அன்பும், அறமும், அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. அப்பொழுது தான் வாழ்க்கை இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.
ஓர் ஏழைச் சிறுவன் வீடு வீடாக சென்று துணிகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் அவனுக்கு கடும் பசி. அவன் கையில் ஐம்பது காசு மட்டுமே இருந்தது. இந்தக் காசை வைத்து எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.
யார்? என்று கேட்டவாறே, ஒரு இளம்பெண் கதவைத் திறந்து அந்தச் சிறுவனைப் பார்த்து என்ன வேண்டும்? என்று கேட்டாள். அந்தப் பெண்ணிடம் சாப்பாடு கேட்க மனமில்லாத அந்தச் சிறுவன், குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான்.
அந்தச் சிறுவனை ஏற, இறங்கப் பார்த்த அந்தப் பெண், அவன் கடும் பசியில் இருப்பதை உணர்ந்தாள். பின்னர், ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள்.
அந்தப் பாலை குடித்து முடித்த சிறுவன், நான் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்? என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.
அதற்கு அந்தப் பெண், நீ எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு ஒரு பொருளை அன்பாகக் கொடுக்கும் போது காசு வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்று கனிவுடன் கூறினாள்.
அதற்கு அந்தச் சிறுவன், என் அடி மனதிலிருந்து தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினான். அழகாக இருந்த அந்த இளம்பெண் திடீரென நோய்வாய்பட்டாள். அந்த ஊரில் அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்தனர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டார்.
அந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் விவரங்களையும் அந்தப் பெண்ணுக்கு வந்துள்ள நோயினையும் படித்து தெரிந்து கொண்டார். உடனடியாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார். அந்தப் பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் குணமடைந்தாள். மருத்துவ சிகிச்சைக்கான பில்லை கொண்டு வரும்படி மருத்துவமனையின் கணக்கரிடம் மருத்துவர் தெரிவித்தார். அவ்வாறே பில்லும் வந்தது. அந்த பில்லில் எதையோ எழுதி, பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பிவிட்டார் மருத்துவர்.
அந்த பில்லின் உறையைப் பார்த்ததுமே அந்தப் பெண்ணுக்கு நடுக்கம் வந்துவிட்டது. மருத்துவச் செலவு எவ்வளவு இருக்குமோ என்ற பயத்துடன் உரையை பிரித்தாள் அந்தப் பெண்.
அந்த பில்லில், ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்தப் பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது என்று எழுதப்பட்டிருந்தது. இது வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஆகும்.
இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது, அன்பின் சக்தியை, அன்பின் வலிமையை என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பினை, மணமக்களாகிய நீங்கள் உங்கள் மனைவியிடம், உங்கள் கணவரிடம், உங்கள் பெற்றோர்களிடம், உங்கள் உற்றார் உறவினர்களிடம் செலுத்தினால், உங்கள் வாழ்வில் நிச்சயம் அமைதியும், ஆனந்தமும் நிலவும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமல்ல. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் செய்கிற நல்ல காரியம், என்றாவது ஒரு நாள் நமக்கு நன்மையைத் தரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல், அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.
அன்பு செலுத்துவதால், துன்பம் வராது என்று சொல்ல முடியாது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் அந்த துன்பங்களை எதிர்கொள்ளக் கூடிய, மன வலிமை; சவால்களை சமாளிக்கக் கூடிய மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும்.
‘இந்த வயசில் ஏன் பதவி ஆசை?’
மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும் என்றார் மகாகவி பாரதி.
மன உறுதி உடையவர்களால் தான் நினைத்ததை நினைத்தபடி அடைய முடிகிறது. மன உறுதியுடையவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை; மன உறுதி உடையவர்களால் தான் பிறருக்கு உதவ முடிகிறது. மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கி விடுகிறது. இதனை மனதில் பதிய வைத்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் மேற்கொண்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
மன உறுதி என்றவுடன், எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.
அமெரிக்காவில், ஒரு தேவாலயத்தில், பாதிரியார் ஒருவர் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி, நீண்ட உரையாற்றினார். அந்த உரை முடிந்தவுடன், “யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். அனைவரும் கையை உயர்த்தினர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் உயர்த்தவில்லை.
உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனிடம், நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? உனக்கு நரகம் செல்லத் தான் விருப்பமா? என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை, நரகத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன் என்றான்.
உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனைப் பார்த்து, இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா? என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன், இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கொடுமையாக நடத்துகின்றனர். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதியானால் தான் முடியும் என்று அமைதியாக கூறினான்.
அந்தச் சிறுவன் தான், பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கன்.
சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவர்களைப் போன்று, நீங்கள் மன உறுதியுடன், ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்பது போல், தனி மனிதன் உயர்ந்தால், வீடு உயரும்; வீடு உயர்ந்தால், ஊர் உயரும்; ஊர் உயர்ந்தால், தமிழ்நாடு உயரும்; தமிழ்நாடு உயர்ந்தால், பாரத தேசம் உயரும் என்பதை மனதில் வைத்து, இல்லற வாழ்க்கையில் இன்று அடியெடுத்து வைத்துள்ள மணமக்களாகிய நீங்கள் அன்புடனும், அதே சமயத்தில் குறிக்கோளுடனும் செயல்பட வேண்டும். அந்தக் குறிக்கோள் உங்கள் இல்லத்துடன் நிற்காமல், மாநிலம் முழுவதும் விரிந்து பரவ வேண்டும்.
தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கவும்; காவேரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறாமல் செழிப்புடன் இருக்கவும்; தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும்; நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமென்றால், மத்தியில் நமது குரல், தமிழர்களின் வலுவான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கக் கூடிய, நாம் சொன்னால் கேட்கக்கூடிய, மத்திய அரசை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நாளை நமதே நாற்பதும் நமதே என்ற இலக்கினை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன், வருகின்ற மக்களவைத் தேர்தலில் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக்கொண்டு,
கலையாத கல்வி, குறையாத வயது, கபடில்லா நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, பிணியில்லா உடல், சலிப்பில்லா மனம், அன்பான வாழ்க்கைத் துணை, தவறாத மக்கட்பேறு, குறையாத புகழ், வார்த்தை தவறாத நேர்மை, தடைகள் வாரா கொடை, தொலையாத செல்வம், கோணாத கோல், துன்பம் இல்லாத வாழ்க்கை, இறைவனின் அருள் ஆகிய பதினாறு செல்வங்களையும் பெற்று; அன்பினால் அரவணைத்துப், பண்பினால் பரவசப்படுத்தி, மன உறுதியுடன் சவால்களை எதிர்கொண்டு, இணை பிரியாமல் இன்பம் எய்தி, பெற்றோர், சுற்றத்தார் நலம் காத்து, பல்லாண்டு வாழ்க! வாழ்க! என மனதார வாழ்த்தி விடை பெறுகிறேன்,” என்றார் ஜெயலலிதா.
-என்வழி செய்திகள்
விஸ்வரூபம் விவகாரம் – கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!
February 8, 2013 by The Editor
Filed under election, election 2011, General
விஸ்வரூபம் விவகாரம் – கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!
சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் திமுக தலைவர் மு கருணாநிதி சொன்ன கருத்துக்களுக்காக அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த 31-ந்தேதி முரசொலி நாளிதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’ என்ற கடிதத்தில் விஸ்வரூபம் படம் சம்பந்தப்பட்ட அரசின் நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
அதில் விக்ரம் பட வெளியீட்டின் போது கமல் குறித்து அன்றைய முதல்வர் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியதாக கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.
இதனை முதல்வர் ஜெயலலிதா மறுத்தார். ஆனால் கருணாநிதியோ தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கருணாநிதியின் கடிதம் மற்றும் கருத்து முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி அவரது சார்பில் சென்னை நகர முதன்மை அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபத்தை வைத்து பணம் சம்பாதித்து காலத்தை தள்ள வேண்டிய நிலையிலா ஜெயா டிவி இருக்கிறது?
January 31, 2013 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics
விஸ்வரூபத்தை வைத்து பணம் சம்பாதித்து காலத்தை தள்ள வேண்டிய நிலையிலா ஜெயா டிவி இருக்கிறது?
சென்னை: ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் விற்க முன்வராததால்தான் நான் படத்தைத் தடை செய்தேன் என்பது அபத்தமான குறறச்சாட்டு. ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயா டிவிக்கு படத்தின் உரிமையை விற்காததுதான் இத்தனைப் பிரச்சினைக்கும் காரணம் என்கிறார்களே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, “விஸ்வரூபம் விவகாரத்தில் என்னைத் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். நான் ஒரு தனியார் டிவிக்கு ஆதரவாக,அதாவது ஜெயா டிவிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள்.
ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயா டிவியின் நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. அது அதிமுகவின் ஆதரவு டிவி, அவ்வளவுதான்.
ஜெயா டிவி நிறுவனத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிலையில் படத்தை அடிமாட்டு விலைக்கு ஜெயா டிவிக்கு விற்காகததால்தான் நான் கோபமடைந்து தடை செய்ததாக கூறுவது அபத்தானது, தவறானது.
இப்படி என்னை ஜெயா டிவியுடன் இணைத்துப் புகார் கூறிப் பேசியவர்கள் மீதும், அதை செய்தியாக வெளியிட்டவர்கள் மீதும் நான் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்,” என்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்த பதிலில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை விட, இதே போல கலைஞர் டிவி குறித்த கேள்விக்கு கருணாநிதி முன்பு கூறிய பதிலை நினைவு கூற வேண்டும்.
கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அதில் பங்குதாரர் அல்ல என்று பதிலளித்தவர்தான் கருணாநிதி.
இந்த கேள்விக்கு சக நிருபர் அடித்த கமெண்ட்தான் ஹைலைட்..
“விஸ்வரூபத்தை வைத்து பணம் சம்பாதித்து காலத்தை தள்ள வேண்டிய நிலையிலா ஜெயா டிவி இருக்கிறது?”
-என்வழி செய்திகள்
நான் நினைச்சிருந்தா…. விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்.. அதற்கான அதிகாரம் உள்ளது! – ஜெ.
January 31, 2013 by The Editor
Filed under Celebrities, election, election 2011, Entertainment
நான் நினைச்சிருந்தா…. விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்.. அதற்கான அதிகாரம் உள்ளது! – ஜெ.

சென்னை: நான் நினைத்திருந்தால் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசின் சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1995ன் கீழ் நிரந்தரமாக தடை செய்திருக்க முடியும். ஆனால் எனக்கு எந்தவிதமான பகைமை உணர்வும் இல்லை என்பதால்தான் சிஆர்பிசி 144 சட்டத்தின் கீழ் தடை செய்தேன்,” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்.
இது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 என்று ஒரு சட்டம் உள்ளது. அச்சட்டத்தின் 7வது பிரிவி்ன் கீழ் மாநில அரசுக்கு ஒரு திரைப்படத்தைத் தடை செய்யும் முழு அதிகாரமும் உள்ளது. அந்த சட்டப் பிரிவின் கீழ்தான் டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்தது. தொடர்பான அப்பீல் மனுக்களைக் கூட தள்ளுபடி செய்தது.
எனது அரசு நினைத்திருந்தால், நான் நினைத்திருந்தால், விஸ்வரூபம் படத்தை நான் நேரடியாக அந்த சட்டப் பிரிவின் கீழ் தடை செய்திருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. சிஆர்பிசி 144 சட்டப் பிரிவின் கீழ்தான் தடை செய்தேன்.அதுவும் கூட 15 நாட்களுக்குத்தான்.
இதன் மூலம் நான் எந்தவிதமான உள்நோக்கத்துடன் நான் செயல்படவில்லை என்பதை உணர முடியும். இந்தப் படத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நானோ, எனது அரசோ செயல்படவில்லை என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளலாம்,” என்றார் முதல்வர்.
-என்வழி செய்திகள்
பிரச்சினையைத் தீர்க்க கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை – முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு
January 31, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
பிரச்சினையைத் தீர்க்க கமல் உண்மையான அக்கறை காட்டவில்லை – ஜெ. புகார்
சென்னை: விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது. ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இன்று அவர் அளித்த பேட்டியின் மூன்றாவது பகுதி:
விஸ்வரூபம் படம் தொடர்பாக 24 முஸ்லீம் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளரிடம் புகார்களைக் கூறி மனு அளித்தனர். இதையடுத்து அதை உள்துறைச் செயலாளருக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிவைத்தார். படத்தத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.
இருப்பினும் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் பேசியுள்ளோம், உங்களது ஆட்சபனைகளைப் பரிசீலித்து தேவையானதைச் செய்யுமாறு கூறியுள்ளோம் என்று அரசுத் தரப்பில் முஸ்லீம் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதே அதைக் கமல்ஹாசன் கவனித்து சரி செய்ய முன்வந்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் கமல்ஹாசன் என்ன செய்தார்…
தன்னை சந்தித்த முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் படம் போட்டுக்காட்ட ஒரு தேதி சொன்னார். அன்று அவர்கள் போனபோது பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வேறு தேதியில் படம் காட்டுவதாக கூறினார்கள். ஆனால் கூறியபடி படம் காட்டப்படவில்லை. இப்படியே ஒரு மாதம் போய்விட்டது.
இந்த நிலையில் டிடிஎச்சில் படம் திரையிடுவது தொடர்பாக கமல்ஹாசனுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் விளைவாக படம் ஜனவரி 25ம் தேதிக்கு ரிலீஸாவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜனவரி 21ம் தேதிதான் இஸ்லாமிய பிரதிநிதிகளுக்குப் படத்தைப் போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.
அதன் பின்னர் 22ம் தேதி இஸ்லாமியப் பிரதிநிதிகள் அமர்ந்து படம் குறித்துப் பேசினர். இறுதியில் படத்தைத் தடை செய்யக் கோருவது என்று முடிவெடுத்தனர். இதையடுத்து 23ம் தேதி உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பல்வேறு தொடர் போராட்டங்களையும் அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து 23ம்தேதி அரசு உயர் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தியேட்டர்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும், முற்றுகை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து அரசு சாதக, பாதக நிலையை அலசிப் பார்த்தது. ஒரு வேளை போராட்டம் நடந்து, வன்முறை மூண்டால் அதைக் கலைக்க, ஒடுக்க தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு என்று போக நேரிடும். அப்படி நடந்தால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களும், மீடியாக்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே, படத்தைத் தடை செய்வது என்ற முடிவை அரசு எடுத்தது. மேலும் கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை. எனவேதான் அரசு நடவடிக்கை எடுக்க நேரிட்டது.
இந்தத் தடையும் கூட 15 நாட்களுக்கு மட்டும்தான் விதிக்கப்பட்டது. மேலும் இந்தத் தடையை நீக்க உடனடியாக கமல்ஹாசன் எங்களை அணுகியிருக்கலாம். பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை. அப்படி வந்திருந்தால், முயன்றிருந்தால் அன்றே பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால் அரசுக்கு எதிராக அவர் கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதன் பிறகு நடந்தது உங்களுக்கேத் தெரியும்.
இந்தத் தடைக்கு நான்தான் காரணம் என்று கூறுவது அபத்தமானது. சிங்கப்பூரில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. கத்தாரில், ஐக்கியஅரபு எமிரேட்ஸில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.இதற்கு நான்தான் காரணமா…
கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. மைசூரில் தியேட்டர் தாக்கப்பட்டது. ஆந்திராவில், கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் நான்தான் காரணமா…
மேலும் 24 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்த கூட்டமைப்பை சிறிய குழு என்று கூறுகிறார்கள். அது எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும். தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பில் ஏழரை லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் சிறிய குழுவா…? என்று கேட்டார் ஜெயலலிதா.
100 கோடி முதலீடு என்பது ரிஸ்க் என்று தெரி்ந்துதானே செய்தாரே கமல்?
இந்தப் படம் வெளியாகாவிட்டால் கமலுக்கு ஏற்படும் நஷ்டம் குறித்த கேள்விக்கு, “கமல்ஹாசனுக்கு 60 வயதாகப் போகிறது. அதாவது தற்போது 58 வயதாகிறது. நல்ல முதிர்ச்சியுடன் கூடிய மனிதர் அவர். தனது விஸ்வரூபம் படத்திற்காக தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளார். மெகா பட்ஜெட்டி்ல படம் எடுத்தால் ரிஸ்க் என்பது தெரிந்தேதான் அதைச் செய்துள்ளார்.
சொத்துக்களை அவரேதான் அடமானம் வைத்துள்ளார். எல்லாவற்றையும் சுய நினைவுடன்தான் அவர் செய்துள்ளார். அப்படி இருக்கையில் அவரது பிரச்சினைகளுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும், பொறுப்பேற்க முடியும்.
எனக்கு திரைப் படங்களில் சுத்தமாக ஆர்வம் இல்லை. படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். கடந்த காலத்தில் என்னை சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படம் தொடர்பாக அழைப்பார்கள்.அதை ஏற்று நானும் போயுள்ளேன். ஆனால் எனக்கு இப்போது சினிமாவில் சுத்தமாக ஆர்வமே இல்லை. அதைப் புரிந்து கொண்டு யாரும் என்னை அழைப்பதில்லை. அப்படி இருக்கையில் எனக்கு விஸ்வரூபம் படம் குறித்து எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் நான் ஆர்வம் காட்டவில்லை,” என்றார் ஜெயலலிதா.
-என்வழி செய்திகள்
பிரதமரை தேர்வு செய்பவர் கமல்ஹாஸன் இல்லை என்பது எனக்குத் தெரியும்! – ஜெயலலிதா கிண்டல்!
January 31, 2013 by The Editor
Filed under election, election 2011, General, Nation, Politics
பிரதமரை தேர்வு செய்பவர் கமல்ஹாஸன் இல்லை என்பது எனக்குத் தெரியும்! – ஜெயலலிதா கிண்டல்!
சென்னை: வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும் என கமல் சொன்னதற்காக நான் ஏன் கோபித்துக் கொள்ளப் போகிறேன். இத்தனை வருடம் அரசியலில் இருக்கிறேன்… பிரதமரைத் தேர்ந்தெடுப்பவர் கமல்ஹாஸன் இல்லை என்பது எனக்குத் தெரியாதா?, என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும், விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக நான் கமலுக்கு எதிராக நடந்து கொண்டதாகவும், எம்.ஜி.ஆரிடம் கமல்ஹாசன் குறித்து கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரை அப்படியே விட்டு விட முடியாது. அவர் மீது உரிய வகையில் அவதூறு வழக்குகள் போடப்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியின் இன்னொரு பகுதி:
“நடிகர் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட துவேஷம், முன்பகை காரணமாக நான் இப்படி நடந்து கொண்டதாக ஒரு புகாரைக் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் பேசியதற்காக அவர் மீது நான் நடவடிக்கை எடுத்ததாக கருணநிதி கூறியுள்ளார்.
வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினால் நான் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசனுக்குப் பேச்சு சுதந்திரம் உள்ளது. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை நான் எப்படித் தடுக்க முடியும்.
நான் பலவருடமாக அரசியலில் இருக்கிறேன். அரசியல் அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது. பிரதமரைத் தேர்வு செய்வது கமல்ஹாஸனில்லை என்பதை நான் நன்றாக அறிவேன்.100 கோடி மக்கள் உள்ளனர். அவர்கள் வாக்களித்து ஒரு கட்சியை அல்லது கூட்டணியை ஆட்சிக்குக் கொண்டு வருகிறார்கள். பின்னர்தான் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். எனவே கமல் பேசியதால் நான் ஏன் கோபமடைய வேண்டும்?
ஆனால் கருணாநிதி கண்மூடித்தனமாக இப்படி புகார் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, 1980களில் நான் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்குப் புகார் கூறி கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். இது மிகவும் கேலிக்குரிய புகாராகும். பெரும் கோமாளித்தனமான புகாராகும்.
நான் எம்.ஜி.ஆரை தினசரி சந்திக்கும் வழக்கம் கொண்டவர். அப்போது நான் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தேன்,எம்.பியாக இருந்தேன். தினசரி கட்சிப் பணி தொடர்பாக எம்.ஜி.ஆரை சந்திப்பேன். பிற்பகலில் மாம்பலம் அலுவலகத்தில் சந்திப்போம், மணிக்கணக்கில் பேசுவோம், சேர்ந்து சாப்பிடுவோம். அரசியல், கட்சிப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவோம். அப்படி இருக்கையில் நான் ஏன் அவருக்குக் கடிதம் எழுத வேண்டும்.அதுவும் மிகச்சாதாரண விஷயத்திற்காக.
கருணாநிதி கூறியிருப்பது அருமையான புகார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் மீது சட்டப்படியான, அவதூறு வழக்குகள் தொடரப்படும்.
உண்மையில் நான் எதிரியாக கருத வேண்டிய நபர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கருணாநிதி மட்டுமே. கமல்ஹாசன் அல்ல.அவர் எனக்கு எதிரியும் அல்ல, போட்டியாளரும் அல்ல. கருணாநிதி குடும்பத்தினர் பல படங்களை எடுக்கின்றனர், வெளியிடுகின்றனர். நான் அதைத் தடுக்கவில்லையே. அப்படி இருக்கும்போது எனது எதிரி இல்லாத கமல்ஹாசன் மீது நான் ஏன் பகைமை காட்டப்போகிறேன்,” என்றார் ஜெயலலிதா.
-என்வழி செய்திகள்
விஸ்வரூபம் தடை.. தனிப்பட்ட விரோதமில்லை.. சட்டம் ஒழுங்கு முக்கியம்! – முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
January 31, 2013 by The Editor
Filed under Celebrities, election, election 2011, Entertainment, General
விஸ்வரூபம் தடை.. தனிப்பட்ட விரோதமில்லை.. சட்டம் ஒழுங்கு முக்கியம்! – முதல்வர் ஜெயலலிதா விளக்கம்
சென்னை: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய வேண்டி வந்தது. அது அரசின் கடமை. மற்றபடி கமல் மீது தனிப்பட்ட விரோதமில்லை, என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக பெரும் களேபரத்தைக் கிளப்பி வரும் விஸ்வரூபம் தடை குறித்து, முதல்வர் ஜெயலலிதா இன்று அளித்த பேட்டி:
“கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக டிவிகள், பத்திரிக்கைகள், இணையதளங்களில் காட்டுக்கத்தலாக இருக்கிறது.என்னைப் பறறியும், எனது அரசைப் பற்றியும் இரக்கமே இல்லாமல் குற்றச்சாட்டுக்கள், புகார்களை சுமத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். இப்பட விவகாரம் தொடர்பான அனைத்து தவறான கருத்துக்களையும் மறுக்க வேண்டியது அவசியம் என்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு.
இந்தப் படத்தை அரசு தடை செய்திருக்கக் கூடாது என்பது முதல் குற்றச்சாட்டு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒரு புகார். பலருக்கு சட்டம் ஒழுங்கை அரசு எப்படி பாதுகாக்கிறது என்பதே புரிவதில்லை. அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரிவதில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிப்போர் அரசின் சிரமங்கள், நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து புரிந்து கொள்வதே இல்லை.
ஒரு முதல்வர் என்ற வகையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான் எனது முதல் முன்னுரிமையாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமையாகும். மக்கள் அமைதியாக, சுமூகமான முறையில், இணக்கமான முறையில் தினசரி வாழ்க்கையை நடத்த வேண்டியது அவசியமாகும். அதை உறுதி செய்ய வேண்டியது எனது கடமையாகும்.
விஸ்வரூபம் படத்தை 525 தியேட்டர்களில் வெளியிடுவதாக கூறியிருந்தனர். ஆனால் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று 24 முஸ்லீம் அமைப்புகள், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் ஆகியவை சார்பில் அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. உள்துறைச் செயலாளரிடம்இதைக் கொடுத்னர். அவர்களின் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டங்களையும் அறிவித்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவானது.
சட்டம் ஒழுங்குசீர்குலைந்து, வன்முறை மூண்டால் அதை காவல்துறையினரால் சமாளிக்க முடியுமா என்பதை அரசு பரிசீலித்தது. தமிழக காவல்துறையின் மொத்த காவலர் பணியிடம் 1,13,780 பேராகும். இதில் காலியிடம் 21,911 ஆகும். எனவே இருப்பது 91,807 பேர்தான். இதில் கோர்ட் பணி, ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குப் போன காவலர்களைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமிருப்பது வெறும் 9226 பேர்தான்.
ஆனால் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் 525 தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது 56,440 போலீஸார் தேவைப்படுவார்கள். ஆனால் அது இயலாத காரியம். சில தியேட்டர்கள் என்றால் பரவாயில்லை, 525 தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு தருவது என்பது எப்படி முடியும். எனது அரசுக்கும், முதல்வராக எனக்கும், ஒருதிரைப்படத்தை விட மக்களின் சட்டம் ஒழுங்கு நிலைதான் முக்கியம் என்பதால் படத்தைத் தடை செய்யும் முடிவை அரசு எடுத்தது,” என்றார்.
ஆலோசனை…
முன்னதாக, விஸ்வரூபம் பிரச்சினை தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னை கோட்டையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், டி.ஜி.பி. ராமானுஜம், உள்துறை செயலாளர் ராஜகோபால், அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், உளவுத்துறை ஐ.ஜி. அம்ரேஷ் பூஜாரி மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-என்வழி செய்திகள்
ஜெ வெளிநடப்பு… ட்விட்டர் & பேஸ்புக் பதிவர்கள் ரியாக்ஷன்ஸ்!!
December 27, 2012 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics, சும்மா தமாசு
ஜெ வெளிநடப்பு… ட்விட்டர் & பேஸ்புக் ரியாக்ஷன்ஸ்!!
பிரதமர் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் பேச நேரம் போதவில்லை என்று வீராவேசமாக ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது குறித்து, சமூக வலைத் தளங்களில் மக்கள் என்ன மாதிரி கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதற்கு சில சாம்பிள்கள்…
Aneez Rahman: எனக்கு வச்ச பிரியாணில மட்டும் leg piece இல்லைங்கிற மாதிரி இருக்கு .. அம்மாவின் வெளிநடப்பு. (பேஸ்புக்)
களம் : தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முப்பதுக்கு மேற்பட்ட முதல்வர்கள் பேச வேண்டும் என்பதனால் ஒரு முதல்வர் பத்து நிமிடம் மேல பேசினால் மணியடித்து விடுவார்கள் . மீறியதால் மணியடித்து விட்டார்கள் என்று செல்வி ஜெயலலிதா வெளி நடப்பு !
#ஏம்மா …நீங்கமட்டுமே பேச ..மற்றவர்கள் மேசையை தட்டிக்கொண்டே இருக்க …..இதுஎன்ன தமிழ்நாடு சட்டமன்றமா ……???? by Velu Kanna
குழாயடிச் சண்டைக்குபேமஸ் ஆன ஒரு பெண்மணி இன்னைக்கும் பெரும் அண்டாவைத் தூக்கிட்டுப் போய் இடங்கொடுக்கலைன்னு சண்டை போட்டு வெறும் அண்டாவோடு .. by @அ. வெற்றிவேல்
#இந்த பத்து நிமிஷ மேட்டர் பத்து நாளைக்கு தாங்கும்…:P by கரு வைரா
#மாண்பு மிகு புரட்சி தலைவின்னு சொல்லலையாம் !
(என்னது ராஜ குலோதுங்குவை விட்டு விட்டானா ?!)by H Umar Farook
#மொழிக்கு பத்து நிமிடம் என்றால் கூட 100 நிமிடம் தந்திருக்க வேண்டாமா? by முகமது முகைதீன்.
#பத்து நிமிஷம் பத்தாதுன்னு சொல்றீங்களே….எப்பவுமே பேச முடியாத நம்ம பிரதமர நீங்க நினைச்சு பார்த்தீங்களா??by கா. விஜய் ஆனந்த்
# கிளம்பும் போது யாரும் சொல்லலயா…? அது நம்ம அமைச்சரவை கூட்டம் இல்ல… அது வேற கூட்டம்னு… ?.. by Saravana Kanth
#ஆடத் தெரியாதவனுக்கு ரோடு கோணயாம் ….நாமெல்லாம் கேனையாம் ……எங்கப்பத்தா சொன்ன பழமொழிங்க…..
by Kani Oviya
# இதைக்கூட “அம்மாவின் அதிரடி” என தினமலத்தில் நாளை போடுவானுங்க! “ஆமாம் ஆமாம்”னு இணைய போராளிகள் குதிப்பாங்க! by அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
#அப்புறம் என்ன….. தாஜ்மஹால சுத்தி பாத்துட்டு, பேட்டா காசு வாங்கிட்டு வந்து சேருங்க…..by Shiva Fx — with அ. வெற்றிவேல்.
Briliant Kurangu: சன்டக்காரனாக இருந்தாலும் நட்ப்பாக இருந்தால் எல்லாம் நல்லா நடக்கும் ஆனால் நம் முதல்வருக்கு அது கிடையாது (FB).
Chandra Sekaran: அசிங்கப்பட்டான் அட்டோகாரன் !!
Elamparuthi Pandian: ஒவ்வொரு வாட்டியும் பல்ப் வாங்குது ஐய்யோ அயோ இதை கேட்க நாதியே இல்லையா
Surya Born To Win: அம்மாவின் சட்டசபையில் என்ன வாழுதாம்??
Nambikai Raj: தமிழக முதல்வருக்கு ஈசியா பப்ளிசிட்டி தேடி கொடுத்துவிட்டது காங்கிரஸ்.இதுக்கு பதிலா அம்மாவை இன்னும் கொஞ்ச நேரம் பேச விட்டிருக்கலாம்
நன்றி: கருத்துக்கு சொந்தமானவர்கள் அனைவருக்கும்…
-என்வழி
ஜெ.வை அவமதிக்கவில்லை… அனைவருக்கும் சமமான வாய்ப்பு தரப்பட்டது! – மத்திய அரசு
December 27, 2012 by The Editor
Filed under General, Nation, Politics
டெல்லியில் ஜெ.வை அவமதிக்கவில்லை: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக பார்லிமெண்ட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில், “தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் தலா 10 நிமிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி செய்யப்பட்டது. மேலும் பல்வேறு அம்சங்களை விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில முதல்வர் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது. எனவே இதில் எப்படி அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்ல முடியும்?
இத்தகைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல. மரபுகளையும் மரியாதையையும் மீறியது இது. இதுவரை எந்த முதல்வரும் மத்திய அரசு மீது இப்படி குற்றம் சாட்டியதில்லை. ஜெயலலிதா கூறியவை எதுவும் உண்மையல்ல,” என்றார் அவர்.
-என்வழி செய்திகள்
முதல்வர்கள் மாநாட்டில் வெளிநடப்பு செய்து பப்ளிசிட்டி தேடிய ஜெ… தமிழகத்துக்கு மேலும் தலைகுனிவு!
December 27, 2012 by The Editor
Filed under Nation, Politics, இன்றைய சூடான அலசல்
முதல்வர்கள் மாநாட்டில் வெளிநடப்பு செய்து பப்ளிசிட்டி தேடிய ஜெ… தமிழகத்துக்கு மேலும் தலைகுனிவு!
டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து முதல்வர்களுக்கும் பேச 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மட்டும் அதிக நேரம் பேச முனைந்ததால், மணியடிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் வெளிநடப்பு செய்துள்ளார்.
எல்லா முதல்வர்களுக்கும் 10 நிமிடங்கள்தான்
டெல்லியில் 57-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஒரு நாள் மட்டுமே நடக்கும் கூட்டம் இது. 12வது ஐந்தாண்டுத் திட்டம், நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் தேவைகள் குறித்து பல சுற்று பேச ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இது. பிரதமர் மன்மோகன்சிங் இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் மாநில முதல்வர்கள் பேசினர்.
அனைத்து முதல்வர்களுக்கும் தங்கள் மாநிலத் தேவை குறித்து பொதுவாகப் பேச 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை கூட்டம் தொடங்கியபோதே அறிவித்துவிட்டனர்.
28 பக்க அறிக்கை
ஆனால் ஜெயலலிதா மட்டும் 28 பக்கம் கொண்ட ஒரு பெரிய அறிக்கையை எடுத்துப் போய் படிக்க ஆரம்பித்தார். அறிவிக்கப்பட்ட 10 நிமிடங்களில் ஜெயலலிதா வெறும் 10 பக்கத்தை மட்டுமே வாசித்து முடித்திருந்தார். மீதி உள்ளவற்றைப் படிக்க நிச்சயம் கூடுதலாக 20 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், அவரது பேச்சை முடித்துக் கொள்ளுமாறு மணி அடிக்கப்பட்டது.
இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஜெயலலிதா கோபத்துடன் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மத்திய அரசு கூட்டிய தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தில் பேசுவதற்ககு போதுமான நேரம் ஒதுக்கப்படாமல் மாநில முதலமைச்சர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். நான் பேசத் தொடங்கிய 10-வது நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டு என் பேச்சை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை அவமதிக்கும் செயல்,” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.
இவர் ஒருவருக்கு மட்டுமே 10 நிமிடம்… மற்றவர்களுக்கு கூடுதல் நேரம் என்று கொடுத்திருந்தால் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவாக விதிக்கப்பட்டதை ஜெ மீற முயன்றதுதான் உண்மை.
தவறான தகவல்கள்
தனது பேட்டியின் போது பல்வேறு தகவல்களை முன்னுக்குப் பின் சொல்லி, டெல்லி மீடியாக்கள் மத்தியில் கேலிக்குள்ளாகியிருக்கிறார் ஜெயலலிதா. இந்த ஆண்டு முதல்வர்கள் மாநாட்டை எப்படி ஏற்பாடு செய்திருந்தார்கள், அதில் என்னென்ன பேசவிருந்தார்கள் என்பதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாததல்ல.
கடந்த முறை நடந்த கூட்டத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்கப்பட்டதாக ஜெயலலிதாவே ஒப்புக் கொள்கிறார். ஏன்… இவரே மத்திய அரசை தாறுமாறாகத் திட்டி கடந்த முறை 25 நிமிடங்கள் பேசியிருந்தார்.
ஆனால் இந்த கூட்டத்தில் 10 நிமிடம்தான் பேச வேண்டும் என அனைத்து முதல்வர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதற்கேற்பவே தங்கள் உரைகளைத் தயாரித்து வந்திருந்தனர் அனைத்து முதல்வர்களும். யாருக்கும் ஒரு நொடி கூட கூடுதல் நேரம் தரப்படாத நிலை. ஆனால் ஜெயலலிதா மட்டும் அரைமணி நேரத்துக்கான உரையை தயாரித்துக் கொண்டு வந்ததற்கு மத்திய அரசு என்ன செய்யும்?
அப்படியே தன் நீண்ட கோரிக்கைப் பட்டியலை தர வேண்டுமென்றால் இதே கூட்டத்தில் பிரதமரிடம் ஒரு கோரிக்கை மனுவாகத் தந்திருக்க முடியுமே.. மற்ற மாநில முதல்வர்கள் அதைத்தானே செய்தார்கள்?
தாங்கள் சொல்ல விரும்புவதை 10 நிமிடங்களில் கூறிவிட்ட பிற மாநில முதல்வர்கள், தங்களின் தேவைகளை ஒரு மனுவாக பிரதமரிடம் இதே கூட்டத்தில் அளித்திருக்கிறார்கள். அதை வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று பிரதமர் கூறிவிடவில்லையே!
இந்தியா என்பது ஒரு கூட்டாட்சி நாடு. கூட்டாட்சி என்பதால் ஜெயலலிதா போன்ற மாநில முதல்வர்கள் தங்களை மகாராணிகளாக நினைத்துக் கொள்வதன் விளைவுதான் இப்படி தேவையற்ற ஈகோ மோதல்களில் அவர்களை ஈடுபட வைக்கிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்று வந்துவிட்ட பிறகு, சராசரி அரசியல்வாதிக்குரிய குணங்களை ஜெயலலிதா போன்றவர்கள் விட்டுத் தொலைக்க வேண்டும். மத்திய அரசு என்பது ஏதோ அண்டை நாட்டு அரசல்ல. அங்கே தமிழகத்தின் பிரதிநிதியாகப் போய் பேசும்போது சண்டை போட வேண்டும் என்று ஜெயலலிதா புரிந்து கொண்டதற்கு யார் என்ன செய்ய முடியும்?
தாறுமாறான விலையேற்றம், வரிகளை இஷ்டத்துக்கும் உயர்த்துவது, மின்வெட்டு பிரச்சினையை சரிசெய்ய எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் அதிலும் அரசியல் செய்வது என மக்களுக்கு எதிரான நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் ஜெயலலிதா, அதையெல்லாம் மறைக்கும் வகையில் டெல்லியில் சலசலப்பைக் கிளப்பி, ‘நாங்கள் தமிழர்கள்… எங்களை மட்டும் ஒதுக்கப் பார்க்கிறீர்கள்’ என்று குரல் எழுப்பவதை என்னவென்று சொல்வது? இது எத்தனை பெரிய மலிவான அரசியல்? ஒரு மோசமான சினிமாவை ஓட்ட இன உணர்வைக் கிளப்பிவிடும் மூன்றாம்தர சினிமாக்காரரின் வேலையல்லவா!
சில மாதங்களுக்கு முன் நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்திலும் கூட ஜெயலலிதா இதே போல சண்டைக் கோழியாய் டெல்லியில் பேட்டி கொடுக்க, அது மிக மோசமான விமர்சனங்களைக் கிளப்பியது. தான் டெல்லிக்கு வரும்போதெல்லாம் தான் மட்டுமே பிரதானமாகத் தெரிய வேண்டும் என ஜெயலலிதா நினைக்கிறார் போலிருக்கிறது என்று எழுதியிருந்தன வட இந்தியப் பத்திரிகைகள்.
இந்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தை மத்திய அரசு அவமானப்படுத்தியிருக்கிறதா… அல்லது அனைத்து மாநிலங்களின் முன்பும் தமிழகத்தை ஜெயலலிதா அவமானத்துக்குள்ளாக்கியுள்ளாரா என்பது மக்களுக்குப் புரியாததல்ல!
-விதுரன்
ரஜினிக்கு ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் வாழ்த்து!
December 12, 2012 by The Editor
Filed under Celebrities, election, election 2011, Entertainment, General
ரஜினிக்கு ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் அபூர்வ பிறந்த தினம் 12.12.12.
இந்த நாளில் அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாடு வாழ் இந்திய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காலையிலேயே தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்த்துகளை ரஜினிக்கு தெரிவித்தார்.
கருணாநிதி
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், “சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை எனது வாழ்த்தினை தொலைப்பேசியில் தெரிவித்துக்கொண்டேன்,” என்றார்.
முக அழகிரி
மத்திய அமைச்சர் முக அழகிரி ரஜினிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார். சரித்திரப் புகழ்பெற்ற நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
முக ஸ்டாலின்
திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான முக ஸ்டாலின் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் ரஜினிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திருநாவுக்கரசர், குமரி அனந்தன் ஆகியோரும் ரஜினியை வாழ்த்தினர்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் ரஜினிக்கு இன்று காலை வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக தலைவர்கள் எல்கே அத்வானி, நிதின் கட்கரி, இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
-என்வழி ஸ்பெஷல்
இந்தக் கதையை முதல்வர் யாருக்கு சொல்கிறார் புரிகிறதா?
November 23, 2012 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics
உப்பு போட்ட பால்… பட்டப் பகலில் விளக்கு… – ஜெ சொன்ன கதை
நாமக்கல்: திருமணங்கள், கட்சிக் கூட்டங்கள், நலத்திட்ட உதவி விழாக்கள் என எங்கு போனாலும் ஒரு கதை சொல்வது முதல்வர் ஜெ வழக்கம். அந்த வகையில் அவர் இன்று சொன்ன ஒரு கதை:
இல்லற வாழ்வு என்பது இரு ஆன்மாக்களின், மனங்களின், உணர்வுகளின், முழுமையான இணைப்பு. இந்த இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டுமென்றால், கணவன் என்ன நினைக்கிறானோ அதை மனைவி ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனைவி என்ன நினைக்கிறாளோ அதை கணவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதை கபீர்தாசர் என்கிற ஒரு மிகப்பெரிய ஆன்மீகவாதியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன்.
ஒருநாள் கபீர்தாசர் இல்லத்தில் ஏகப்பட்ட பக்தர்கள். எல்லோரும் அவரிடம் ஆன்மீகச் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கபீர்தாசர்.
நண்பகல் 12 மணிக்கு எல்லோரும் போய்விட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கபீர்தாசர் கேட்டார். அதற்கு பதில் சொல்லத் தயங்கினார் அந்த மனிதர்.
உடனே கபீர்தாசர், உங்கள் முகத்தில் காணப்படுகிற அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுடைய இல்வாழ்க்கை இன்பமாக இல்லை என்று தோன்றுகிறது; அப்படித்தானே? என்று கேட்டார்.
அப்படித்தாங்க. என்னுடைய மனைவியும், நானும் சந்தோஷமாக குடும்பம் நடத்தவில்லை; எப்பொழுதும் சண்டைதான். நான் என்ன சொன்னாலும், அவள் கேட்பதில்லை. எதிர்த்து பேசுகிறாள். கோபப்படுகிறாள். ஆத்திரப்படுகிறாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை என்றார், அந்த மனிதர்.
உடனே கபீர்தாசர், இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. யோசனை செய்து பதில் சொல்கிறேன்”, என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர், ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார்.
நூல் கண்டில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தார். அப்போது, மனைவியை கூப்பிட்டு விளக்கை ஏற்றி எடுத்து வா என்று சொன்னார். அந்த அம்மையாரும் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்து அவர் பக்கத்திலே வைத்தார்.
இவ்வளவு வெளிச்சம் இருக்கும் போது, கபீர்தாசர் தான் விவரம் இல்லாமல் விளக்கு கொண்டு வரச் சொன்னால், அந்த அம்மையாரும் விளக்கு கொண்டு வருகிறாரே என்று நினைத்து, திகைத்துப் போனார் அந்த மனிதர்.
சிறிது நேரம் கழித்து, அந்த அம்மையார் இரண்டு டம்ளர்களில் பாலை எடுத்துக் கொண்டு வந்து, அவர்கள் முன்பு வைத்தார். பாலை குடிக்க ஆரம்பித்த அந்த மனிதரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், கபீர்தாசரின் மனைவி தவறுதலாக பாலில் சர்க்கரைக்கு பதிலாக, உப்பை போட்டிருந்தார்.
உடனே அந்த பக்தர், கபீர்தாசரைக் கவனித்தார். கபீர்தாசரோ, கிடுகிடுவென்று பாலை குடித்தார். பாலை குடித்து முடிக்கும் தருவாயில், அவரது மனைவி சமையல் கட்டிலிருந்து கொண்டே, பாலுக்கு சர்க்கரை சரியா இருக்கிறதா? என்று கேட்டார்.
இதற்கு கபீர்தாசர், சரியாக இருக்கிறது என்று சொன்னார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கபீர்தாசரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கினார். உடனே கபீர்தாசர், அந்த மனிதரைப் பார்த்து என்னவோ கேட்க வேண்டும் என்று கூறினாயே? என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர் ஒன்றும் கேட்க வேண்டாம் அய்யா. நண்பகலில் நீங்கள் விளக்கேற்றி வைக்கச் சொல்கிறீர்கள். உங்கள் மனைவியும் விளக்கேற்றி வைக்கிறார். உப்பு போட்ட பாலில் சர்க்கரை சரியாக இருக்கிறதா என்றால் சரியாக இருக்கிறது என்று நீங்கள் பதில் கூறுகிறீர்கள். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
அதாவது, கணவனை மாற்ற வேண்டும் என்று மனைவி நினைக்காமலும்; மனைவியை மாற்ற வேண்டும் என்று கணவன் நினைக்காமலும்; ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால், இல்லற வாழ்வு அமைதியாக, இனிமையாக, சொர்க்கம் போல் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது.
-நாமக்கல்லைச் சேர்ந்த அமைச்சர் தங்கமணியின் மகன் திருமணத்தில் முதல்வர் ஜெயலலலிதா சொன்ன கதை இது.
யாருக்குப் புரிகிறதோ இல்லையோ… தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும்… ‘அம்மா’ காலில் நெஞ்சாண்கிடையாக விழத் தயாராகுங்கப்பா!!
-என்வழி செய்திகள்
முதல்வரைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துப் பெற்ற நடிகர் கமல்ஹாஸன்!
November 7, 2012 by The Editor
Filed under Celebrities, Entertainment, General
முதல்வரைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துப் பெற்ற நடிகர் கமல்ஹாஸன்!
சென்னை: தனது 58வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நடிகர் கமல்ஹாஸன்.
நடிகர் கமல்ஹாஸன் நவம்பர் 7-ம் தேதி புதன்கிழமை பிறந்த நாள் கொண்டாடினார். தென் மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்கள், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் என பல்வேறு வழிகளில் கமல் பிறந்த நாளைக் கொண்டாடினர்.
தனது பிறந்த நாளன்று அவர் விஸ்வரூபம் படத்தின் Aura 3 D ட்ரைலரை வெளியிட்டார். விழா முடிந்த கையோடு, தலைமைச் செயலகத்துக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
-என்வழி செய்திகள்
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறுத்துப் பேசும் ஜெயலலிதா! – கருணாநிதி!
November 5, 2012 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics
அளித்த வாக்குறுதிகளை மறுத்துப் பேசும் ஜெயலலிதா! – கருணாநிதி!
சென்னை: மின்வெட்டை மூன்றே மாதங்களில் சீர்ப்படுத்தி விடுவதாகக் கூறிய ஜெயலலிதா, இப்போது அதை மறுத்துப் பேசுகிறார், என்று குற்றம்சாட்டியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: டீசல் விலையை உயர்த்தியதால் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் கட்டணம் உயராது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்: ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக வரவு செலவுத் திட்டத்தை அவையிலே வைப்பதற்கு முன்பாகவே தமிழக மக்கள் தலையில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு வரியைச் சுமத்திவிட்டு; எல்லா மட்டத்திலும் வரி உயர்வு – கட்டண உயர்வு – பால் விலை உயர்வு – என்று பல உயர்வுகளை அறிவித்தார்.
தி.மு. க. ஆட்சியில் இருந்தபோது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த வில்லையா? உயர்த்திக் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் அரசு தாங்கிக் கொண்டு பொதுமக்கள் பாதித்து விடக் கூடாது என்பதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆவின் கட்டணத்தை அதிகமாக உயராமல் பார்த்துக் கொள்ளவில்லையா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அதை விடுத்து, பேருந்துக் கட்டணங்களை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் உயர்த்தி அறிவித்து விட்டார்.
தற்போது அதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில், பேருந்துக் கட்டணங்களை உயர்த்தப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதாதான், தற்போது மக்கள் அதை மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
கேள்வி: தமிழ்நாட்டின் மின் வெட்டு நிலைமையை மூன்றே மாதங்களில் சீர் செய்வேன் என்பது போன்ற எந்த வாக்குறுதியையும் தான் அளிக்கவில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் சொல்லியிருக்கிறாரே?
பதில்: இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசே அவ்வாறு முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்ததற்கான ஆதாரங்களை நிரூபித்தால் முதலமைச்சர் அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று கேட்டிருக்கிறார். நான் அவ்வாறு கடினமாகக் கேட்க விரும்பவில்லை.
28-10-2012 தேதிய என் ‘உடன்பிறப்பு’க் கடிதத்தில் ‘கடந்த ஆண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா தற்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம் என்றும், ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்றும் சொன்னார்.
மின் துறை அமைச்சர் இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் ‘இந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் மட்டும்தான் தமிழகம் மின் பற்றாக்குறையை அனுபவிக்கும். இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால் தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது’ என்று சொன்னார்.
முதலமைச்சர் அண்மையில் பேசும்போது, அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுவதும் தீர்க்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இவற்றில் எது தான் உண்மை?’ என்று ன் கேட்டிருந்தேன். ஆனால் இப்படி எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
ஒருவழியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது ‘தேமுதிக உடைப்பு வேலை’.. தாவத் தயார் நிலையில் இரு எம்எல்ஏக்கள்!
October 26, 2012 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics
ஒருவழியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது ‘தேமுதிக உடைப்பு வேலை’.. தாவத் தயார் நிலையில் இரு எம்எல்ஏக்கள்!
சென்னை: விஜயகாந்தின் தேமுதிகவைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தனர். ‘புரட்சித் தலைவி அம்மா’ சிறந்த ஆட்சியைத் தருவதாக பாராட்டு மழை பொழிந்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் 29 இடங்களை பிடித்த தே.மு.தி.க எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்.
ஆனால் இந்தக் கூட்டணி உருவான வேகத்திலேயே உடைந்துபோனது. சட்டமன்றத்தில் விஜயகாந்த் நாக்கை மடித்து, கையை உயர்த்திப் பேச, கடுப்பான முதல்வர் பதிலுக்கு காய்ச்சி எடுக்க… தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்துக்குப் போவதையே நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
இப்போது அரசையும் ஜெயலலிதா ஆட்சியையும் குறிப்பாக ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜயகாந்த்.
இந்நிலையில், மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம். எல்.ஏவான ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் ஆகியோர் இன்று தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னை கோட்டையில் சந்தித்தனர்.
அவர்கள் முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ‘புரட்சித் தலைவி அம்மா தலைமையில் தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக’க் கூறிப் பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசு தாராள நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
‘அப்படியே ஆகட்டும்’ என பெருமகிழ்ச்சியுடன் பதிலளித்த முதல்வர், அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தார்.
இந்த சந்திப்பின் மூலம், தேமுதிக உடைப்பு வேலை அமோகமாக ஆரம்பித்திருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும், அவசரமாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த்.
இன்னும் எட்டு எம்எல்ஏக்கள் வரை இதேபாணியில் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடும் என அதிமுக தரப்பு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்த நிற்கப் போவதாக அறிவித்துள்ள விஜயகாந்தை, தேர்தலுக்கு முன்பே ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்பது செங்கோட்டையன் அன்ட் கோவுக்கு முதல்வர் தந்துள்ள அசைன்மென்ட் என்கிறார்கள்.
இந்த புத்திசாலித்தனம், திட்டமிடலை ஆட்சித் திறனில் காட்டலாமே!
நிர்வாகக் கோளாறுகள், மோசமான முடிவுகள்… ஜெயலலிதாவுக்கே முதலிடம்!
October 25, 2012 by The Editor
Filed under Nation, Politics, இன்றைய சூடான அலசல்
நிர்வாகக் கோளாறுகள், மோசமான முடிவுகள்… ஜெயலலிதாவுக்கே முதலிடம்!
ஜெயலலிதாவைப் பற்றி பொதுவாக பலரும் கூறுவது, ‘அந்தம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டு… நிர்வாகத் திறமை மிக்கவர்.. போல்டானவர்!” என்பதுதான்.
இன்னொன்றும் சொல்வார்கள்… ‘ஜெயலலிதாவுக்கு வேறு எதிரி தேவையே இல்லை. அவருக்கு அவரேதான் எதிரி’!
இந்த முறையும் முதல் கூற்றைப் பொய்யாக்கி, இரண்டாவதை வெற்றிகரமாக மெய்யாக்கியிருக்கிறார், அதுவும் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில்!
கருணாநிதி குடும்ப அரசியல், மக்கள் மத்தியில் திமுக மீது ஏற்பட்ட கோபம்தான் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கியது என்பது கடந்த தேர்தல் குறித்து பொதுவாகக் கூறப்படும் கருத்து.
இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி, தன்னை அசைக்க முடியாத சக்தியாக மாற்றிக் கொள்வார் ஜெயலலிதா என்றுதான் கட்சி சார்பற்ற பலரும் எதிர்ப்பார்த்தனர். கணித்தனர்.
ஆனால் அது ரொம்ப தப்பான கணிப்பு என்பதை பதவியேற்ற முதல் மாதத்திலேயே நிரூபித்தார் ஜெயலலிதா.
‘இந்தப் பதவியைப் பயன்படுத்தி மக்களுக்கு நான் நல்லது செய்யப் போவதில்லை. கருணாநிதி காலத்து திட்டங்களை ஒழிப்பேன்… திமுகவினரை உள்ளே தள்ளுவேன்… வேறு எது எக்கேடு கெட்டுப் போனாலும் அக்கறையில்லை’, என்கிற ரீதியில்தான் அவரது செயல்கள் அமைந்தன.
சமச்சீர் கல்வி, தலைமைச் செயலக மாற்றம், உயிர்காக்கும் அவசர ஊர்தி 108ஐ முடக்கியது, காப்பீட்டைக் காலி செய்தது, அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிட்ட அபத்தம், 10000 சாலைப் பணியாளர்கள் வயிற்றிலடித்தது, டாஸ்மாக்தான் பணம் காய்க்கும் மரம் என்று முடிவு கட்டி ஏழைகளை மொத்தமாக உறிஞ்சும் வகையில் ஒன்றரை ஆண்டில் 8 முறை விலைகளைக் கூட்டியது, தாறுமாறான வரி உயர்வு, அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு கொடுமையான மின் கட்டண உயர்வு, பால் – பஸ் கட்டணங்களில் உயர்வு, நிலப் பதிவுக்கான கட்டண உயர்வு….ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல…
சரி இவ்வளவு வரிகள், கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகு, அரசிடமிருந்து நல்ல சேவையாவது கிடைத்ததா என்றால், முன்னிலும் பல மடங்கு மோசமாகப் போனது நிலைமை!
அதே குப்பைத் தொட்டி பேருந்துகள், செத்துப் போன மின்சாரம், மாசடைந்த பால், உழுதுப் போட்ட சாலைகள்… இதையெல்லாம் எடுத்துச் சொல்லும் பத்திரிகைகள் அல்லது செய்தியாளர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள்… (வாரத்துக்கு ஒரு முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து வளர்ச்சித் திட்டங்கள், அரசின் செயல்கள் குறித்து விளக்கிப் பேசுவதாகச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.. அதை நினைவுபடுத்தினாலும் கேஸ் போடுவார்கள் போலிருக்கிறது!!)
உற்பத்தித் துறையில் ஏகப்பட்ட பின்னடைவு. மின்சாரம் என்பதே அரிதான விஷயமாகிவிட்டது. அரசு தன் மெத்தனப் போக்கால் கிட்டத்தட்ட 2000 மெ வா மின்சாரம் வரை உற்பத்தி இழப்பைச் சந்திக்கிறது. 1900 மெ வா அளவுக்கு உற்பத்தி செய்யப்படாமலே உள்ளது. புதிய மின் திட்டங்கள் எதையும் இந்த அரசு போடவுமில்லை, அதில் அக்கறை காட்டவும் இல்லை. உடன்குடி மின்சாரத் திட்டம் கூட திமுக காலத்தில் போடப்பட்டு, செயல்படுத்தப்படாமல் இருந்ததுதான்.
தனது ஆட்சியின் 5வது ஆண்டில்கூட ஜெயலலிதா அரசால் தடையில்லாத மின்சாரத்தை வழங்க முடியுமா என்பது சந்தேகமே. இதுதான் இன்றைய யதார்த்த நிலை. உடனே அந்த அளவு கடந்த ஆட்சியில் நிலைமை மோசம் என சிலர் ஓங்கி ஜால்ரா அடிக்கக் கூடும். அதுவல்ல நிலைமை. மின்சார குளறுபடியை சீர்செய்ய இன்றுவரை ஒரு அடிகூட இந்த அரசு எடுத்து வைக்கவில்லை என்ற பேருண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மின்சார வாரியத்தின் கல்லாவை நிரப்புவதில் காட்டிய அக்கறையை, அந்த நிதியை வைத்து பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சக்தியைப் பெற்றுத் தருவதில் காட்டவே இல்லை. பெருந்தொழில்களுக்கு மட்டும் தடையற்ற மின்சாரம், அதுவும் குறைந்த விலையில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
இப்போதுதான் மின்சாரம் வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா. கவனிக்க… கடிதம். இதே கடிதத்தை கருணாநிதி எழுதினால் பாய்ந்து பிடுங்கியிருப்பார்கள் வெறும் காற்றில் சுழலும் அட்டைக் கத்திகள்!
அடுத்து சூரிய சக்தி மின்சாரம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுவும் அறிக்கை நிலையிலேயே இருக்குமா… அல்லது ஆட்சி முடியும் வரை பேப்பராக இருந்து குப்பைக்கு போகுமா தெரியவில்லை!
குறு மற்றும் சிறு தொழில்கள் 90 சதவீதம் முடங்கிவிட்டன. ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற நகரங்களில் இந்தத் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, சொல்லில் விளங்க வைக்க முடியாதது.
விவசாயத்தின் நிலையும் அதுதான். தமிழகத்தின் பெருமளவு விவசாயம் குழாய்ப் பாசனத்தை நம்பியுள்ள நிலையில், நள்ளிரவில் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே மும்முனை மின்சாரம் கிடைப்பதால், அடியோடு விவசாயத்தை மறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொள்ளைகள், கொலைகள், வழிப்பறிகள், பாலியல் கொடூரங்கள், சாதிக்கொரு நீதி காட்டும் போலீஸ், ஒடுக்கப்பட்டவர்களை குருவிகளாய் நினைத்து சுட்டுத் தள்ளும் ஆதிக்க மனோபாவம்… அனைத்தும் முன்னிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்களோ சுரணை மழுங்கிப் போய் எல்லாவற்றையும் அரசியல் விளையாட்டாய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டுள்ளனர்.
நான், எனது அரசு, எனது உத்தரவு, நான் கொடுத்த நிதி, எனது சாதனை, என்னால்தான் இது முடிந்தது.. என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொள்வது முதல்வரின் வழக்கம். மேலே நீங்கள் படித்த அத்தனை ‘சாதனைகளுக்கும்’ ஜெயலலிதா இதேபோல தாராள உரிமை கொண்டாடலாம்..!
-என்வழி
ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மைக்கு இன்னும் ஒரு சிறந்த உதாரணம்!!
October 5, 2012 by The Editor
Filed under Nation, Politics, இன்றைய சூடான அலசல்
ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மைக்கு இன்னும் ஒரு சிறந்த உதாரணம்!!
சென்னையில் பூந்தமல்லி சாலை வழியாக செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த அண்ணா வளைவைப் பார்ப்பவர்கள், முகம் சுளித்து திட்டாமல் போவது அரிதாகிவிட்டது.
ஜெயலலிதா மற்றும் அவர் தலைமையிலான நிர்வாகத்தின் திறமையின்மைக்கும் பொய்களுக்கும் சாட்சியமாக நிற்கிறது பலவீனமான அந்த அண்ணா வளைவும் அதைத் தாங்கிப் பிடிக்கும் ராட்சத கிரேன்களும்.
இந்தக் கிரேன்களுக்கு நாளொன்றுக்கு வாடகை மட்டும் ரூ 4 லட்சத்துக்கும் அதிகம். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்துவிட்டது. 1.20 கோடி ரூபாய்க்கு மேல் கிரேனுக்கு வாடகை மட்டுமே செலுத்தி வருகிறது தமிழக அரசு.
இந்தத் தூணை எம்ஜிஆர் அரசு அமைத்த போது அதற்கான மொத்த செலவே ரூ 8 லட்சம்தான்!
பூந்தமல்லி சாலை – அண்ணா நகர் நுழைவுப் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிர்க்க அமைக்கப்படும் மேம்பாலத்துக்காக இந்த வளைவை நீக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வளைவை பாதுகாப்பாக இரு தினங்களுக்குள் அகற்றிவிட மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து, வேலையை ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்கள் நினைத்ததுபோல அத்தனை சுலபமாக இருக்கவில்லை, வளைவை அகற்றுவது. டயமண்ட் கட்டர் கொண்டு அறுத்தாலும் முடியவில்லை. நாட்கள் இழுத்துக் கொண்டே போக, ராட்சத கிரேன்கள், ஏகப்பட்ட ஆட்கள் என குவிய ஆரம்பித்தன(ர்). விஷயம் மீடியாவில் சிரிப்பாய் சிரிக்க… அதுவரை இந்த விவகாரத்தில் கண்டும் காணாமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, திடீரென விழித்துக் கொண்டார்.
‘அண்ணா வளைவை அகற்றுவது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது’ என இந்த ஆண்டின் மிகப்பெரிய காமெடியை உதிர்த்து, ஏகப்பட்ட சோகத்திலிருக்கும் தமிழ்நாட்டு மக்களை சிரிக்க வைத்தார்.
அடுத்து, “இந்த வளைவை அகற்ற கடந்த திமுக ஆட்சியில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை எனக்குத் தெரியாமல் அப்படியே நிறைவேற்றப் பார்த்தனர் அதிகாரிகள். நல்ல வேளை இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. இனி வளைவை அகற்ற விடமாட்டேன். முன்பை விட உறுதியாக்கிவிட்டுத்தான் மறுவேலை,” என்று அடுத்த காமெடியை அவிழ்த்துவிட்டார்.
இப்போது அந்த வளைவை மீண்டும் உறுதியாக ஒட்ட வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதுவரை வளைவு விழுந்துவிடாமல் தாங்கிப் பிடிக்க பெரிய கிரேன்களை வாடகைக்கு எடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த கிரேன்களுக்கு ஒரு நாள் வாடைகை ரூ 4 லட்சம். மொத்தம் 30 நாட்களுக்கு மேலாக அந்த கிரேன்கள் நிற்கின்றன. இதுவரை ரூ 1.20 கோடியைத் தாண்டிவிட்டது வாடகை மட்டும்.
ஜெயலலிதா அதைப் பற்றி கவலையேபடவில்லை.
இந்த வளைவை அகற்ற யார் தீர்மானம் போட்டிருந்தாலும் பிரச்சினையில்லை. போக்குவரத்துக்கு அவசியம் என்றால் அதை இடித்து அகற்றுவதில் தவறே இல்லை. ஆரம்பத்தில் அப்படித்தான் அமைதி காத்தார் ஜெயலலிதா. இன்னொன்று அது எம்ஜிஆரால் கட்டப்பட்டது. அதை காலத்தை தாண்டிய நினைவுச் சின்னமாக காப்பாற்றும் அக்கறை கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்குமே கிடையாது என்பதே உண்மை.
எப்படி இருந்தாலும் மக்கள் வசதியைக் கருத்தில்கொண்டு இந்த மாதிரி வளைவுகளை இடித்தாலும் தவறில்லை. ஆனால் தொலைநோக்கு சிந்தனை கொஞ்சமும் இல்லாமல், வெறும் வாய்ஜாலம் காட்டி வரும் இந்த அரசும் சென்னை மாநகராட்சியும் வெட்டியாக மக்கள் பணத்தை சாலையில் இறைத்துக் கொண்டிருப்பதை யாராலும் மன்னிக்க முடியாது.
முன்பாவது பரவாயில்லை… நெரிசல் இருந்தாலும் தைரியமாக அந்த சாலை வழியாக போய் வர முடிந்தது. இப்போதோ, அந்த வளைவுக்கு பக்கத்தில் மாற்று சாலை போட்டிருக்கிறார்கள். இந்த இரு வளைவும் உள்ள பகுதி முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. வளைவில் அறுக்கப்பட்ட பகுதிகளை ஒட்ட வைத்தாலும் பலனிருக்குமா தெரியவில்லை.
ஜெயலலிதாவை நிர்வாகத் திறன் மிக்கவர், உறுதியான முடிவுகள் எடுப்பவர் (அப்படி ஒன்று அவரிடம் இல்லாவிட்டாலும்) என அடிக்கடி கோரஸாக துதி பாடி மகிழ்வது அவரது படித்த ரசிகர்களின் வழக்கம்.
பாவம் அந்த மகிழ்ச்சியில் லேட்டஸ்ட் வில்லங்கம் அண்ணா வளைவு…
வாழ்க அண்ணா, எம்ஜிஆர் நாமங்கள்!
-வினோ
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்: சி.வி.சண்முகம் பதவி பறிப்பு
October 3, 2012 by The Editor
Filed under General, Nation, Politics
சென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து சிவி சண்முகத்தை நீக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்தார் சி.வி.சண்முகம். அவருக்கு பதில் சட்டமன்ற அதிமுக கொறடாவாக இருந்த ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் நீதித்துறை வழங்கப்பட்டுள்ளது. ஊரக தொழில் துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு வணிகம் மற்றும் பத்திரப்பதிவு துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் வளர்மதிக்கு கூடுதல் பொறுப்பாக மதிய உணவுத் துறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரின் பதவியேற்பு விழா வருகிற 6-ந் தேதி கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. அப்போது, ப.மோகன் அமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி கவர்னர் ரோசையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிவி சண்முகத்தின் கட்சிப் பதவி இன்று காலைதான் பறிக்கப்பட்டது. மாலைக்குள் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டிருப்பது அவருக்கு இரட்டை அதிர்ச்சியைத் தந்துள்ளது.
சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா செய்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பை அரங்கேற்றியுள்ளார் ஜெயலலிதா.
-என்வழி செய்திகள்
என்னது, அண்ணா ஆர்ச்சை இடிச்சிட்டாங்களா… எனக்குத் தெரியாதே! – ஜெயலலிதா
September 10, 2012 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics
என்னது, அண்ணா வளைவை இடிச்சாங்களா… எனக்குத் தெரியாதே! – ஜெயலலிதா
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நினைவு வளைவை அகற்ற நான் உத்தரவிடவேயில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் பவள விழாவையொட்டி அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் கட்டப்பட்டது அண்ணா வளைவு. இதனை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த இரு வாரகாலமாக இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளில் பிரதான இடம்பிடித்து வருகின்றன.
ஆரம்பத்தில் இடிக்க முடிவு செய்து வேலையில் இறங்கியவர்களுக்கு, அந்த வளைவை அகற்றுவது பெரும் சிரமமாகிவிட்டது. மேலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பும் அதிகரித்தது. எனவே இப்போது அதனை மீண்டும் ஒட்டப் போவதாக அறிவித்துள்ளனர். இதனை திமுக தலைவர் கருணாநிதி கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.
இந்த நிலையில் தனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவரும், கபட நாடகங்களை நடத்துவதில் கைதேர்ந்தவருமான திமுக தலைவர் கருணாநிதி, “பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு” அகற்றும் பிரச்சினையில் நான் ஊரை ஏமாற்ற நினைப்பதாக அறிவித்து இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.
தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று நான் உத்தரவிட்டது குறித்து, “… அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவீதம் நடைபெற்றுள்ள நிலையில், முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்டநாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார்.
அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது, அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்த போது தோன்றவில்லையா?…” என்று வினவியிருக்கிறார்.
அதாவது சென்னையில் அண்ணா வளைவை அகற்ற முதலில் அனுமதி அளித்துவிட்டு, இடிப்புப் பணிகள் பாதியளவு முடிந்த பின்னர், இடிக்கக் கூடாது என நான் திடீர் என்று உத்தரவிட்டுள்ளதாக கருணாநிதி கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
2010ம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியின்போது தான் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் மூன்றாவது நிழற்சாலை சந்திப்பு ஆகியவற்றினை இணைக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க அனுமதிக்கப்பட்டது.
இதனையடுத்து 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல் இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மேம்பாலப் பணி குறித்தோ அல்லது அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்தோ என்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை. நான் எந்த விதமான உத்தரவையும் இது தொடர்பாக பிறப்பிக்கவில்லை.
அரசின் அனைத்து முடிவுகளும் முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவதில்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?. அரசின் அலுவல் விதிகளின்படி பல்வேறு மட்டங்களில் அரசு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது கருணாநிதிக்கு தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே, “அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது” என்று கூறியுள்ளாரா?
மேம்பாலம் அமைத்திட முந்தைய திமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டபோதே, அந்தப் பாலம் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு வழியாகத்தான் செல்லும் என்பதும், அதனை அகற்ற வேண்டும் என்பதும் கருணாநிதிக்கு தெரியாதா? ஒரு வேளை பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் வகையில் சென்னையின் அடையாளச் சின்னமாக அமைந்துள்ள இந்த அண்ணா வளைவை அகற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த மேம்பாலப் பணிக்கு தான் வழங்கிய உத்தரவு இன்று எனது முடிவால் தடைபட்டுவிட்டதே என்ற கோபத்தில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார் போலும்!

எது எப்படியோ, முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு எனது கவனத்திற்கு முன்பே கொண்டுவரப்பட்டு இருந்தால், அண்ணா வளைவினை இடிக்காமல் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிச்சயம் நான் உத்தரவிட்டு இருப்பேன்.
அண்ணா வளைவு அகற்றப்படுவது குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்தியின்மூலம்தான் நான் அறிந்து கொண்டேன். இந்தச் செய்தியை அறிந்தவுடன், சென்னை மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அண்ணா வளைவினை அகற்றும் பணியினை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். மேலும், அண்ணா வளைவை அகற்றாமல் மேம்பாலப் பணியினை நிறைவேற்றிட ஆய்வு செய்யுமாறும், அது குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்றும் நான் உத்தரவிட்டேன்.
அதன் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் விரிவான ஆய்வு நடத்தி ஈ.வெ.ரா. சாலையில் இருந்து அண்ணா நகர் நோக்கி செல்லும் மேம்பாலத்தை சிறிதளவு கிழக்குப் புறமாக மாற்றி அமைத்து மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தேன்.
எனது அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு’ அகற்றப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
எனது அரசின் இந்த நடவடிக்கை மூலம், சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் `பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு’ காக்கப்பட்டது என்ற மன நிம்மதி எங்களுக்கு உள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது தலைமையிலான அரசு மீதும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், இது போன்ற அவதூறுகளை, அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறாரா? அல்லது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டப்பட்டு, சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கும் பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு வளைவு அங்கு இருக்கக் கூடாது என்ற தனது தந்திர எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஆதங்கத்தில் கூடுதல் செலவு என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறாரா என்பதை கருணாநிதி தான் தெளிவுபடுத்த வேண்டும்,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசின் திட்டங்களை மாற்றியதே இல்லையா?
முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நிறைவேற்றுவதாக தனது அறிக்கையில் கூறியுள்ள ஜெயலலிதாதான், அண்ணா நூற்றாண்டுவிழா நூலகக் கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்க உத்தரவிட்டார். புதிய தலைமைச் செயலகத்தை முடக்கி வைத்தார். கருணாநிதி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சமச்சீர் கல்வி தொடங்கி பல்வேறு திட்டங்களை முடக்கவும் மாற்றவும் இவர் போட்ட உத்தரவின் மை கூட இன்னும் காயவில்லை. அவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னமும் உள்ளன என்பதெல்லாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளா மீடியா செய்திகளை கவனித்து வருபவர்களுக்கு நினைவிருக்கலாம்!
-என்வழி செய்திகள்
‘எதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே குறியாயிருந்தா மின்தட்டுப்பாடு எப்படி நீங்கும்…!’
September 8, 2012 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics
எதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே ஜெ. குறியாயிருந்தால்…: கருணாநிதி
சென்னை: எந்த எதிர்க்கட்சிக்காரன் மீது என்ன வழக்கு தொடுக்கலாம்; எந்தப் பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதிலேயே ஆட்சியினர் கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருந்தால் மின்தட்டுப்பாட்டை சரி செய்ய முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் எந்தப் பணியையும் நிறைவேற்றாமல் முடிந்துவிட்டதே?
பதில் : இதைவிட துக்ககரமானது வேறொன்றும் இருக்க முடியாது. மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தனது நிறைவுக் குறிப்பிலே கூறியதைப் போல; அலுவல்கள் எதையும் நிறைவேற்றாமல், ஒரு கூட்டத் தொடர் எப்படி வீணாகக் கூடாது என்பதற்குமுன் மாதிரியாக இந்தக் கூட்டத் தொடர் அமைந்துவிட்டது. எவ்வளவு பெரிய தவறு என்றாலும்,அதைப்பற்றி விவாதிக்கத் தயார் என்று பிரதமரே கூறிய பிறகும், விவாதிக்கத் தயாராக இல்லை என்று அவையை எதிர்க்கட்சிகள் முடக்கியதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவையை நடத்த திட்டமிடப்பட்ட 17 நாட்களில் மூன்று நாட்கள் இவ்வாறு முடக்கி வைக்கப்பட்ட பிறகாவது எஞ்சிய நாட்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொண்டிருக்கலாம். என்ன தவறு என்று எதிர்க்கட்சிகள் தங்கள் விவாதத்திலே எடுத்து வைத்து, அதற்கு ஆளுங்கட்சித் தரப்பிலே விளக்கம் அளித்திருந்தால் எது உண்மை என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
விவாதத்திற்குத் தயார் என்று பிரதமர் கூறிய பிறகும்,விவாதத்திற்கு வராமல் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியதைப் பார்க்கும்போது, அவர்கள் பக்கம் உண்மை இல்லையோ என்ற சந்தேகம் வரத் தவறவில்லை. இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையின் நடவடிக்கைகள் 77% பாதிக்கப்பட்டதாகவும், மாநிலங்களவையில் 72% பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசுப் பணியில், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று திரும்பத் திரும்ப எதிர்க் கட்சிகள் கூறுகின்றனவே தவிர,உண்மையிலே இழப்பு நேர்ந்துவிட்டதா? அதனைச் சரிக்கட்ட இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பற்றி விவாதித்தால் தானே முடிவெடுக்க முடியும்.
கேள்வி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறதே?
பதில்: அது உண்மையாக இருந்தால் மிகவும் தவறானதும், கண்டிக்கத்தக்கதுமான முடிவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆட்சியில் இருந்தபோது ஏற்கனவே இதுபோன்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது தெரிந்ததும், அதற்கு நாம் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி அப்போது மத்திய அரசினால் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் “நவரத்னா” பட்டியலில் நெய்வேலி நிறுவனமும் சேர்க்கப்பட்டது என்பது தம்பி முரசொலி மாறன் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். அதைச் சீர் குலைத்துவிடும் வகையில் நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதை கழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எல்லா வகையிலும் அதனை எதிர்க்கும். அப்படிப்பட்ட முயற்சி ஏதாவது இருந்தால், மத்திய அரசும் பிரதமரும் உடனடியாக அதில் தலையிட்டு, அந்த முயற்சியினைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: தண்ணீரை விற்கிறது குடிநீர் வாரியம் என்று சொல்கிறார்களே?
பதில் : ஆமாம், ஏடுகளில் செய்தியே வந்துள்ளது. அதிமுக ஆட்சியின் சாதனைகளிலே குடிநீரை விற்கும் சாதனை தற்போது நடைபெறுகிறது. 6000 லிட்டர் 400 ரூபாயாம். இந்த ஆட்சியிலே இன்னும் எதையெதை விற்பார்களோ?
கேள்வி: “தானே” புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட ஜெயலலிதா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: “தானே புயலின் வேகத்தை மிஞ்சுமளவுக்கு அரசின் நிவாரணப் பணிகள் -கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர முதல்வர் ஜெயலலிதா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு” என்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு அல்ல. 16-1-2012 அன்று அதாவது சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, ஆளுநர் ரோசய்யா தமிழகச் சட்டப் பேரவையில் படித்த ஆளுநர் உரையில் பக்கம் 14-15 இல் “கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதிலாக, அக்குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகள் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய்ச் செலவில் ஒரு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் ஒரு மகத்தான திட்டம் இந்த அரசால் தொடங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்புக்கான அரசாணை தான் முதல்வரால், எட்டு மாதங்களுக்குப் பிறகு 2-9-2012இல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தான் “தானே” புயலின் வேகத்தை மிஞ்சுமளவுக்கு அரசின் நிவாரணப்பணிகள் என்று புதிய அறிவிப்பு போல வெளியிட்டுள்ளார்கள்.
கேள்வி: அண்ணா நகரிலே உள்ள நீண்ட கால நினைவுச் சின்னமான அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று முதல்வர் ஆணை பிறப்பித்திருப்பதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: நீண்டகால நினைவுச் சின்னமான, அண்ணா பெயரால் அமைந்துள்ள அந்த வளைவினை அகற்ற முதலிலே உத்தரவு பிறப்பித்தது யார்? யாரோ ஒரு அமைச்சர் உத்தரவு பிறப்பித்து அந்த வளைவினை அகற்றுவதற்கு யாருக்கும் துணிச்சல் வராது. அந்த வளைவினை அகற்ற முடியவில்லை என்றதும், தற்போது வளைவு அகற்றத் தேவையில்லை என்று உத்தரவு போட்டு ஊரை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் வளைவு தற்போது பாதி உடைபட்ட நிலையில், எந்த நேரத்தில் கீழே விழுமோ என்ற ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், பொது மக்கள் அந்த வழியாகச் செல்லவே அஞ்சுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் யார்? அவர்கள் மீது இந்த அரசு எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன? மக்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். அரசு என்ன பதில் கூறப் போகிறது?
அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவிகிதம் நடைபெற்றுள்ள நிலையில் முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்தபோது தோன்றவில்லையா? ஏடுகளில் எல்லாம் பலமுறை அந்த நினைவுச் சின்னத்தை அகற்றப் போகிறார்கள் என்று வந்ததே? அப்போதே முதல்வர் அதனை அகற்றத் தேவையில்லை என்று அறிவிக்காமல், பல லட்சம் ரூபாய் அரசு பணத்தைச் செலவிட்டு, அந்த நினைவுச் சின்னத்தை அகற்றுகின்ற செயல் பாடுகள் நடைபெற்ற பிறகு, அந்தப் பணியை நிறுத்துங்கள் என்று அறிவித்ததால், அரசுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு? இழப்பு மாத்திரமல்லாமல், அந்த வளைவு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் முக்கால் பகுதி இடிக்கப்பட்டு, தானாகவே விழுந்து விடுமோ என்று பொதுமக்கள் அந்த வழியாக நடப்பதற்கே அஞ்சுகின்ற நிலைமை உள்ளது.
அந்த வளைவினை தற்போது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டுமென்றால், அதற்காகவும் செலவழிக்க நேரிடும். அப்படியே மீண்டும் அதை முன்னர் இருந்த நிலைக்கே கொண்டு வந்தாலும் அது பழைய உறுதிப்பாட்டோடு இருக்குமா என்பதும் சந்தேகம். அண்ணா வளைவு விவகாரத்தில் திட்டச் செலவு உயரும் என்றும், அதற்கு யார் பொறுப்பு என்றும் இன்றைக்கும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் இதற்கு நல்ல விளக்கமான பதில் அளிப்பார்களா என்று எதிர்பார்ப்போம்.
கேள்வி: மின் நிலைமை சீரடைந்துள்ளதா?
பதில்: அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி அதிகமாகும், அதன் மூலம் நிலைமை சீராகும் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் நிலைமை எதிர்மறையாகத் தான் போய்க் கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் மின் தட்டுப்பாடே இல்லாத நிலையை தமிழகத்திலே உருவாக்குவோம் என்று சொல்லித் தான் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில், நான்கு முறை தீ விபத்துக்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக மட்டும் மின் கழகத்துக்கு 60 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் என்றும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அனல் மின் நிலைய “கன்வேயர் பெல்ட்”டில்தான் இந்த விபத்துக்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. முதல் முறையாக இந்த விபத்து நடைபெற்றவுடன், சரியாக அரசினால் கவனிக்கப்பட்டிருந்தால், அடுத்த முறை மீண்டும் கன்வேயர் பெல்ட்டிலே அதே கோளாறு ஏற்பட்டு விபத்து நடை பெற்றிருக்காது அல்லவா?
840 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில், மே 10ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள, “கன்வேயர் பெல்ட்” எரிந்து சாம்பலானது. அதனால் பத்து கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு என்றும், அந்தச் சேதமான பகுதியை மறுபடியும் சீரமைக்க 7 கோடி ரூபாய் செலவானது என்றும், அந்த விபத்து காரணமாக 20 நாட்கள் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. மேட்டூரில் கன்வேயர் பெல்ட் எரிந்து சாம்பலானது என்றதும்,தூத்துக்குடியில் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஜூலை 3ம் தேதி அதே கன்வேயர் பெல்ட் கருகி, 12 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டது. இதற்குப் பிறகும் கடந்த 3ம் தேதி நடந்த விபத்தில் 800 மீட்டர் அளவுக்கு கன்வேயர் பெல்ட் எரிந்துள்ளது. இதைச் சீரமைக்க 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட் பாய்லரிலும் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளதாக நேற்று செய்தி வந்துள்ளது. மின்சாரம் தமிழகத்திற்கு மிகவும் தேவை என்று கவலைப்பட வேண்டிய நேரத்தில் அரசின் கவனக் குறைவின் காரணமாக இந்த அளவிற்கு விபத்துக்கு மேல் விபத்து நடக்கக் காரணம் என்ன என்பதைக் கவனித்து, அந்த விபத்துகள் மேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எந்த எதிர்க்கட்சிக்காரன் மீது என்ன வழக்கு தொடுக்கலாம்; எந்தப் பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதிலேயே ஆட்சியினர் கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருந்தால், மின்தட்டுப்பாட்டை சரி செய்ய முடியாது.
கேள்வி: நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் மீண்டும் நடைபெற்றுள்ளதே?
பதில்: நமது முதல்வர் உடனடியாக பிரதமருக்கு இன்று கடிதம் எழுதிவிடுவார்! அதைப் பற்றி அறிவிப்பு இன்று மாலையோ, நாளைக் காலையிலோ ஏடுகளில் வரும். நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க நாமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், அது தொடர் கதையாகவே தொடருகிறது. இந்திய-இலங்கை பிரச்சினையிலே மேலும் மேலும் அலட்சியம் காட்டாமல், இந்திய அரசு இதனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால், இது எங்கே கொண்டு போய் முடியும் என்றே சொல்ல முடியாது. இதனை மனதிலே கொண்டு மத்திய அரசும், பிரதமரும் இதிலே தலையிட வேண்டும். அண்மையில் சென்னையில் நாம் நடத்திய “டெசோ” மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாக இடம் பெற்றிருந்ததை இந்திய மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-என்வழி செய்திகள்
ஜெ மேடையோ, கலைஞர் மேடையோ.. ரஜினி எனும் நேர்மையாளர் பேச்சு இப்படித்தான் இருக்கும்!
August 30, 2012 by The Editor
Filed under Celebrities, Entertainment, Featured, எனது பக்கங்கள்
நேர்மையின் மறுபெயர் ரஜினி!
ரஜினியை ஏன் விமர்சனங்கள்.. எதிர்ப்புகள் ஒன்றும் செய்வதில்லை தெரியுமா? அது அவரது அதிகபட்ச நேர்மை.. ‘உன்னால் எனக்கொன்றும் ஆகவேண்டியதில்லை… என்னால் உனக்கு ஆகப்போவதும் ஒன்றுமில்லை. எனக்கு நான் நேர்மையாக இருந்தால் போதும்,’ என்ற நினைப்புதான் அவரை அவராகவே இருக்க வைக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் பேசிய பேச்சு!
வரிசையாகப் பேசிய எல்லோருமே – இளையராஜா தவிர – கொஞ்சமல்ல, ரொம்பவே செயற்கையாக, ஒருவித பயத்துடனே பேசிக் கொண்டிருக்கையில், ரஜினியின் பேச்சில் அப்படி ஒரு யதார்த்தம்.
‘ரஜினி – கமல் காம்பினேஷன்’ காலத்துக்குப் பின் வந்த ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் பில்லா, தீ, போக்கிரிராஜா, பொல்லாதவன் போன்றவற்றுக்கெல்லாம் எம்எஸ்விதான் இசை.
கடைசியாக இருவரும் இணைந்த படம் முக்தா சீனிவாசன் இயக்கிய சிவப்பு சூரியன்.
எம்எஸ்வி – ராமமூர்த்தி பற்றி அலங்காரமாக எதுவும் பேசவில்லை ரஜினி. ஆனால் சாகாவரம் பெற்ற பிறவிகள் வரிசையில் அவர்களை வைத்துவிட்டார்.
பொதுவாக அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் நிற்கும் மேடை அரசியலாகிவிடுகிறது.. அவர் பேச்சிலும் அரசியல் தலைவர்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால் நேற்றைய பேச்சு நிச்சயம் அரசியல் அல்ல!
இந்த மேடையில் இறப்புக்கு அப்பாற்பட்ட தலைவர்கள், கலைஞர்கள் பற்றிப் பேசும்போது, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன் வரிசையில் எம்எஸ்வியையும் வைத்த ரஜினி, மேடைக்கு ஒரு பேச்சு என்பது தன் வழக்கமல்ல என்பதை உணர்த்த நினைத்தாரோ.. அல்லது அவருக்கே உரிய நேர்மையின் வெளிப்பாடோ… இந்த தலைவர்கள் வரிசையில் கருணாநிதியையும் அவர் வைத்தார். அதுவும் அரசியலில் கருணாநிதியை தனது ஜென்ம எதிரியாக நினைக்கும் ஜெயலலிதா முன்னிலையில்.
கருணாநிதியின் பெயரை ரஜினி அந்த மேடையில் உச்சரித்தபோது, அதுவரை எல்லாவற்றுக்கும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கப்சிப்பென்று ஆகிவிட்டார்கள். காமிரா முதல்வர் முகத்தைக் காட்ட, அவர் ஆர்வத்துடன் ரஜினி பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
தான் அனைவருக்குமே பொதுவானவன்தான். யார் நல்லது செய்தாலும் சரி.. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை அவர் பகிரங்கமாகவே உணர்த்தியிருக்கிறார் இதன் மூலம்.
ஒரு தலைவரின் மேடையில், மாற்றுக் கட்சித் தலைவரைப் புகழ்வது.. பாராட்டுவது ரஜினிக்குப் புதிதல்ல. ஏன், ஜெயலலிதாவே நேருக்கு நேர் நின்று விரல் நீட்டி, ‘தவறு செய்கிறீர்கள்.. திருத்திக் கொள்ளுங்கள் முதல்வர் அவர்களே’, என்றவர்தான் ரஜினி.
அதன் பிறகு, கருணாநிதி முதல்வராக வீற்றிருந்த ‘சிவாஜி வெள்ளி விழா மேடை’யில், மறக்காமல் ‘இந்தப் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி என்னைப் பாராட்டிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று ரொம்ப கூலாக சொன்னார்!
அதே கருணாநிதி முதல்வராக இருக்கும்போதுதான், ‘உங்க பேரைச் சொல்லி மிரட்டிக் கூப்பிடறாங்க,” என்று அஜீத் முறையிட்டபோது, கருணாநிதியின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினார்.
அந்த விழாவிலேயே, ஜெயலலிதா திரையுலகினருக்காக நிலம் ஒதுக்கியதைக் குறிப்பிட்டு, அவருக்கு நன்றியும் சொன்னவர் ரஜினி.
சிவாஜி சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், அப்போதுதான் திமுகவை எதிர்த்து அரசியல் நடத்த ஆரம்பித்திருந்த விஜயகாந்தை வாழ்த்தவும் ரஜினி தவறியதில்லை.
இதற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. அது இளைஞன் விழா. சத்யம் அரங்கில் முதல்வர் கருணாநிதி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த நேரம். வெளியே பேய் மழை. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. கிட்டத்தட்ட 1 வார கால மழை. மக்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். தன் முறை வந்தபோது, “முதல்வருக்கு நிறைய வேலை இருக்கும். வெளிய மக்கள் படாத பாடுபட்டுக்கிட்டிருக்காங்க.. சாப்பாடு, கரண்ட், ரோடு வசதியில்லே.. நான் அதிக நேரம் பேச எடுத்துக்கல,” என்று மகா நாகரீகத்துடன் இடித்துக் காட்டியவர் இதே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!
ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினியை விமர்சிப்பவர்களும் முழுமையாக ஒப்புக் கொள்ளும் விஷயம் இது.
ஒரு முறை ரஜினி இப்படிக் குறிப்பிட்டார்…
“ஒரு நிகழ்ச்சிக்குப் போகணும்னு கமிட் பண்ணிக்கிட்டா, அங்க போயி என்ன பேசறதுண்ணு நிறைய யோசிச்சு வைப்பேன். காலையிலே வரும்போதும், மேடையில் அமர்ந்திருக்கும் போதும்கூட நினைவிருக்கும். ஆனா, மைக்கைக் கையிலெடுத்ததும், நான் நினைச்சிட்டிருந்த அத்தனையும் எனக்கு மறந்துடும். ப்ளாங்க்.. அப்போ என் மனசுல படறதை, உண்மையா நினைக்கிறதை டக்குனு பேசிடுவேன்!”
-நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!
-வினோ
என்வழி ஸ்பெஷல்
‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்
August 30, 2012 by The Editor
Filed under Celebrities, Cinema, Entertainment
‘அம்மம்மா காற்றுவந்து ஆடை தொட்டுப் போகும்…’ – இசைஞானியின் வைகை அணை ப்ளாஷ்பேக்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, தனது இளமை நாட்களில் பார்த்த முதல் ஷூட்டிங், ஜெயலலிதாவின் வெண்ணிற ஆடை படப்பிடிப்புதான் என்றார்.
விழாவில் இளையராஜா பேச்சு சுருக்கமாக, ஆனால் கச்சிதமாக இருந்தது.
அவர் பேசியது:
கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்களைத் தந்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு முதல்வர் இப்படி பெரிய பாராட்டுவிழா நடத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
சிறு வயதில், நான் படிக்க மிகவும் கஷ்டப்பட்ட காலம். அப்போது பள்ளிக்குப் போகும் நேரம் போக, மீதி நேரத்தில் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு ஹோஸ் பைப்பில் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது என் வேலை.
ஸ்ரீதர் சார் என்றால் எங்களுக்கெல்லாம் அப்படி ஒரு ஆசை. எங்களுக்கெல்லாம், எனக்கு, பாரதிராஜாவுக்கு, அண்ணன் பாஸ்கருக்கெல்லாம் அவர்தான் ஹீரோ. வெண்ணிற ஆடை படப்பிடிப்புக்காக அவர்கள் வைகை அணைக்கு வந்திருந்தபோது நானும் மற்றவர்களும் அடங்காத ஆர்வத்தோடு கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த முதல் ஷூட்டிங் அதுதான்.
அந்த ஷூட்டிங்குக்காக முதல்வர் அவர்களும் அன்று வந்திருந்தார்கள். ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் போகும்… (பாடிக் காட்டுகிறார்…) என்ற பாடலுக்கு அவர்கள் நடித்தார்கள்.
மிக அருமையான பாடல். என் நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் கேட்டது கேட்டுக் கொண்டிருப்பது அண்ணன் எம்எஸ்வி அவர்களின் இசையைத்தான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒவ்வொன்றும் கேட்கத் திகட்டாதவை. என் உடம்பில் நாடி நரம்பிலெல்லாம் அந்த இசைதான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்று எனக்குள் இருக்கும் இந்த இசை அண்ணன் எம்எஸ்வி போட்ட பிச்சைதான். அவர் தூ என துப்பியதுதான்.. என்றால் மிகையல்ல.
அவர்களை வேறு என்ன சொல்லி வாழ்த்தினாலும் சரியாகாது. இசை வடிவங்களாகத் திகழும் இந்த மேதைகளை உரிய நேரத்தில் கவுரவித்த முதல்வர் அவர்களுக்கும், ஜெயா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு இளையராஜா பேசினார்.
விழாவில் கமல்ஹாஸன் பேசியது:
“இது என் குடும்பம். அதேபோல் முதல்-அமைச்சரும் நினைத்ததால் தான் இங்கே நம்முடன் அமர்ந்திருக்கிறார். என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் சொன்னது போல, நாங்கள் செய்யவேண்டியதை நீங்கள் செய்து எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது. என் மகளை நான் இசை பயில அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அவள் இசைப்பயிற்சி முடித்ததும் என்னிடம் போனில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த ஒரு பாடலை டியூன் பண்ணி ‘இது யாருடைய இசை?’ என்று கேட்டாள். அந்த அளவுக்கு இந்த தலைமுறையையும் கவர்ந்தது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
அதன்பிறகு அவள் பயிற்சி முடிந்து வந்ததும் நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அழைத்து வந்தேன். இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை எனறார், இளையராஜா. அவரே அப்படி சொல்லி விட்ட பிறகு நான் என்ன சொல்லிப் பாராட்டுவது?”, என்றார்.
கே பாலச்சந்தரும் பேசினார். எம்எஸ்வியுடன் இணைந்து தான் தமிழ் தெலுங்கில் பணியாற்றிய 34 படங்களின் வெற்றிகளை, அவரது காலடியில் சமர்ப்பிப்பதாகவும், எம்எஸ்விக்கு பத்ம விருது கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.
விழாவில் நெருடலாக அமைந்தது ஏவிஎம் சரவணன் பேச்சு. அவர் தனது பேச்சில், “மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் எங்களுடைய எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறை எங்களுக்கு உண்டு. அவருக்குப் பின் வந்த இளையராஜா, ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது. அது அவர்கள் திறமைக்காக கிடைத்தது என்றாலும், இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்”, என்றார்.
-என்வழி செய்திகள்
ஜெ மலரும் நினைவுகள்… தன்னோடு நடித்த சோ உள்ளிட்ட நடிகர்களுக்கு போயஸ் கார்டனில் விருந்து!
August 30, 2012 by The Editor
Filed under Celebrities, Entertainment, Popcorn
சங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு… இத்தோட நிறுத்திக்கிறேன்! -எம்எஸ்வி
பொதுவாக பாராட்டு விழாக்களில், சம்பந்தப்பட்டவர் ஏற்புரையில் உணர்ச்சிவசப்பட்டு எக்கச்சக்கமாக பேசிவிடுவார்கள். ஆனால் ஜெயா டிவி சார்பில் தனக்கு நடந்த பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில், ‘திரையிசை சக்கரவர்த்தி’ எம்எஸ்வி, நான்கே வரிகளில் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா உள்பட 5 பேருக்கு மட்டுமே பேச அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இதில் ஜெயலலிதாவின் உரைதான் மிகப் பெரியது. அவர் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த உரையை வாசித்தார்.
பின்னர் எம்எஸ்வியை ஏற்புரையாற்ற அழைத்தனர். அவர் சொன்னது:
“எனக்கு சங்கீதத்தோடு கொஞ்சம் இங்கீதமும் தெரியும். அதனால் பேச்சை இத்தோட முடிச்சிக்கிறேன். இருக்கும் வரைக்கும் யாருக்கும் பிரச்சினை இல்லாமல், எங்களால முடிஞ்ச இசைப்பணியை செய்யும் வல்லமையை இறைவன் தரணும்னு கேட்டுக்கிட்டு, முடிச்சிக்கிறேன்,” என்றார்.
ஜெ மலரும் நினைவுகள்… தன்னோடு நடித்த சோ உள்ளிட்ட நடிகர்களுக்கு போயஸ் கார்டனில் விருந்து!
ஜெயா டிவி நிகழ்ச்சியில் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யார் யார் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாதான் முடிவு செய்தாராம்.
அப்படி அழைக்கப்பட்டவர்களில், பாடகர்கள், இசைக் கலைஞர்களுக்கு மட்டும் தங்கப் பதக்கம் அளித்து கவுரவித்தார். பின்னர் தன்னோடு நடித்த பழைய நடிகைகள், அருகில் வந்து பேசியபோது, நாளை சந்திக்கிறேன் உங்களை என்று உறுதியளித்தார் ஜெயலலிதா.
அதன்படி, அவர்களையெல்லாம் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து மதிய உணவு விருந்தளித்தார் இன்று.
பங்கேற்றவர்கள்:
பழம்பெரும் திரைப்பட நடிகரும், துக்ளக் இதழாசிரியருமான சோ ராமசாமி, பழம்பெரும் திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, ஜமுனா, குமாரி சச்சு, ராஜஸ்ரீ, சுகுமாரி, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சுசீலா.
-என்வழி ஸ்பெஷல்
தமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..!! – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்!
August 30, 2012 by The Editor
Filed under Celebrities, Entertainment, Rajini
தமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..!! – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்!
ஜெயா டிவியின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியில் அரங்கை அதிர வைத்த விஷயம், சோ பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் கமெண்ட்தான். சோ – ரஜினி நட்பு குறித்து புதிதாக சொல்ல வேண்டியதில்லை.
நேற்றைய விழாவில், ஜெயா டிவியின் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த ரஜினி, சோவின் எங்கே பிராமணன் தொடர் பற்றிக் குறிப்பிட்டார்.
அதில், “…அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். அதில் சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி.
நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், ‘சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே’ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்…” என்றார்.

ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரங்கமே கைத்தட்டலிலும் சிரிப்பிலும் அதிர்ந்தது… அப்போது சோ முகத்தைப் பார்க்க வேண்டுமே… தலையில் கை வைத்துக் கொணடு, ‘ஏம்பா இதெல்லாம்?’ என்று லேசாக சிரித்தபடி அவர் வாய் முணுமுணுத்தது, தொலைக்காட்சியில் தெரிந்தது.
பேச்சு முடிந்து, பாடல்களைக் கேட்க மேடையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா இறங்கி வந்ததும், முதலில் அவரை நோக்கி வேகமாக வந்தவர் சோதான். ரஜினியின் பேச்சு குறித்து அவர் ஏதோ சொல்ல முயல.. ‘நான் அதை ரொம்ப ரசிச்சேன். சீக்கிரம் ஆரம்பிச்சிடுங்க (தொடர்)’, என சிரித்தபடி கூறிவிட்டு அமர்ந்தார் ஜெயலலிதா!
-என்வழி ஸ்பெஷல்
விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு
August 30, 2012 by The Editor
Filed under Celebrities, election, election 2011, Entertainment, General
விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு
சென்னை: இசை மேதைகளான இரட்டையர் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுகள் வழங்குமாறு சிபாரிசு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினேன். ஆனால் மறுத்துவிட்டது, என்று குற்றம்சாட்டினார் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, கமல்ஹாஸன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அவர் பேசும்போது, எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்… என்றார்.
அவரது உரை, முழுவதுமாக…
இருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.
இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை.
அதனால்தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை”, “இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி.
எம்எஸ்வி பெருமை…
இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “ஜெனோவா” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், ‘பணம்’ திரைப்படம் முதல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை எம்.எஸ்.வி.யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.
முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்; மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.
ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர் எம்.எஸ்.வி. . தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. . மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார்.
அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
டிகே ராமமூர்த்தி..
டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா’ என்ற பாடலில் வரும் சோக இசை டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும். சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே. ராமமூர்த்தி . அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமனுக்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும்.
சாதனை மன்னர்கள்…
இன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை ராமநாதன், மகாதேவன், ஆதி நாராயண ராவ், சலபதி ராவ், தக்ஷிணாமூர்த்தி, சுப்பைய்யா நாயுடு, இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை.
இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை.
நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பதுதான் உண்மை.
என்னுடன் இரண்டறக் கலந்த இசை...
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன். காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.
தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10-வயது, 12-வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்ப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள். அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்க்கிறது. அந்த ராகம் தான் பிடித்திருக்கிறது. அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள்.
என் உயிர்மூச்சுள்ளவரை…
நான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது. ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது. இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்க்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது.
இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.
“சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை மதி டி.கே. பட்டம்மாள் கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரியிடம், “உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா” என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, உடனே வீணையை எடுத்து “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா” என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள்.
அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
இசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு திருப்பிவிட்டவர்கள்.
உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.
லட்சண ஞானஸ்தர்… லட்சிய ஞானஸ்தர்
இசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு.
சங்கீதத்தைப் பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா?
இந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.
இசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள்.
இன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.
திருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார்.
ஒரு முக்கியமான கட்டத்தில், “பலே” என்று ஒரு குரல் கேட்டது. அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.
லட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி, இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான்.
தங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை.
திரையிசையின் பொற்காலம்…
இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் “பொற்காலம்” என்று சொல்வார்கள். அது போல, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது.
இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்மா விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது.
என் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை…
சென்ற ஆண்டிற்கான பத்மா விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
1963-ஆம் ஆண்டு விஸ்வநாதன் – ராமமூர்த்தி-க்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது.
இசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு தன் வாழ்த்துரையை வாசித்து முடித்தார் முதல்வர் ஜெயலலிதா.
-என்வழி செய்திகள்
ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழாவில் ரஜினி – ஜெயலலிதா- படங்கள்
எம்எஸ் விஸ்வநாதனுக்கு சிறப்பு செய்த ஜெயலலிதா – முழு கேலரி
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் – ரஜினி அதிரடிப் பேச்சு
August 30, 2012 by The Editor
Filed under Celebrities, Entertainment, Featured
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் – ரஜினி அதிரடிப் பேச்சு
சென்னை: வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் மற்றும் ஜெயலலிதா என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்கி, மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், இயக்குநர் கே பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் சிறப்பாக அமைந்தது வழக்கம் போல சூப்பர் ஸ்டாரின் பேச்சுதான். அவரது பேச்சின் சிறப்பு பற்றி தனியாக பார்ப்போம். முதலில் ரஜினியின் பேச்சு முழுமையாக..
“இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே, என்னுடைய அருமை நண்பர் கமல் ஹாசன் அவர்களே, (கீழே பார்த்து) விழாவுக்கு வந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, திரையுலக பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும், வாழ வைத்த தமிழக மக்களே அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.
சிஎம்மா பதவியேற்ற பிறகு அவருக்கு திரையுலகின் சார்பில் பாராட்டு விழா நடத்தணும்னு சொல்லி நிறையபேர் விரும்பினாங்க. ஆனா முதல்வர் இப்போதைக்கு வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன்.
இப்போ, அவங்களே வந்து இங்கே, எம்எஸ்விக்காக பெரிய பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா.. அது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரிதான். இது திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் கூட பெரிய வாய்ப்பு. பெரிய விஷயம். உங்களை (முதல்வரை) பாராட்ட இப்போ எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.
ஜெயா டிவி 13 ஆண்டுகள் முடிந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த சாதனைக்காக அங்கே பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சிக்கிறேன்.
எனக்கும் ஜெயா டிவி பிடிக்கும். பல நல்ல நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும். அதேபோல, செய்திகளுக்கு முன்னாடி வரும் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் அருமையாக இருக்கும்.
அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி. நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், ‘சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே’ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்… (அரங்கமே கைத்தட்டலிலும் சிரிப்பிலும் அதிர்ந்தது…)
ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டி.வி. இன்னைக்கு கமல் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால.
இது எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா. இங்கே உள்ள எல்லாரை விடவும் நான்தான் ஜூனியர்னு நினைக்கிறேன் சினிமாவில். எம்எஸ்வி அவர்களைப் பாராட்ட இளையராஜா சார், கமல் போன்றவர்களே வார்த்தையில்லாமல் தயங்கும்போது, நான் மட்டும் என்ன சொல்லிடப் போறேன்.
அவருடன் நான் நிறைய படங்கள் கூட செய்யவில்லை. ஆனால் நான் பெங்களூரில் இருக்கும்போது, தமிழே தெரியாத கன்னடாக்காரங்க கூட, அர்த்தம் தெரியாமலே பாடும் பாட்டு போனால் போகட்டும் போடா… நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…
எனக்கு அப்போ மொழி தெரியலேன்னாலும் தமிழ்ப் படங்களுக்கு அதிகமா போவேன். அப்படி ஒருமுறை சர்வர் சுந்தரம் படத்துக்குப் போனேன். ஒரு சாதாரண சர்வர் சினிமா நடிகனாக எப்படி ஆகிறான் என்பது கதை. நானும் கண்டக்டரா இருந்து, சினிமா நடிகனாகணும்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம் அது.
அந்தப் படத்துல ஒரு பாட்டு, ‘அவளுக்கென்ன அழகிய மனம்..’. அதுல ஒரு சீன்ல மட்டும் எல்லோரும் கைத் தட்டறாங்க. எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இவங்களோட படங்கள்ல அறிமுகக்காட்சிக்கு எப்படி கைத்தட்டல், விசில் கிடைக்குமோ.. அப்படி ஒரு ரெஸ்பான்ஸ். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கைத்தட்டுறீங்கன்னு பக்கத்துல இருந்தவரைக் கேட்டேன்.
‘அங்க கோட் போட்டுக்கிட்டு மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரைக் காட்டறாங்களே… அவர்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் எம்எஸ் விஸ்வநாதன். அவருக்காகத்தான் இந்தக் கைத்தட்டல்,’ என்றார்.
ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா.. ரசிகர்களா… இத்தனை மதிப்பான்னு ஆச்சர்யமா இருந்தது.
நான் இங்கே வந்த பிறகு, அபூர்வ ராகங்கள் சமயத்துலதான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது… என்ன அவர் காவி உடை போடல… மத்தபடி நெத்தியில நீறு, குங்குமம் வெச்சிக்கிட்டு சாதாரணமா இருந்தார்.
மூன்று முடிச்சு படத்துல நான் பாடற மாதிரி ஒரு பாட்டு, அந்த போட் ஸாங். ‘மண வினைகள் யாருடனோ..’ எனக்கு தனித்துவமான முகம்.. அதுக்கேத்தமாதிரி Peculier வாய்ஸ் வேணும்னு கேட்டபோது, எம்.எஸ்.வி.சார்தான் எனக்காக குரல் கொடுத்தார்.
சினிமாவில் எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி சார்தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும் படத்துல ‘சம்போ சிவ சம்போ…’ பாட்டு பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.
எம்.எஸ்.வி. – ராமமூர்த்தி மாதிரி சாதனையாளர்களைப் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.
இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை… ரெண்டு முறை நிகழும். நிறைய பேருக்கு அதாவது தொன்னூறு சதவீத மக்களுக்கு மரணம் ஒரு தடவைதான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது… பினிஷ்.. அவ்வளவுதான்.
இன்னொரு வகை… மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள். அந்த பேரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களாலேயோ இழந்துட்டா, அப்போ அவங்களுக்கு முதல் மரணம் வருது. அதற்கடுத்து இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும்.
ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.
ஆருயிர் நண்பர் கலைஞர்..
வடக்கில் பார்த்தீங்கன்னா… சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்… இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.
இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் (அதிர்ச்சியில் அரங்கமே பேரமைதியாகிவிட்டது! ), புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி… இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.
ஏன்னா… அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.
அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்.”
-பெரும் ஆரவாரம், விசில்களுக்கிடையில் இவ்வாறு பேசி முடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவரது இந்தப் பேச்சுக்கான ரியாக்ஷன்களை தனியாகத் தருகிறோம்…!
-வினோ
என்வழி ஸ்பெஷல்
ஜெயாடிவி விழாவில் முதல்வர் ஜெயலலிதா – சூப்பர் ஸ்டார் ரஜினி – கேலரி
திரை இசைச் சக்கரவர்த்தி – எம்எஸ்விக்கு ஜெயலலிதா சூட்டிய புதிய பட்டம்!
August 30, 2012 by The Editor
Filed under Celebrities, Cinema, Entertainment
திரை இசைச் சக்கரவர்த்தி – எம்எஸ்விக்கு ஜெ சூட்டிய புதிய பட்டம்!

சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு திரை இசை சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில் நேற்று புதன்கிழமை நடந்த ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில், எம்எஸ்வி – டி கே ராமமூர்த்தி இருவருக்கும் இந்தப் பட்டத்தைச் சூட்டியதோடு, தலா 60 பொற்காசுகள் மற்றும் ஆளுக்கொரு போர்டு பியஸ்டா கார்களை வழங்கி சிறப்பித்தார் ஜெயலலிதா.
தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். இன்றும் கூட இதயங்களில் அவர்களது பாடல்கள் ஒலித்துக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் உள்ளன.
1963ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமியில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில்தான் முதல் முறையாக மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் இருவருக்கும் வழங்கப்பட்டது. அதை வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
அன்று முதல் இவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் என்றும் மெல்லிசை மன்னர்கள் என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். இன்று வரை இந்தப் பெயர்தான் இவர்களுக்கு நிலைத்து வருகிறது.
ஆனால் இன்று முதல்வர் ஜெயலலிதா எம்.எஸ்.விக்கு புதிய பட்டத்தைக் கொடுத்துள்ளார். அது – திரை இசை சக்கரவர்த்தி என்பதாகும். இந்தப் பெயரைச் சொல்லித்தான் என்று எம்.எஸ்.வியை வாழ்த்திப் பேசினார் ஜெயலலிதா.
எம்.எஸ்.வி என்றால் மெல்லிசை மன்னர் என்றுதான் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில், அந்தப் பிரபலமான பெயரில் அழைக்காமல், புதிய பட்டப் பெயரை ஜெயலலிதா கொடுத்தது ஏன் என்பது பலருக்கும் புரியவில்லை.
இருப்பினும் இந்தப் பட்டத்தை ஜெயலலிதா அவராகவே தரவில்லை. ஜெயா டிவி சார்பில் எம்.எஸ்.விக்கு எந்தப் பட்டம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று மக்களிடையே கடந்த 15 நாட்களாக ஊர் ஊராகப் போய் வாக்கெடுப்பு நடத்தினார்களாம். அந்த வாக்கெடுப்பில் பலரும் பல பட்டங்களைப் பரிந்துரைத்துள்ளனர். அதில் இந்த திரையிசை சக்கரவர்த்தி என்ற பட்டத்துக்கு அதிக ஆதரவு கிடைத்ததாம். இதனால் அந்தப் பட்டத்தை இன்றைய விழாவில் ஜெயலலிதா மூலம் கொடுத்துள்ளதாக ஜெயா டிவி நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.
கூடவே, ஜெயா டிவியில் வேலை பார்ப்பவர்களுக்கு 40 சதவீதம் வரை சம்பள உயர்வு, நலத்திட்டங்களையெல்லாம் ஜெயலலிதா அறிவித்தார்.
-என்வழி செய்திகள்
ஜெயா டிவி விழாவில் எஸ் எஸ் விஸ்வநாதனுக்கு புதிய பட்டம் சூட்டிய முதல்வர் - முழு கேலரி
மல்லாந்து படுத்திருப்பவன் காறித்துப்புகிற கதை – ஈழ விவகாரம் குறித்து ஜெ-வுக்கு கருணாநிதி பதிலடி!
August 30, 2012 by The Editor
Filed under election, election 2011, Nation, Politics
மல்லாந்து படுத்திருப்பவன் காறித்துப்புகிற கதை – ஈழ விவகாரம் குறித்து ஜெ-வுக்கு கருணாநிதி பதிலடி!
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சினையில் தன்னைக் குற்றம்சாட்டும் அதிமுக மற்றும் சிலருக்கும் சேர்த்து மிக காட்டமான அறிக்கையை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி புதன்கிழமை விடுத்துள்ளார்.
மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை என்ற தலைப்பில் வந்துள்ள அந்த அறிக்கை:
அதிமுக செயற்குழுவில் தீர்மானம் என்ற பெயரில் திட்டியுள்ளனர்..
“அ.தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக – தி.மு.கவையும் என்னையும் திட்டுவதுதான் நோக்கம் என்ற அடிப்படையிலே வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் என் மீதான தாக்குதல்தான்! 2009இல் இலங்கையில் இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையாம்! அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு நான்தான் காரணமாம்!
ஜெயலலிதா செய்தது என்ன?
2006ஆம் ஆண்டு மே திங்கள் வரை ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தாராம்?
16-4-2002 அன்று சட்டப் பேரவையிலே ஜெயலலிதாவே முன்மொழிந்த தீர்மானம் வருமாறு :
“விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்” என்பதாகும். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா இது?
யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்…
17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை.
ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டாரே, இதுதான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா?
ஜெயலலிதா இப்படியெல்லாம் சொன்னதால் அல்லவா, இலங்கை ராணுவத்தினர் இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தனர். எனவே இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலிதாவா? நானா?”
நான் செய்தது என்னென்ன?
போர் உச்சத்தில் இருந்தபோது நான் ஒன்றுமே செய்யவில்லையா?
“இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது நான் எதுவும் செய்யவில்லையாம்.. ஜெயலலிதாதான் செய்தாராம்..? என்ன ஆதாரம்?
14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்,
24-10-2008 அன்று மனிதச் சங்கிலி,
12-11-2008 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம்,
4-12-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரோடு சந்திப்பு,
27-12-2008 அன்று தி.மு. கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்,
28-3-2009 அன்று பிரதமருக்கும், சோனியா விற்கும் கடிதம்,
7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் ஆகியோருக்கு தந்தி,
9-4-2009 அன்று சென்னையில் பேரணி,
21-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி ஆகியோருக்கு மீண்டும் தந்தி,
23-4-2009 அன்று தமிழகத்தில் “பந்த்”,
24-4-2009 அண்ணா அறிவாலயத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் சந்திப்பு,
27-4-2009 அன்று உண்ணாவிரதம்
- இவை எல்லாம் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நான் எடுத்த நடவடிக்கைகள்!
ஆனால் என்னைக் குற்றஞ்சாட்டி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா செய்தது என்ன?
14-10-2008 அன்று கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ‘கண்துடைப்பு நாடகம்’ என்று கூறி அதனைப் புறக்கணித்தார்.
‘கருணாநிதி புலிகளைக் காக்க நாடகமாடுவதாக’ குற்றம்சாட்டிய ஜெ
15-10-2008 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ‘இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன.
போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது
ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல,’ என்று என்னைத் தாக்கி அறிக்கை விட்டதைத் தவிர வேறு எதையும் ஜெயலலிதா செய்யவில்லை.
இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாத ஜெயலலிதா, தற்போது அவரது கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம்
என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
ஏன் உண்ணாவிரதம் வாபஸ்?
அந்தத் தீர்மானத்தில் போர் முடிந்து விட்டதாக பொய்யான தகவலைக் கூறி நான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதாக சொல்லியிருக்கிறார்.
நான் உண்ணாவிரதம் இருந்த 27- 4-2009 அன்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.”
இவ்வாறு இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும், மேலும் “குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்” என்றும், “போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்றும் “போர் முனையிலிருந்து வெளி வந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டுமன்றி; போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங் களுக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்” என்றும், இலங்கை அரசு கூறியிருப்பதாகத் தெரிவித்த பிரணாப் அவர்கள், அந்த அறிக்கையில், “போர்ப் பகுதியிலிருந்து வெளிக் கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும், அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்கு களங்கம் கற்பிக்க முயலுகிறார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த ஒன்றிலிருந்தே ஜெயலலிதாவின் தீர்மானம் எத்தகைய இட்டுக்கட்டிய ஒன்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்டன் பாலசிங்கத்தை சிகிச்சைக்காக அனுமதிக்க மறுத்தவர் ஜெ..
இது மாத்திரமல்ல, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மிகவும் பாடுபட்டவரும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அருமை நண்பர் ஆண்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி ஓர் பிரச்சினை எழுந்தது. அப்போது பிரதமர் வாஜ்பாய்-யிடம் அது பற்றி கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் பாலசிங்கத்துக்கு சிகிச்சை பெறுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றுதான் கூறினார்.
அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, வாஜ்பாயின் கருத்தைக் கடுமையாக எதிர்த்தார். “தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற, மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றே கூறினார். தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர் கள்மீது புதிய “பொடா” சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
12-4-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் பிரச்சினை தொடர்பாக இரண்டு முறை விரிவாகப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின் போது அவர் கூறியதாவது :
“விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்காது எனப் பிரதமர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பால சிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளதை எதிர்க்கிறேன். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பது அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் தமிழகத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது என்ற நம்பிக்கை உள்ளது.”
இப்படியெல்லாம் பேட்டி கொடுத்தவர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்பவராம்! ஆனால் நான் இலங்கைத் தமிழர்கள் அழிவிற்குக் காரணமானவனாம்!
புலிகளை ஆதரித்தால் பொடா பாயும் என அறிவித்தாரே…
ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள், “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்” என்று ம.தி.மு.க., பா.ம.க., போன்ற சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்களே என்று கேட்டபோது,
“விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேச துரோகக் குற்றம் செய்ததாகக் கருதப்பட வேண்டும். எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது புதிய “பொடா” சட்டத்தின்கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்டத்தின்கீழ் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உள்ளது” – என்று பதிலளித்தார்.
நானாக இதை இட்டுக்கட்டிக் கூறவில்லை. தினமணி நாளிதழ் 13-4-2002-ல் முதல் பக்கத்தில் வந்துள்ள தலைப்புச் செய்தியே இதுதான்!
இத்தகைய முரண்பாடுகளுக்கு சொந்தக்காரர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா; இவர் நம்மைப் பார்த்து “கபட நாடகம்” ஆடுவதாகச் சொல்வது, மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்பிய கதையாகவே ஆகிவிடும்.”
-இவ்வாறு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் கருணாநிதி.
-என்வழி செய்திகள்
7 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் கலந்து கொண்ட சினிமா விழா… ரஜினி – கமல் – இளையராஜா பங்கேற்பு!
August 29, 2012 by The Editor
Filed under Celebrities, Entertainment, General
7 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் கலந்து கொண்ட சினிமா விழா… ரஜினி – கமல் – இளையராஜா பங்கேற்பு!

சென்னை: ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கில் அரண்மனையை நினைவூட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
எம்எஸ் விஸ்வநாதனுடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எம்எஸ் விஸ்வநாதன் – டி கே ராமமூர்த்தி இருவருக்கும் பொற்கிழிகள், கார்கள் அளித்து கவுரவித்தார் முதல்வர். ஏகப்பட்ட பேரை பேச வைக்காமல், ரஜினி, கமல், இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன், ஏவிஎம் சரவணன், கே பாலச்சந்தர் ஆகியோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பேசினர்.
ஜெயலலிதா முதல்வரான பிறகு ரஜினி, கமல் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. அதற்கு முன்பு திரையுலகம் 2005-ல் நடத்திய விழாவில் ரஜினி, கமல் பங்கேற்று வாழ்த்தியது நினைவிருக்கலாம்.
முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் கெடுபிடிகள் ஏக பலமாக இருந்தன. 5 மணி விழாவுக்கு 4 மணிக்கெல்லாம் இருக்கையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர் பார்வையாளர்கல்.
சரியாக 4.50-க்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் இளையராஜாவும் ஒன்றாக மேடைக்கு வந்தனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா சரியாக 5 மணிக்கு வந்தார். அடுத்த நிமிடம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
-என்வழி செய்திகள்
மீண்டும் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு – தவிக்கும் தமிழகம்!
August 25, 2012 by The Editor
Filed under Nation, Politics, இன்றைய சூடான அலசல்
மீண்டும் 10 முதல் 12 மணி நேர மின்வெட்டு – தவிக்கும் தமிழகம்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் கடும் மின்வெட்டு நிலவுகிறது. திருப்பூர், கோவை மற்றும் வட மாவட்டங்களில் குறைந்தது 10 மணி நேரம் முதல் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை மின்சாரமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுகநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலோ ஒரு நாளைக்கு மணி நேரம் மின்சாரம் இருந்தாலே அதிசயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலத்தில் நகர்ப்புறங்களில் ஒரு மணி நேரமும் கிராமப்புறங்களில் 3 முதல் நான்கு மணி நேரமும் மின்வெட்டு அமலில் இருந்தது. ஆனால் மழைக்காலங்களில் மின்வெட்டு அறவே நீக்கப்பட்டிருந்தது நகர்ப்புறங்களில்.
தேர்தல் நெருங்கிய கோடை நேரத்தில் மீண்டும் மின்வெட்டு வர, அதுவே திமுகவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளுள் ஒன்றாக மாறியது.
அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மின்வெட்டை அடுத்த மூன்று மாதங்களில் சீராக்குவேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா. மூன்று மாதங்கள் ஆறு மாதங்களாகின.. ஆறு மாதங்கள் ஒரு ஆண்டாகியது… இப்போது ஆண்டொன்று முடிந்து இரண்டாம் ஆண்டின் இறுதியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் வெறும் அறிக்கைகளும் கெடு தேதிகளும்தான் அரசுத் தரப்பிலிருந்து வந்து கொண்டிருக்கின்றவே தவிர, மின்சார விநியோகத்தின் நிலை சொல்லத் தரமற்றதாக மாறிவிட்டது.
மோசமான விஷயத்தை ஒரு குறையாகச் சொல்லிப் பார்த்து, அது சீராகாத நிலையில் அந்த குறையோடேயே வாழப் பழகிக் கொண்டு வருகின்றனர், ஜெயலலிதாவை முதல்வராக்கி பூரித்த மக்கள்!
திருப்பூரில்…
தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் அதிகாலை 6 மணிக்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. 3 மணி நேரம் கழித்து மீண்டும் வரும் மின்சாரம், மீண்டும் 10 மணிக்கு துண்டிக்கப்படுகிறது. 11 மணிக்கு மீண்டும் தரப்படுகிறது. அடுத்த 1 மணிநேரத்துக்குள் மீண்டும் கட். 12 மணியிலிருந்து 2 மணிவரை மின்வெட்டு.
பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை போனால் போகட்டுமென தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் மின்சாரம் தருபவர்கள், 6 மணிக்கு மின்சாரத்தை துண்டித்து, இரவு 8 மணிக்குத் தருகிறார்கள். மீண்டும் இரவு 10 – 11 மணிவரை மின்வெட்டு. அடுத்து 12.30 லிருந்து 1.30 வரை, தொடர்ந்து 3.30 முதல் விடியற்காலை 4.30 மணி வரை என மின்வெட்டை தாறுமாறாக அமலில் வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கும் மேல் மின்வெட்டு. இதனால் தொழில்கள் முற்றாக முடங்கிவிட்டது ஒரு பக்கம், சாதாரண மக்கள் கூட தங்கள் அன்றாடப் பணிகளை செய்ய முடியாத அளவு கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் மின்வெட்டு காரணமாக குடிநீர் விநியோகம் கூட முடங்கிப் போயுள்ளது.
கிட்டத்தட்ட இதே நிலைதான் பக்கத்து மாவட்டமான கோவையிலும். சிறு, குறுந்தொழில் முனைவோர் முடிந்த வரை ஜெனரேட்டர்களில் இயங்க முயன்று முடியாமல், தொழிலை முடக்கிவிட்டதுதான் மிச்சம்.
மின்சாரத்தை மறந்த வட மாவட்டங்கள்
மின்சாரத்தை மட்டுமே நம்பியிருக்கும் தொழில் மாவட்டங்களுக்கே இந்தக் கதி என்றால், வறண்ட பிரதேசமான வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களின் நிலை மகா மோசம். ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து நீரை எடுத்து கிணறுகளில் நிரப்பி, வயலுக்குப் பாய்ச்சினால்தான் இந்த மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியும்.
ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் கூட தொடர்ச்சியாக விவாசாய மின்சாரம் இல்லாத நிலையில் இங்கு விவாசயம் அடியோடு முடங்கிப் போய்விட்டது. ஏரிகள், ஆறுகள், குளங்கள் எதிலும் நீரில்லாததால், பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர் இப்பகுதிவாசிகள். சமயத்தில் தொடர்ச்சியாக 6 மணி நேரங்களுக்கு மேல் மின்சாரமில்லாத நிலை வேலூர் மாவட்டத்தில் நிலவுகிறது.
மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி போன்ற விவசாயம் சார்ந்த மாவட்டங்களில் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நிலவுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் 3 மணிநேரம் முதல் மணி நேரம்தான் மின்சாரமே வருவதாகக் குமுறுகிறார்கள்.
ஆனால் அரசுத் தரப்பில் இந்தக் குமுறல்களைக் கண்டுகொள்வதாகவே இல்லை. பகலில் ஏதோ களவுக்குப் போவதுபோல் வரும் மின்சார வாரிய ஊழியர்கள், வீட்டின் உரிமையாளரைக் கூட அழைக்காமல், கமுக்கமாக மின்மீட்டர் பார்த்து பல ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகக் கணக்கெழுதிக் கொண்டு ஓடுகிறார்கள்.
பணம் கட்ட அலுவலகத்துக்குப் போகும்போதுதான் மின்சாரம் மகா ஷாக்கடிக்கிறது!
-விதுரன்








































































அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்


