ஆஸ்கர் போட்டியிலிருந்து விரட்டப்பட்டது தமிழருக்கு எதிரான ‘டேம் 999′!
Wednesday, January 25, 2012 at 1:18 pm | 491 views
ஆஸ்கர் போட்டியிலிருந்து விரட்டப்பட்டது தமிழருக்கு எதிரான ‘டேம் 999′!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சோஹன் ராயின் மோசடிப் படம் ‘டேம் 999′ இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லை!
முல்லைப் பெரியாறு அணை குறித்து தேவையில்லாமல் பீதியைக் கிளப்பும் வகையில எடுக்கப்பட்ட படம் இந்த டேம் 999. கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர் வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் ஆதரவோடு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.
முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படாவிட்டால், 35 லட்சம் மக்களின் உயிருக்கு ஆதரவு என்ற பொய்யான பிரச்சாரத்தை தாங்கி வந்த இந்தப் படத்தை தமிழக அரசு தடை செய்தது. தமிழகத்தில் இந்தப் படத்தை எங்கும் திரையிட மாட்டோம் என தமிழ் சினிமா விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அறிவித்துவிட்டனர்.
தமிழகம் தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் வெளியான இந்த டேம் 999 எங்குமே வெற்றி பெறவில்லை. கூட்டமே இல்லாததால் கேரளாவில் மூன்றாவது வாரமே தூக்கப்பட்டுவிட்டது இந்தப் படம். மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் முதல் வாரம் தூக்கிவிட்டார்கள். அந்த அளவு தரமற்ற, சிறுபிள்ளைத்தனமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமாக இருந்தது டேம் 999!
இந்த நிலையில் 84வது ஆஸ்கர் விருதுப் போட்டியில் ‘டேம் 999′ படமும் கலந்து கொண்டது. இந்தப் படத்தின் மூன்று பாடல்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருப்பதாக, பீற்றிக் கொண்டார் சோஹன் ராயும் அவரது பிஆர்ஓவும். இந்தப் பட பாடல்களுக்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூறியிருந்தார்.
நேற்று மாலை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாமுயல் கோல்டுவின் தியேட்டரில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் டேம் 999 இல்லை!
சிறந்த படம், பாடல்கள் மற்றும் ஒரிஜினல் இசை ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் போட்டியிட்டது. ஆயினும் இறுதிப் பட்டியலில் இந்தப் படத்துக்கு இடம் தரவில்லை தேர்வுக் குழுவினர்.
இதனால் மோசடி இயக்குநர் சோஹன் ராயின் ஆஸ்கர் கனவு பொய்த்துவிட்டது.
தி ஆர்டிஸ்ட், தி டிசென்டன்ட்ஸ், தி ஹெல்ப், ஹ்யூகோ, மணிபால் உள்ளிட்ட படங்கள் தான் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோடக் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கின்றது.
நிலநடுக்கம் ஏற்படும், முல்லைப் பெரியாறு உடையும் என்று கேரளக்காரர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த டேம் 999 ‘ஆஸ்கர் நிலநடுக்கத்தில்’ சிக்கி சின்னாபின்னமாகிப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
நல்லவேளை.. ஆஸ்கர் விருதுக் குழு தங்கள் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டது!
-என்வழி செய்திகள்






அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




///நல்லவேளை.. ஆஸ்கர் விருதுக் குழு தங்கள் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டது//
மிகவும் சரி.
நல்லவேளை.. ஆஸ்கர் விருதுக் குழு தங்கள் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டது!