முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு? – கேள்வி – பதில் -11

April 9, 2010 by envazhi  
Filed under Questions

நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு? – கேள்வி – பதில் -11

கேள்வி: ஏன் அடிக்கடி ‘கேள்வி – பதில்’ ஆப்ஸென்டாகிவிடுகிறது?

ரஞ்சன்

பதில்: கலைஞர் அளவுக்கு நான் தேர்ந்தவன் அல்ல, நானே கேட்டு.. நானே பதிலும் சொல்ல!

கேள்வி: நித்யானந்தா மீது அப்படியென்ன கடுப்பு உங்களுக்கு?

இரா. வேதமூர்த்தி

பதில்: நித்யானந்தா மீது மட்டுமல்ல… பொதுவாக மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான புரோக்கராய் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் கார்ப்பரேட் சாமியார்கள் யார் மீதும் எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை.

சனாதன தர்மம் பேசும் சங்கராச்சாரிகள் மீதும் நமக்கு கடுகளவு மரியாதையும் கிடையாது.

இவர்கள் மட்டுமல்ல, சட்டத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான காரியங்களை கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் செய்து கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள், போலிப் பாதிரியார்கள், போலி இமாம்கள் என யாரையும் இந்த சமூகம் அனுமதிக்கக்கூடாது என்ற கருத்துக் கொண்ட நமக்கு, நித்யானந்தனும் ஒன்றுதான், கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு குண்டு வைக்கும் தீவிரவாதியும் ஒன்றுதான்.

கேள்வி: நித்யானந்தாவை அம்பலப்படுத்திவிட்டது சன் டிவி. அவர்களுக்குள் இருந்த பகைக்குள் மக்களை பலிகடாவாக்கி விட்டார்கள். இதில் கண்ட பலன் இதுதானே? சட்டப்படி என்ன செய்ய முடிந்தது?

எம் தினகர்

பதில்: சில தினங்களுக்கு முன், மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நான்கைந்து பெண்கள் சற்று சத்தமாக இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்:

“சாமியாராம் சாமியார்… அதான் பார்த்தோமே முந்தா நாள் ராத்திரி. சின்னப் பையனா இருந்தாலும் எவ்வளவு கருத்தா பேசறான்னு பார்த்தா, அவன் சின்னபுத்தி சிரிப்பா சிரிச்சிடுச்சே… இனிமே சாமியார் கீமியார்னு எவனாச்சும் வந்தா, அவன் மேல விழுற முதல் துடைப்பம் நான் போடறதாத்தான் இருக்கும் பாத்துக்க…”

-ஏதோ சுவாரஸ்யத்துக்காக சொன்னதில்லை இது. நிஜமாகவே நான் பார்த்த / கேட்ட ஒரு விஷயம்.

இதற்கு சில நாள்கள் கழித்து, ஜெயங்கொண்டம் அருகே சில பெண்கள் சொன்னது:

“இத பாருங்கடி… இனி சாமிய பாக்க கோயிலுக்குப் போறதோட நிறுத்திக்கணும்… சாமியார பாக்கப் போனா, இப்படித்தான் சந்தி சிரிச்சிப் போகும்…”

கேட்க சந்தோஷமாக இருந்தது.

நித்யானந்தன் விவகாரத்தை பத்திரிகையாளர்கள் மசாலா தடவி எழுதுகிறார்கள், காசு பார்க்கும் ஆசையில் காமம் தடவி எழுதுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டாலும், இந்தச் செய்திகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தோமோ அது ஓரளவுக்கு நடந்திருக்கிறது…. என்ற திருப்தி.

ஆனால் இது போதாது… மக்கள் சாமியார்களை முற்றாக ஒதுக்கித் தள்ள வேண்டும்.

அனைத்துப் பற்றுக்களையும் துறந்த சாமியார்களுக்கு இளம் பெண்களிடத்தில் மட்டும் எதற்கு அளவு கடந்த பற்று?

காசு பணம் சேர்ப்பதில் ஒரு குடும்பஸ்தனைக் காட்டிலும் அதிக வெறி எதற்கு?

ஊரை ஆக்கிரமித்து ஆஸ்ரமம், உலகெல்லாம் கிளைகள் எதற்கு?

கிட்டத்தட்ட ஏரியா தாதாக்கள் போல, ஆளுக்கொரு பகுதியைப் பிரித்துக் கொண்டு ஓடி ஓடி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவது எதற்கு?

இந்தக் கேள்விகளை அனைத்து மக்களும் தீவிரமாகக் கேட்க ஆரம்பித்துவிட்டால் நித்யானந்தன்களும், ஜெயேந்திரன்களும், சதீஷ் (நாராயணி!)களும் உருவாகாமலே போய்விடுவார்கள் அல்லவா!

சட்டம் தன் வேலையை முழுமையாகச் செய்ய காலமாகலாம். ஆனால் அதற்குள் சமூத்தின் மனநிலை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மீடியாவின் ஒரு பகுதி சரியாகவே செய்கிறது.

-வினோ

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில் -6

July 31, 2009 by envazhi  
Filed under Questions

சன்டிவியின் வியாபார உத்தி, எந்திரனை பாதிக்குமா? – கேள்வி பதில்-6

ஈழத் தமிழ்ப் போராளிகளுக்குள் இப்போது மூண்டுள்ள இந்த மோதல் எந்த அளவு தமிழீழ நோக்கத்துக்கு குந்தகமாக அமையும்? ஈழத் தமிழரின் வாழ்வு மலர தாயகத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ப.கலையரசன், pattukalai@yahoo.com

camp-2

குழப்பத்தில்தான் தெளிவு பிறக்கும். இப்போதைக்கு புலத்தில் உள்ள போராளிகள் பிளவுபட்டிருப்பது உண்மையே.

ஆனாலும் இவை அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை, புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே நிலவுகிறது. இது ஒரு தற்காலிக நிலைமைதான். ஆனால் இதெல்லாம் இப்போது முக்கியமில்லை.

இப்போது நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம், முள்கம்பி வேலிக்குள் வாழ்க்கை முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்கான வழிமுறைகளே. நாளும் வருகிற செய்திகள், அந்த மக்களுக்கு உரிமையுள்ள பூமி பறிபோய்க் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. தமிழரின் சொந்த நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் வெகு வேகமாக நடந்து வருகின்றன.

வெறும் பார்வையாளர்களாக அனுதாப வார்த்தை உதிர்ப்பதால் ஒன்றும் நடந்துவிடாது. எனவே ஈழ தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், புலத்தில் உள்ள போராளிகள் மற்றும் உணர்வாளர்களின் இப்போதைய நோக்கம், சிந்தனை, செயல்பாடு இதுவே.

பிரியாணி, நூறு ரூபாய்த்தாள், பிரச்சார பொழுது போக்குகளில் அமிழ்ந்து கிடக்கும் தாயகத் தமிழர்கள் இதற்கு எந்த அளவு உதவுவார்கள் என்பது புரியவில்லை.

மேடைகளிலும், டிவி விவாதங்களிலும், பத்திரிகைப் பக்கங்களிலும் வாய் கிழிய, பேனா முனை மழுங்குமளவுக்கு தமிழுணர்வு என்றும் தமிழ்த் தேசியம் என்றும் முழங்கியவர்கள், ரகசியமாக ஹம்ஸாவின் விருந்தில் கூடிக் குடித்துக் களித்து, கையூட்டோடு வீடு திரும்பும் காலம் நீளும் வரையில், இந்த பிரியாணிக் கலாச்சாரமும் நீளும் என்றே தெரிகிறது.

ஈழத் தமிழரின் இன விடுதலை தாயகத் தமிழர்களால் நடக்காது. அவர்களே கையையூன்றி கரணம் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்!

**********

ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு திமுகவுக்கு உறைக்கும் என்கிறீர்கள்?

மலர், malaredit@gmail.com

karunanidhijayalalitha

நிச்சயம் இல்லைதான். திமுக இப்போது அதையெல்லாம் கவனிக்கிற மனநிலையில் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை வெற்றிகள் மட்டுமே…

ஈழத்தில் தமிழன் செத்தாலும், இங்குள்ளோர் எத்தனையோ பிரச்சினைகளில் தவித்தாலும், தங்கள் இலக்குகளை அடைவதில் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார்கள். இது ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் நிறுவனத் தலைமைக்கே உரிய மனநிலை.

இன்னொன்று, தார்மீகம் பற்றியெல்லாம் ஜெயலலிதா பேசக் கூடாது. கலைஞர் எதிர்வரிசையில் இருந்திருந்தால் இன்று அவரும் ஜெயலலிதா முடிவை எடுத்திருக்க வேண்டியிருந்திருக்கும். 1991-லிருந்து ஜெயலலிதாவின் அரசியலை நாமும் பார்த்து வருகிறோம்.

‘இவருக்கு அவர் பரவாயில்லை… அவருக்கு இவர் தேவலை’ என்று இந்த இருவர் நாடகத்தில் மட்டுமே தமிழர் கவனம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர் திமுக-அதிமுக ‘முதலாளிகள்’.

**********

குப்பை படங்களையெல்லாம் தூக்கி நிறுத்த சன்டிவி பயன்படுத்தும் வியாபார உத்தி, நாளை ‘தலைவர்’ படத்தை பாதிக்காதா?

மணிவண்ணன், powersstar@yahoo.co.in

endhiran-stills1

து ரஜினி – ஷங்கர் படம். அது ஒன்று போதும். சூரியனுக்கு டார்ச் அடிக்க தேவையில்லை என்ற வழக்கமான பழமொழியைத்தான் உங்களுக்கு நானும் சொல்வேன். தங்கள் வர்த்தக உத்திகளைத் தாண்டிய மாபெரும் ஈர்ப்புத் தன்மை இந்தப் படத்துக்கு உண்டு என்பது சன்னுக்கே நன்கு தெரியும்!

**********

தொடர்ந்து தோல்விப்படங்களாகவே வருகின்றனவே… தமிழ் சினிமாவில் அத்தனை கதை / கற்பனை வறட்சியா?

எஸ். சக்திகுமார், shakthi41@hotmail.com

jun06_tamil

விட்டா குடுமி… அடிச்சா மொட்ட… இதுதான் பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்ததெல்லாம்.

பெரிய கார்ப்பரேட் ரேஞ்சுக்கு திட்டமிட்டு, பெட்டிக்கடை வியாபாரம் நடத்தும் விநோதமானவர்கள் இவர்கள். முதல் படத்திலேயே இருந்த மொத்த சரக்கும் தீர்ந்துபோய், இரண்டாவது படத்துக்கே பர்மா பஜார் டிவிடி கடையின் தயவைத் தேடும் இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

முதல் படத்தில் வெற்றி பெற்ற இயக்குநர் நான்கு படங்கள் வரை கூட இன்றைக்கு தாக்குப் பிடிப்பதில்லை. காரணம் படிப்பதில் நாட்டமின்னை, அனுபவ அறிவு இல்லாமை.

சொல்வதெல்லாம் பொய்… சரியான திட்டமிடல் கிடையாது. மதுவுக்கும் மாதுவுக்கும் செய்யும் செலவை படத்தின் நியாயமான விளம்பரத்துக்குச் செய்ய மாட்டார்கள்.  நாடோடிகளின் வெற்றிக்குக் காரணம் சரியான ஸ்கிரிப்ட் மட்டுமல்ல… அதை சந்தைப்படுத்திய முறையும் கூட.

சில பிஆர்ஓக்களின் தவறான வழிகாட்டுதலில் கடைசி நேரத்தில் இவர்களே தங்கள் படத்துக்கு தூக்குக் கயிறு மாட்டி விடுகிறார்கள். அப்புறம் எங்கே உருப்படும் இவர்கள் எடுக்கும் படங்கள்?

**********

வறாக நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற பல ரசிகர்களுக்கு உள்ள சந்தேகம் இது. சுல்தான் வெற்றிப் படமாக அமையும் என நம்புகிறீர்களா?

சிவராம், sivarajini@gmail.com

sultan

ந்தப் படம் வழக்கமான படம் அல்ல… ஆனால் ஒரு ரஜினி படத்துக்கான அத்தனை குதூகலமான அம்சங்களும் படத்தில் இருக்கும். படத்தில் வரும் ரஜினியின் உருவம் அனிமேஷன் என்றாலும், நிஜத்தில் அந்தப் பாத்திரமாக ரஜினிதான் நடித்திருக்கிறார்.

இன்னொன்று இன்றைய தலைமுறைக்கு மிகவும் பரிச்சயமான, கடந்த தலைமுறையை ஆச்சர்யப்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது.

“இந்தியாவில் இதுவரை யாரும் மேற்கொண்டிராத ஒரு வித்தியாசமான, ஆனால் ஜனரஞ்சகமான முயற்சி இது. அப்பாவின் படங்களுக்கே உரிய வெற்றியை நிச்சயம் ஈட்டும்!” என்கிறார் சௌந்தர்யா ரஜினி.

ஒரு ரஜினி ரசிகருக்கு வேறென்ன வேண்டும்… கொண்டாடத் தயாராக வேண்டியதுதானே!

-வினோ

ரஜினி – இளையராஜா நட்பு குறித்து…? – கேள்வி பதில் – பகுதி 5

June 27, 2009 by envazhi  
Filed under Questions

ரஜினி – இளையராஜா நட்பு குறித்து…? – கேள்வி பதில் – பகுதி 5

இளையராஜா – ரஜினி பிரிவு ஏன் என்பதை இப்போது சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கிடையிலான நட்பு பற்றியாவது சொல்லுங்க வினோ…!

எஸ்.கல்யாண சுந்தரம், கரூர்

rajini4
ந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதை விட, சூப்பர் ஸ்டார் ரஜினி சொல்வது பொருத்தமாக இருக்கும் இல்லையா…

இதோ, முன்பு விகடனுக்கு அளித்த பேட்டியில் ரஜினி அவர்கள், தனக்கும் ராஜாவுக்கும் உள்ள நெருக்கம் பற்றி சொன்ன பதில்:

“ராஜா சாரை நான் கூப்பிடறதே ‘சாமி’ன்னுதான். இதோ, இப்போ பெங்களூர் கிளம்பி வர்றதுக்கு முன்னாடி ராஜாவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். திருவாசகத்தைப் போற்றிப் பாடி ஒரு மியூஸிக் ஆல்பம் பண்ணி முடிச்சிருக்காரில்லையா… அந்த மியூஸிக் கேட்டேன்! அப்பிடியே மனசு மிதக்குது. அது சும்மா ஒரு வேலைனு நினைச்சுப் பண்ணியிருந்தா வந்திருக்காது. அதுல பிரமாதமான ஜீவன் இருக்கு… ஒரு தபஸ் மாதிரிதான் அதை செஞ்சிருக்காரு ராஜா!

அதுக்கான விழாவுக்கு நான் வரணும்னு கூப்பிட்டு இருந்தாங்க. ஆனா, விழா நேரத்துல நான் ஊரில் இருக்க மாட்டேன். அதான், அவர் வீட்டுக்கு சந்திக்கப் போயிருந்தேன். எனக்கும் ராஜாவுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. அவர்தான் ரமண ரிஷியின் போட்டோ, புத்தகமெல்லாம் எனக்கு முதல்ல தந்தவர். அதுக்குப் பின்னாடிதான் நான் திருவண்ணாமலை போக ஆரம்பிச்சதெல்லாம்! சினிமாவைத் தாண்டி எங்களுக்குள்ள ஆழமான நட்பு எப்பவுமே இருக்கு!’’”

இது ரஜினி சொன்னது.thiruvasagam-rajini01

இந்தப் பேட்டியில் சொல்லாத ஒரு விஷயத்தையும் செய்தார் ரஜினி. திருவாசகம் விழாவுக்கு தான் வருவது சந்தேகம் என்று சொன்னவர், பின்னர் ராஜாவுக்கே இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில், விழாவுக்கு முதல் போய் நின்று ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் இளையராஜாவுடனான நட்புக்கு அவர் தந்த முக்கியத்துவம். அதை அன்று மேடையிலும் சொன்னார் ரஜினி.

இந்த விழாவுக்கு நியாயமாக கலைஞர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இந்த விழாவைப் புறக்கணிக்கும் விதத்தில், பா விஜய் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்குப் போய்விட்டார். அந்த குறையை, வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஈடு செய்தவர் ரஜினிதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே..!

அந்த விழாவில் தமிழின் பக்தி இலக்கியங்கள் குறித்து அருவி மாதிரி மதிமுக தலைவர் வைகோ பேசிக் கொண்டே போக, அதை ஒரு ரசிகனாக நின்று மேடையிலேயே விசிலடித்து மியூசிக் அகாடமியையே அதிர வைத்தார் சூப்பர் ஸ்டார்.

ராஜாவின் இசை பற்றி முத்தாய்ப்பாக அவர் ஒரு விஷயம் சொன்னார்.

“தயவு செய்து இந்த இசையை சும்மா… ஜாலியா டைம் பாஸுக்காக கேக்கணும்னு நினைக்காதீங்க. அமைதியான தனிமையில் மனதை ஒரு நிலைப்படுத்தி, கண்களை மூடி இந்த இசையைக் கேளுங்கள். உங்கள் மனசு சுத்தமாகிவிடும். அதுதான் ராஜா சாரோட இந்த இசைக்குள்ள சக்தி…” என்று மனதார அனுபவித்துப் பேச, ராஜா அதை நெகிழ்ந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தார்.

திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுவதையும் தாண்டிய ஒரு அழுத்தமான நட்பு, புரிந்துணர்வு அவர்களுக்குள் உண்டு என்பதை உணர்த்திய நிகழ்வு இது!

மீதி கேள்விகள்- பதில்கள், நாளை…

-வினோ

எம்ஜிஆரும் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி பதில் – 3

May 8, 2009 by envazhi  
Filed under Questions

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி  பதில் -3

நாளை வா.. என்று சனி பகவானை டபாய்த்த வினாயகரின் கதை போலாகிவிட்டது, ‘கேள்வி பதில் பகுதி நாளை வெளியாகும்’ என்ற உங்கள் அறிவிப்பு’ என அன்புடன் நம்மைக் கடிந்து கொண்ட நண்பர்களின் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறோம்.

நண்பர்களே… தேர்தல் முடியும் வரை ஒரு பத்திரிகையாளனான நமது நேரம் நம் வசமில்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதி காத்தமைக்கு நன்றி.
இனி இடைவெளியின்றி, பதில்கள் தொடரும். உங்கள் கேள்விக் கணைகளைத் தொடரலாம்…

வாழ்க்கையில் வெற்றி பெறுவது கஷ்டம்… அப்படியே வெற்றி பெற்றாலும் அதைத் தக்க வைத்துக் கொள்வது மிக கஷ்டம். அப்படியே தக்க வைத்துக் கொண்டாலும் அதைவிட பெரிய வெற்றிகளைத்தொடர்ந்து பெறுவது கஷ்டம்.

ஆனால் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்?

ஒருமுறை விழுந்தாலும் அடுத்த முறை அதைவிட மிகப் பெரிய உயரத்துக்கு எழுகிறாரே… எப்படி சாத்தியம் இது? எப்படி நானும் ஒரு ரஜினிகாந்த் ஆவது?

கோகுலன், rajini_kogulan@yahoo.com

‘இஷ்டத்தோட கஷ்டப்படு… நினைச்சது நடக்கும்’ – இது ரஜினி சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களில் ஒன்று.
ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் ஒரே நாளில் உருவானவர் அல்ல. பொற்கொல்லனிடம் நிறைய அடிகள் பட்டு ஜொலிக்கிற தங்கத்தின் நிலைதான் ரஜினியின் நிலையும்.padayappa_big1

இந்த அந்தஸ்தை அடைய அவர் செலுத்திய உழைப்பு, இழந்த விருப்பங்கள், தாங்கிய வலிகள்… நிச்சயம் கொஞ்சமல்ல. ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்…

விழாக்கள், சந்திப்புகள் என தொடர்ச்சியான வேலைப் பளுவை முடித்துக் கொண்டு விடியற்காலையில் 4 மணிக்குத்தான் படுக்கப் போயிருப்பார் ரஜினி. நன்கு அசந்து தூங்கும் நேரம். ஆனால் அடுத்த நாள் 7 மணிக்கு ஷூட்டிங் இருக்குமாம். சரியான நேரத்தில் எழுப்புவதற்கென்றே ஒரு உதவியாளர் இருப்பார். ஒரு கூஜா ஐஸ் தண்ணீரை அவர் முகத்தில் தெளித்து எழுப்பிவிடுவாராம். இதைச் செய்ய உதவியாளருக்கு பயமாக இருந்தாலும் அவரது வேலை அதுதான் என்பதால் மிகுந்த தயக்கத்துடனே செய்வாராம்.

1998-ல் ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஒருவர் சொன்ன தகவல் இது. பிலிமாலயா பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் ரஜினிக்கு நன்கு தெரிந்த மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவருமான திரு.ராதாராஜ் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

தான் ஒரு சூப்பர் ஸ்டார், நினைத்த நேரத்தில் போனால் கேட்பவர் யாருமில்லை என்ற மிதப்பில் அவர் ஒரு நாளும் படப்பிடிப்புக்குப் போனதில்லை. இன்று வரை அதுதான் நிலைமை.

தனக்கான நேரம், வாய்ப்பு வரும்வரை காத்திருக்கும் பொறுமையும், எதிரிகளையும் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளும் அவரது பெருந்தன்மையும்தான், எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியிலிருந்தும் அவரை எழ வைத்து, புதிய கிரீடங்களைச் சூட வைத்துள்ளது.
இந்தப் பண்புகளில் பத்தில் ஒரு மடங்காவது நீங்களும் வளர்த்துக் கொண்டால், உங்கள் துறையில் நீங்களும் சூப்பர் ஸ்டார்தான்!

************

இந்தியாவின் இன்றையப் பொருளாதார நிலை என்ன? வீழ்ச்சி நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? வேலைவாய்ப்பு நிலை என்ன?

சாரு, _________
மேற்கத்திய நாடுகளில் இத்தனை காலமும் பாடாய்படுத்தி வந்த பொருளாதார மந்தம் இப்போது இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது உண்மையே.

முதல்முறையாக மீடியாவிலேயே இதன் தாக்கம் அதிகமாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. என்டிடிவி நிறுவனம் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஊழியர்களையும், டைம்ஸ் ஆப் இந்தியா நூறுக்கும் அதிகமான ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

இதற்குக் காரணம், அந்நிய பொருளாதாரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது நாடு சார்ந்திருக்கத் தொடங்கியதே. சுய அடையாளம், சுய முயற்சிகள், சுய நிறைவு இந்த மூன்றும் இல்லாத பொருளாதாரத்துக்கு ஏற்படும் கதிதான் இப்போது இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

விவசாயம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசுகள் உண்மையைச் சொல்லி மக்களை சுய நிறைவுக்கான முயற்சிகளில் ஈடுபட வைக்காமல், ஓட்டுப் பொறுக்கிகளாக மாறி, மக்களுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து வருகின்றன. இதனால் பாதிப்பின் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும்.

*************

ரஜினி ரசிகன் என்ற கோணத்தில் அல்லாமல், தமிழர்கள், தமிழ் ஈழம் மற்றும் தமிழ்நாடு என்ற பார்வை இந்த தளத்தின் பின்னணியில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு வருமா?

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநிலத்துக்கு முதல்வரானதை இந்தியாவில் வேறு மாநிலத்தில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இந்தக் கருத்துக்கு நான் எதிரானவன் இல்லை என்றாலும், மொழி-இன உணர்வு என்று வரும்போது எல்லோரும் ஓரணியில் திரண்டுவிட, தமிழனிடம் மட்டும் அந்த உணர்வே இல்லையே..

ஜனா , rathernot@sorry.com

என்ன ஜனா… நமது தளத்தைப் பார்த்த பின்னும் இந்த சந்தேகம் வருவது நியாயமா…? (நிறைய கேள்வி கேட்டிருக்கீங்க.. ஒவ்வொண்ணா எடுத்துக்கிறேன்!)

இரண்டாவது கேள்விக்கு ஏற்கெனவே பதில் கூறியிருக்கிறோம். எம்ஜிஆர், ரஜினி வேறு மாநிலத்துக்காரர்கள் என்ற பார்வையிலேயே இந்த கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன என்பது நமக்கும் தெரியும்.  எம்ஜிஆர் பிறப்பால் மலையாளி என்று கூறப்பட்டாலும், முழுக்க முழுக்க தமிழராகவே, இன உணர்வு மற்றும் மொழி உணர்வுடன் வாழ்ந்தார். எத்தனை முதல்வர்கள் ஆண்டிருந்தாலும் காமராஜருக்குப் பின் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தை மட்டுமே தமிழகத்தின் நிம்மதியான ஆட்சிக் காலம் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். உண்மையும் அதுதான்.

ரஜினி பிறப்பால் வேறு இனமாக இருக்கலாம்… ஆனால் உணர்வால், மொழிப்பற்றால், மனிதாபிமானத்தால் மிகச் சிறந்த தமிழராகவே வாழ்பவர்.

இனம் மொழிக்கு அப்பாற்பட்டு, நல்லவர் பின்னால் நாடு நிற்கும் என்பதற்கு இந்தியாவில் ஏற்கெனவே பல உதாரணங்கள் உண்டு. ஒரு வங்காளி திரிபுராவுக்கு முதல்வராகவில்லையா?

சுதந்திரத்துக்குப் பின்னும், வெள்ளையரான மவுண்ட்பாட்டனை வேண்டி விரும்பி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக அமர்த்திப் பார்த்த நாடுதான் இது!

mgr-rajini

*************

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும் சந்திச்சி பேசி இருக்காங்களா ?

புயலமன், puyalaman@yahoo.co.uk

எம்ஜிஆர் – ரஜினி இருவருக்கும் ஆரம்பகாலத்தில் பெரிய அளவு நெருக்கம் ஏதுமில்லை என்றாலும், பின்னாளில் தனது ஆஸ்தான பட நிறுவனமான சத்யா ஸ்டுடியோ மூலம் பெரும் வாய்ப்புகளை ரஜினிக்கு உருவாக்கிக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன் மற்றும் பாட்ஷா படங்கள் ரஜினியின் திரையுலகப் பயணத்தில் மைல்கற்கள். எம்ஜிஆர் ஆசி இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

இருவரையும் பற்றி பல்வேறு செவி வழிக் கதைகள் சொல்லப்பட்டாலும், அவற்றையெல்லாம் பொய்யென நிரூபித்தது எம்ஜிஆர் மீது ரஜினி வைத்திருந்த மதிப்பும், அதை இன்று வரை தன் படங்களில் ரஜினி வெளிப்படுத்தி வரும் விதமும்.

ரஜினி – கமல் தலைமையில் திரையுலகமே கூடி எம்ஜிஆருக்கு விழா எடுத்ததை மறந்திருக்க மாட்டீர்கள். ஈழப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக எம்ஜிஆரைச் சந்தித்துப் பேசியுள்ளார் ரஜினி. தனிப்பட்ட முறையில் ஒரே ஒரு முறை ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆரைச் சந்தித்து ரஜினி பேசியதாகவும் சொல்கிறார் ‘இதயக்கனி’ ஆசிரியர் எஸ். விஜயன்.

*************

மேக்கப் போடாமல் நடிப்பது எப்படி?

பதி, kpathian@yahoo.co.in

அரசியல் – சினிமாவையெல்லாம் தாண்டி, நமக்குள்ளேயே நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்!

*************

விடுதலை புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல என்று நீங்கள் கூறி வருகிறீர்கள்.

ஆனால் அவர்கள் செய்த கொலைகளை பார்க்கும் போது ஒரு விடுதலை இயக்கம் செய்த செயல்கள் போலவா இருக்கிறது, போரில் போர் வீரர்களை தானே தாக்க வேண்டும், நாட்டின் ஜனாதிபதியையும், மந்திரிகளையும் கொலை செய்வது என்ன மரபு, மற்ற தீவிரவாத இயக்கங்களை விட பயங்கரவாத அமைப்பு போலதானே இருக்கிறது.

நாளை இவர்களை நம்பி நம் தமிழ் மக்களை எவ்வாறு விட முடியும். தனி ஈழ கோரிக்கை நியாயம்தான், அனால் அதை கையாளும் முறை சரி என்று உங்களுக்கு உண்மையிலேயே தோன்றுகிறதா?

பிரசாத், prasad.kumar@ge.com

photo11

இந்தியாவுக்குதான் புலிகள் தீவிரவாதிகள். ஆனால் ஈழத்து மக்களுக்கு ஒரே நம்பிக்கை புலிகள் மட்டுமே. தனி நீதிமன்றம், தனி போலீஸ், போக்குவரத்து, வரிவிதிப்பு, கல்வித்துறை, முப்படைகள் என ஒரு பக்கா அரசாங்கத்தை ஈழத்தில் நடத்தியவர்கள் புலிகள். இதையெல்லாம் தமிழர்களின் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் இல்லாமலா நடத்தியிருப்பார்கள்!

அமைதிக்காலம் என்ற பசப்பு வார்த்தையில் சிக்கிய புலிகள், அதன் பிறகு ஜனாதிபதி, மந்திரிகளை கொல்லவில்லை. அதற்கு முந்தைய அத்தகைய கொலைகளின் போது புலிகள் ஒரு கொரில்லா இயக்கம். கொரில்லா இயக்கத்துக்கு இந்த வரையறையெல்லாம் கிடையாது. அதை தங்கள் இயக்கத்தின் வலுவைக் காட்டவும், தமிழர் கோபத்தைக் காட்டவும் புலிகள் பயன்படுத்தினர்.

மரபு ரீதியான ராணுவமாக புலிகள் மாறிய பிறகு, தேர்ந்த ராணுவ போர் முறைகளையே புலிகள் கடைப்பிடித்தனர். அப்பாவி சிங்களர்களைக் கொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்பம் எவ்வளவோ இருந்தும், தங்கள் எதிர்ப்பை பெட்ரோல் கிடங்குகளைத் தகர்ப்பது, வரிவிதிப்பு மையத்தைத் தாக்குவது… இப்படித்தான் புலிகள் காட்டி வந்தனர்.

ஆனால் இலங்கை ராணுவமோ, அப்பாவி தமிழர் மீதும், தமிழர் தலைவர்கள் மற்றும் தளபதிகள் மீதும் குண்டுவீசித் தாக்கிக் கொன்றது.

‘புலிகளை நம்பலாம்… நிர்வாகத்தைத் தரலாம். மிகச் சிறந்த நிர்வாக முறையைத் தரும் வல்லமை, புத்திசாலித்தனம் மிக்கது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த சான்றிதழ் நாம் தருவதல்ல…’ பிரான்ஸ், பிரிட்டன் போன்ற வெளிநாட்டவர்கள் தந்தது.

**************

கலைஞர் அவர்களின் உண்ணாவிரதம் நாடகம் இல்லையா?
தமிழக முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த போது காங்கிரஸ்சிடம் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று மிரட்டியதாக கூறப்பட்ட செய்தி உண்மையானதா?

செந்தில் மோகன் கே ஏ, senthilmka@gmail.com

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல உண்மையிலேயே பொருத்தமான நேரம் இதுவே. உண்மையில் ஈழ விவகாரத்தில் தமிழக அரசின் திடீர் மெத்தனம், அவ்வப்போது ஏற்படும் புரியாத திடீர் வேகத்துக்கு பலருக்கும் காரணம் தெரியாது. ஆனால் மீடியா நண்பர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை ஒன்றுண்டு.karu-stat1

ஈழ விவகாரத்தில் ஸ்டாலின் நிலைப்பாடும் கலைஞர் நிலைப்பாடும் நேர் எதிர். கலைஞரையும் மீறி, ‘ஈழத்துப் போரை சீக்கிரம் முடித்து வைக்குமாறு’ இந்திய அரசுக்கு இணக்கமான ஒத்துழைப்பைக் கொடுப்பதே ஸ்டாலின்தான் என்று வலுவான ஆதாரங்களுடன் திமுக பகுதிச் செயலாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். அது பெரிய அதிர்ச்சிதான். இது பலருக்குத் தெரிந்தும், சின்ன பத்திரிகைகள் மட்டும் செய்தி வெளியிடுவதும் மற்றவை அமைதி காப்பதும், அதைவிடப் பெரிய அதிர்ச்சி.

ஸ்டாலினையும் மீறி, கலைஞர் உண்ணாவிரதமிருந்ததற்குக் காரணம், ஈழத் தமிழர்கள் படும் கொடுமைகளை வீடியோ வடிவில் அவர் பார்க்க நேர்ந்ததும், தமிழ் உணர்வாளர்கள் சிலர் வைத்த உருக்கமான வேண்டுகோளும்தான். ஆனால் கலைஞர் சொன்னதுபோல இது ஒன்றும் திட்டமிடப்படாமல் நடந்ததல்ல. கலைஞர் உண்ணாவிரதமிருக்கப் போகிறார் என்பது முன்கூட்டியே மாவட்ட அளவில் தெரிந்து விட்டது. காலை 6 மணிக்கெல்லாம் பல மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் பந்தல் ரெடியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கலைஞர் அழுத்தம் கொடுத்ததும்,  அதற்கு கூட்டணி மறுபரிசீலனை என்ற அஸ்திரத்தை ஏவியதும்கூட உண்மையே என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். ஆனால் காங்கிரஸின் நரித்தனம், மூப்பின் இயலாமை மற்றும்  குடும்ப பாசம் போன்றவை அவரது தமிழின உணர்வை, ‘மழை விட்டாலும் தூவானம் தொடரத்தானே செய்யும்’ என சொல்ல வைக்கும் அளவுக்கு மாற்றிவிட்டது!

**************

தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வரவே வராதா?

சக்திகுமார், shakthi41@hotmail.com

pasanga0011
நல்ல தமிழ்ப் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளன. என்ன… ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை!

ஒரு நல்ல படம் வந்தால் தொடர்ந்து நாற்பது மோசமான படங்கள் வருவதுதான் சாபக்கேடு. இப்போது வந்துள்ள நல்ல படம் ‘பசங்க’. பார்த்துட்டு சொல்லுங்க!

-வினோ

இதற்கு முந்தைய கேள்வி பதில் பகுதியைப் படிக்க…

தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2

கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! - பகுதி 1


தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2

April 26, 2009 by envazhi  
Filed under Questions

தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2

கேள்வி பதில் பகுதிக்கு வாழ்த்துச் சொன்ன, லேட்டாயிடுச்சே என்று குறைபட்டுக் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.  நேற்றைய கேள்வி பதில்களின் தொடர்ச்சி…

நேற்றைய தொடர்ச்சி…

தமிழன் என்று அடிக்கடி சொல்பவர்தான் தமிழனா? தமிழ்நாட்டுல பொறந்தாதான் தமிழனா? பெரியார் புகழ் பாடறவங்க மட்டும்தான் தமிழனா?

தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார்களே… முதல்வர் என்பவர் முதன்மை வேலைக்காரர்தானே… அவருக்கு கீழ் நிறைய மந்திரிகள், எம்எல்ஏக்கள், அலுவலர்கள் என இருப்பவர்களும் வேலைக்காரர்கள்தானே… அப்போ பகுத்தறிவாளர்கள் முட்டாள்களா?

வேலைக்காரன்னு மரியாதை இல்லாம பேசறானேன்னு நினைக்க வேண்டாம். மக்கள் பணத்தில் நடப்பதுதானே அரசாங்கம்… என் காசை எனக்கு செலவழிக்கிற கணக்குப் புள்ளை, வேலைக்காரர்தானே! (பதில் சொல்லலேன்னா கமெண்ட் போட்டே நோகடிச்சிடுவேன்!)

டி.சுப்பிரமணியன், subramaniam.thirunavukkarasu@gmail.com

rajinikanth_with_karunanathiஇருங்க… இருங்க… கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்.

யார் தமிழன்?

தன்னை எப்போதும் ‘தமிழன்… தமிழன்’ என மாரிலடித்து ஒப்பாரி  வைப்பவன்  அல்ல…  தமிழ்நாட்டில் பிறந்துவிட்டேன் என்று பிறப்புச் சான்றிதழ் காட்டிக் கொண்டிருப்பவனும் அல்ல…

தமிழகத்தில் பிறந்தவன்தான் தமிழனை ஆள வேண்டும் என்பது சட்டமும் அல்ல…

மனதில் நிஜமான இன உணர்வும், தமிழை தன்மொழியாய் நேசித்து தமிழனின் சுக துக்கங்களில் உண்மையாய் பங்கெடுத்துக் கொள்கிற யாரும் தமிழனே.

பிறப்பால் மட்டும் தமிழனாய் இருந்து என்ன பயன்? உணர்வால், உண்மையால், உதவியால் தமிழனாய் இருப்பதே சிறப்பு.

இனத்தைக் காட்டிக் கொடுத்து கட்சித் தலைவனாய், மந்திரியாய், முதல்வனாய் உயர்பவர்கள் இந்த இனத்தில் முளைத்த அவமானங்கள்.

முதல்வர் என்பவர் வேலைக்காரர்தான்… ஆனால் மரியாதைக்குரிய, நம்மையும் அதிகாரம் செலுத்தும் சட்ட அனுமதி பெற்ற வேலைக்காரர். அவருக்குக் கீழே உள்ளவர்களும் அப்படியே. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களுக்காக சட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள மரியாதை அது. நீங்கள் சட்டத்தை மதிப்பவராக இருந்தால், சட்ட அங்கீகாரம் பெற்றவர்களையும் மதியுங்கள்.

நாளை ரஜினி முதல்வராகிவிட்டாலும் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா!

****

இந்தக் கவுண்டமணி என்னதான் பண்றார் தல… சும்மா இருக்கிறதுக்கு ஏதாவது படங்களில் நடிக்கலாமே!

(செல்வபாரதி, selvabharthi3984@gmail.com)

goundarநீங்க நினைப்பது போல வாய்ப்புக்காக அலையும் ரகமில்லை கவுண்டர்.

தான் நினைப்பது போலவே எல்லாம் நடந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் அவருக்கு உண்டு. இப்போதும் நான்கு படங்களில் நடிப்பதாக அவருக்கு நெருங்கிய நமது பத்திரிகையாள நண்பர் சொன்னார்.

‘நான் நடிக்கிறதெல்லாம் உண்மைதான்யா… ஆனால் அந்தப் படங்கள் எப்போ வரும்னுதான் சொல்ல முடியாதே!’ என்றாராம் கவுண்டர் ஒரு முறை நக்கலாக!

******

கருணாநிதி கெட்டவரா? ரொம்ப கெட்டவரா?

தலைவர் குடும்பத்திளிருந்து யார் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர்? அறிவுநிதியா? உதயநிதியா? வேறு எதாவது நிதியா?

அடுத்த தி.மு.க முதல்வர் யார்? அன்பழகனா? ஆற்காடா?

கருணாநிதியின் மிக பெரிய ஜால்ரா யார்?

(பால்பழனி, g4palani@gmail.com)

20-karunanithi6-2001ஆக மொத்தத்தில் அவர் நல்லவரில்லை என்பது நிரூபணமாகிவிட்டதல்லவா… விஷத்தில் கொஞ்சமென்ன, அதிகமென்ன… விஷம் விஷம்தான்.

முதல்வர் பதவிக்கே அங்கு நான்கைந்து வேட்பாளர்கள் முட்டிக் கொண்டிருக்கும்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி பற்றிப் பேசுகிறீர்களே…

கருணாநிதியின் மிகப்பெரிய ஜால்ரா யார் எனும் போட்டியில் இப்போதைக்கு வெற்றி பெற்றிருப்பவர் எம்ஜிஆரால் எக்கச்சக்க பதவி, சொத்து சேர்த்த ஜெகத்ரட்சகன்! (ஒவ்வொரு கேள்வியா கேளுங்க பழனி)

******

தேர்தல் விதி மீறல்கள் குறித்து எங்கே அல்லது யாரிடம் புகார் தரலாம்?

எஸ்.என்.கணேஷ், ganesh_sn@yahoo.co.in

nareshசென்னை வட பழனியில் 100 அடி சாலையில் அமைந்துள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகப் புகார் தரலாம்.
தலைமைச் செயலகத்தின் புகார் பிரிவுக்கும் அனுப்பலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம். மிக அவசரம் எனும் பட்சத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலேயே புகார் தரலாம். தேர்தல் நேரத்தில், ஆணையத்தின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டதுதான் காவல் துறையும்.

*********

ஈழமக்களின் இந்த துயரத்துக்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என்று கூறுவதை ஏற்கிறீர்களா?

பாரதி,  rajinibharathi@hotmail.com
SRI LANKA-UNREST‘நாங்கள் அடிமையாக சந்தோஷமா இருந்தோம். எங்களுக்கு தனிநாடும், சுதந்திர வாழ்க்கையும் வாங்கித்தர வந்த விடுதலைப் புலிகளால்தான் இந்த கஷ்டமெல்லாம்’ என்று சொல்வதற்கு சமமானது உங்கள் கேள்வி.

பேரினவாதமும், இந்திய அரசின் சுயநலமும் கைகோர்த்ததால் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலம் இது.

அதற்கு தோதாக சிக்கியது ராஜீவ் கொலை. இதுபற்றி பெரிய புத்தகமே எழுதலாம். இப்போதைக்கு இது போதும்.

*******
காங்கிரஸ் தனது ஆட்சி முடிவதற்குள் ஈழத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தாலே இலங்கை அரசுக்கு தீவிரமாக தற்போது உதவிக்கொண்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது? இது பற்றி உங்கள் கருத்து…

அன்புடன்… கிரி

menon, narayananகைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா…

ஈழத்தில் வன்னிக் களமுனையில் இந்தியப் படைகள் உள்ளன, இந்திய ஆயுதங்களே நம் உறவுகளைக் கொல்கின்றன என்ற உண்மையை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர். புலிகளும் இக்குற்றச்சாட்டை பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

திரும்பவும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற காங்கிரசின் ‘தன்னம்பிக்கை’யும், தமிழ்நாட்டு அரசியல் மீது சோனியாவுக்குள்ள அசைக்க முடியாத ‘நம்பிக்கையும்’தான், கணவர் கொலைக்குப் பழிவாங்க இந்த சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.

*********

உங்களை மாதிரி ரஜினி வெறியர்கள் எப்போதான் திருந்துவீர்கள்?

அருள்பிரகாஷ், tamilspot@gmail.com

rajini-spl-256x3001ஏன்… எதற்காக… திருந்த வேண்டும்?  ரஜினி ரசிகர்களால் இந்த தேசத்துக்கு என்ன அவமானம் நேர்ந்துவிட்டது…

அல்லது தமிழ்நாட்டில் எத்தனை குடிகள் முழுகிப் போயிருக்கின்றன?

என்னமோ ரஜினியைப் புகழ்கிறவர்கள் தேசத் துரோகிகள் போலவும், இப்படிக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் உலகமகா அறிவுஜீவிகள் என்றும் நினைப்பு.

உண்மையில் ரஜினிக்கு இருப்பவர்கள் ‘ப்ரியர்களே’… வெறியர்கள் அல்ல!

அவரே சொன்னதுபோல இது அன்பால சேர்ந்த கூட்டம்!

ஒரு ரஜினி ரசிகன் தொடர்ச்சியாக செய்கிற நற்பணிகளில் ஒன்றையாவது, வாழ்நாளில் ஒரு முறையேனும் நீங்கள் செய்திருப்பீர்களா தெரியவில்லை. குறைந்தபட்சம் 50 மில்லி ரத்தம் கொடுக்க நீங்கள் தயாரா என உங்களையே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!

(உங்கள் கேள்வியை முழுமையாக வெளியிடாததற்காக சந்தோஷப்படுங்கள்!).

********

சந்திரமுகி படத்தின் டைட்டிலில் கமல்ஹாசனுக்கு நன்றி என போடுகிறார்களே… ஏன்?

(மோகன்குமார், mkumarsrm@gmail.com)

kamalpதனது மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தின் பணிகளை பாதியில் விட்டுவிட்டு, ரஜினி – சிவாஜி குடும்ப நிகழ்வான சந்திரமுகி பூஜையில் கலந்து கொண்டார் கமல்.

மேலும், சந்திரமுகி – மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒரே நேரத்தில் வெளியான சூழலில், சந்திரமுகியை அதிக அளவு திரையரங்குகளில் வெளியிட ஆர்வம் காட்டினார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.

வழக்கமாக கமல் படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்ட திரையரங்குகளும் கடைசி நேரத்தில் சந்திரமுகியைத் திரையிட விருப்பம் தெரிவிக்க, கமலும் தன் நண்பருக்காக விட்டுக் கொடுத்தார்.

அந்த நன்றிதான் டைட்டிலில் தெரிந்தது!

-இது சிவாஜி பிலிம்ஸ் பிஆர்ஓ டயமண்ட் பாபு தெரிவித்தது.

-வினோ

முதல் பகுதியைப் படிக்க…

கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! – பகுதி 1

கேள்வி உங்க வழியில்… பதில் ‘என்வழி’யில்!

April 13, 2009 by envazhi  
Filed under Questions

வணக்கம் நண்பர்களே…

ரு நல்ல வலைதளத்துக்குரிய அனைத்து அம்சங்களுடன் என்வழி.காம் வரவேண்டும் என்பது நமது ஆவல். அதன் விளைவாக இந்த தளத்தில் மேலும் ஒரு புதிய பகுதியாக கேள்வி – பதில்களை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்தப் பக்கத்தில் ரஜினி தொடங்கி ராகவேந்திரர் வரை, சாதாரண செய்திகளிலிருந்து சரித்திர நிகழ்வுகள் வரை, சுனாமியிலிருந்து சும்மா தமாசு வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் அலசலாம்…

கேள்விகளை நீங்கள் envazhi@gmail.com மின்னஞ்சலுக்கோ அல்லது இதே பக்கத்தில் உள்ள கமெண்ட் பகுதியிலோ அனுப்பலாம்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்தக் கேள்விகள் அதற்கான பதில்களுடன் வெளியாகும்.

இந்த கேள்வி பதில்கள் நமது மேதைமையைக் காட்ட அல்ல. எல்லா விஷயங்கள் குறித்தும் எழுதிவிடுவது சாத்தியமல்ல. ‘தெரிஞ்சது கையளவு; தெரியாதது உலகளவு’ என்ற உலக நியதிக்கு உட்படாதவர்களே கிடையாது.

ஒரு செய்தியை அல்லது கட்டுரையை வெளியிடும் போது, நாம் கவனிக்கத் தவறிய அல்லது எழுதுபவருக்கு எழாத சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம். அவற்றுக்கான பதில்களை முடிந்த வரை பெற்றுத் தர முயற்சிக்கிறோம். அந்த வகையில் இது ஒரு பரஸ்பர கற்றல் முயற்சியே.

ஒரு எழுத்தாளரைவிட பத்திரிகையாளனுக்கு உள்ள கூடுதல் சிறப்பு, தகவல்களைப் பெறுவதில் உள்ள சுதந்திரம்தான். அந்த சுதந்திரத்தை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் உபயோகிக்கலாமே!

இனி உங்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்!

குறிப்பு: உங்கள் புகைப்படங்களையும் இணைத்து அனுப்புங்கள். வலையுலக நண்பர்களும் உங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமல்லவா!

குறிப்பு 2: கேள்வி – பதிலின் முதல் பகுதி வரும் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும்.

நன்றி

ஆசிரியர்
என்வழி.காம்
envazhi@gmail.com

Related Posts with Thumbnails