இந்தியாவின் ‘அவதார்’!
இந்தியாவின் ‘அவதார்’!
சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனல் எந்திரன் (ரோபோ) பற்றி ஒளிபரப்பிய ஒரு சி்றப்பு நிகழ்ச்சிக்கு இதுதான் தலைப்பு.
சமீபத்தில் வெளியாகியுள்ள எந்திரனின் இந்திப் பதிப்பான ரோபோ-வின் ட்ரைலர் காட்சிகளைப் பார்த்த பிறகுதான், அந்தத் தலைப்பு எத்தனை அர்த்தமுள்ளது என்பது புரிந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பே கூறியது போல, எந்திரன் – தி ரோபோ, ஹாலிவுட்டுக்கு இந்தியா தரும் பதிலாக அமையப் போவது உறுதி!
ரோபோ இந்தி ட்ரைலர்:
எந்திரன் பிரமாண்ட வெற்றி பெறும்! – ரஜினி பேட்டி!
எந்திரன் பிரமாண்ட வெற்றி பெறும்! – ரஜினி பேட்டி!
திருமலை: எந்திரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோருடன் கார் மூலம் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார்.
திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்குள் சென்ற அவரை, கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
வரவேற்பு முடிந்ததும், வி.ஐ.பி. தரிசனம் வழியாக சென்று இரவு சுமார் 9 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ரஜினிகாந்த்துக்கு லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.
தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரஜினியை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், வரவிருக்கும் எந்திரன், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களிடம் ரஜினி கூறியதாவது:
எனது மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. அதற்காக ஏழுமலையானுக்கு நன்றி செலுத்த குடும்பத்துடன் வந்தேன்.
இம்மாதம் வெளிவர உள்ள ‘எந்திரன்’ படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
‘எந்திரன்’ மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘எந்திரன்’ படம் மாபெரும் வெற்றி பெறவும் ஏழுமலையானை நான் வேண்டிக்கொண்டேன்.
அரசியல் பற்றியெல்லாம் இப்போது எதுவும் பேசும் சூழ்நிலை இல்லை. இப்போதைக்கு அரசியல் மற்றும் எனது அடுத்த படம் பற்றிச் சொல்ல எதுவுமில்லை.
நண்பர் சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்,” என்றார் ரஜினி.
ரஜினியைக் கண்டதும், ‘சூப்பர் ஸ்டார் வாழ்க’, ‘ரோபோ, ரோபோ’, ‘இனிய எந்திரா’ என ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க முயன்றனர். அவரும் முடிந்தவரை சிலருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கூட்டம் அலைமோதியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தில் பிரமிக்க வைக்கும் எந்திரன் விற்பனை… மதுரை ஏரியா ரூ 13 கோடி!!
தமிழகத்தில் பிரமிக்க வைக்கும் எந்திரன் விற்பனை… மதுரை ஏரியா ரூ 13 கோடி!!
ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே வாய் பிளந்து பார்க்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட வர்த்தகத்தை.
இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து. பிரபல பாலிவுட் இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், ரோபோ (இந்தி) படம் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகவும், ரோபோ வெளியீட்டாளர் வீனஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் எந்திரன் வினியோக உரிமை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை மாநகர விற்பனை உரிமையை இதுவரை யாருக்கும் தரவில்லை சன் பிக்சர்ஸ். முதல் போணியாக மதுரை ஏரியாவை ரூ 13 கோடிக்கு விற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை வாங்கியிருப்பவர் பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்புவின் தம்பி அழகர். இந்த விலை பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. மதுரையே இந்த விலை என்றால், சென்னை உரிமை இதைவிட இருமடங்காக இருக்குமோ என்ற கேள்விதான் இப்போது விநியோகஸ்தர்கள் மத்தியில்!
அடுத்து என்எஸ்ஸியை விலைபேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மொத்த ஏரியாக்களும் விற்று முடியும் போது எந்திரனின் விற்பனை, இந்திய சினிமாவுலகம் பார்த்திராத சாதனை விலையைத் தொட்டிருக்கும் என்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை யாருக்கு என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் எந்திரன் விலை எங்கேயோ போய்விடும்…!
ரிலீஸ் தேதி?
இதற்கிடையே எந்திரன் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவான பதிலை திரையரங்கு உரிமையாளர்களுக்குச் சொல்லவில்லையாம் சன் பிக்சர்ஸ்.
“முன்பு செப்டம்பர் 24-ம் தேதி ரிலீஸ் என்றார்கள். ஆனால் இப்போது அந்தத் தேதியில் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.
செப்டம்பரிலேயே ரிலீஸ் ஆகிவிட்டால் தீபாவளி வரை வேறு படங்கள் இருக்காது…”, என்றார் விநியோகஸ்தர் ஒருவர்.
நண்பர்களுக்காக ரஜினி நடித்த ‘எக்ஸ்க்ளூசிவ் படம்’!
August 20, 2010 by envazhi
Filed under கட்டுரைகள்
நண்பர்களுக்காக ரஜினி நடித்த ‘எக்ஸ்க்ளூசிவ் படம்’!
நட்புக்கு மரியாதை செலுத்துவதில் ரஜினிக்கு நிகர் அவர் மட்டும்தான். பாபா படத்தில் ஒரு புகழ்பெற்ற காட்சி…
மனீஷா கொய்ராலாவுக்கு நிச்சயதார்த்தம்… அவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழையும் ரஜினி, அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரையும் யார் என்று விசாரிப்பார்… அக்கா, மாமா, சித்தப்பா என சொந்தம் கொண்டாடியவர்களையெல்லாம் விரட்டியடிப்பார். அந்த நேரத்தில் ‘நண்பன்’ என்பார் ஒருவர். உடனே தலைவர், ‘நீ இருக்கலாம்’ என்று கூறிவிட்டு தொடர்வார்.
விகடனில் இந்த வாரம் ரஜினி பற்றி வெளிவந்துள்ள ஒரு கட்டுரையைப் படித்த போது இதுதான் நினைவுக்கு வந்தது. இனி அந்தக் கட்டுரை…
எந்திரன் ‘மந்திரன்’ ரஜினியின் தாண்டவம் ஆரம்பம்!
கிட்டத்தட்ட இரண்டு முழு வருடங்கள் ‘எந்திரன்’ பணியில் முழுக்க டெடிகேட் செய்த பிறகு, தனக்கான மன திருப்தி சுற்றுப் பயணங்களைத் துவங்கிவிட்டார் ரஜினி. ‘எந்திரன்’ படப்பிடிப்பு சமயம், ரஜினி வெளியில் எங்குமே செல்லவில்லை.
எந்தச் சூழ்நிலையிலும் மாதம் ஒரு தடவை பெங்களூரு நண்பர்களைச் சந்தித்துவிடும் ரஜினி, அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கவில்லை. படப்பிடிப்பு சமயம் முழுக்க, அவர் தங்கியிருந்தது அவருடைய கேளம்பாக்கம் பண்ணை வீட்டில்தான். அப்போது 10 வருடங் களுக்கும் மேலாக அங்கே பணிபுரிந்து வந்த 40-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பண்ணைக்குள்ளேயே ஒரு ஏக்கரில் வீட்டு மனைகள் அமைத்தார்.
செப்டம்பர்-3 ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் திருமணம்!
செப்டம்பர்-10 ‘எந்திரன்’ ரிலீஸ்! இரண்டையும் முடித்துவிட்டு, செப்டம்பர் 23-ம் தேதி ரஜினி செல்ல இருப்பது இமய மலைக்குத்தான். ஆனால், பாபாஜியின் குகைக்கு அல்ல! மாறாக, மானசரோவர் கைலாஷுக்கு. இதற்கான பயண ஏற்பாடுகளைக் கடந்த சில நாட்களில் முடித்துவிட்டார்.
பாபாஜியின் குகைக்குப் போக தனி நண்பர்கள் வட்டத்தை வைத்திருக்கும் ரஜினி, கைலாஷுக்குப் போக, புது நண்பர்களைத் தயார் செய்துவிட்டார். இவர்களில், பிரபல தொழில் அதிபர்களும் அடக்கம். இவர்களும் ரஜினியைப் போலவே அமைதி விரும்பிகள், எளிமை விரும்பிகள்!
வழக்கமாக ஒவ்வொரு புதுப் பட வேலை துவங்கும் முன்னர் மந்திராலயத்துக்குச் சென்று ராகவேந்திரரை நினைத்து மூன்று நாட்கள் தியானம் செய்வார் ரஜினி. ஆனால், ஏனோ ‘எந்திரன்’ பட வேலைகள் துவங்கியபோது, மந்திராலயம் செல்லவில்லை. ஆனால், ‘எந்திரன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது!’ என்று அதிகாரபூர்வமாக ஷங்கர் அறிவித்த அன்று மாலையே மந்திராலயம் கிளம்பிவிட்டார் ரஜினி. வழக்கம்போல மூன்று நாட்கள் அங்கே தியானம்.
பிறகு, ஒரு டாக்ஸி பிடித்து பெங்களூரு சென்றவர், அங்குள்ள தனது ரேஸ்கோர்ஸ் சாலை ஃப்ளாட்டில் தங்கவில்லை. பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ள மிகச் சாதாரண லாட்ஜில் இரவு 11 மணிக்கு அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். அவர் பெங்களூரு வந்திருக்கும் தகவலை கலாசிபாளையம் பஸ் டெப்போவில் இருந்த மெக்கானிக் ஒருவரிடம் மட்டும் தெரிவித்து, வரச் சொல்லி இருக்கிறார். ரஜினி கண்டக்டராக இருந்த சமயம் பழக்கமாகி, நெருக்கமான நண்பரானவர் இவர்.
இரவு முழுக்க அவருடன் பால்ய கால நினைவுகளைப் பேசி மகிழ்ந்தவர், கொஞ்சமே கொஞ்சம் கண் அசந்துவிட்டு, அதிகாலையில் விறுவிறு சுறுசுறுவெனப் புறப்பட்டார். கலாசிபாளையத்தில் இருக்கும் ஓர் உணவகத்தின் பின்புறம் காரை நிறுத்தச் சொன்ன ரஜினி, பின் வாசல் வழியே முதலாளி கோபிநாத்தின் அறைக்குச் சென்றிருக்கிறார்.
ரஜினியைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத கோபிநாத்துக்கு ஆச்சர்யம்!
கலாசிபாளையம் பஸ் டெப்போவில் ரஜினி பணிபுரிந்த சமயத்தில், அவர் டாப் அடிப்பது பெரும்பாலும் அந்த உணவகத்தில்தான். ரஜினியை சென்னைக்குச் செல்லத் தூண்டியவர்களுள் கோபிநாத்தும் ஒருவர். சூடான மசால் தோசை பரிமாறினார்கள் ரஜினிக்கு. தோசையை ருசித்தவாறே கோபிநாத்திடம் மனம் திறந்து பல விஷயங்கள் பேசி இருக்கிறார் ரஜினி.
எப்படியோ ரஜினியின் வருகை வெளியில் கசிந்துவிட, திமுதிமுவெனக் குழுமிவிட்டார்கள் ஊழியர்கள். வழக்கமாகக் கூட்டம் கண்டால் பதற்றப்படும் ரஜினி, அன்று இயல்பாக அவர்களை எதிர்கொண்டார். அப்போது ஓர் ஊழியர், ஆர்வ மிகுதியில் கோபிநாத் – ரஜினி உரையாடலை வீடியோ பதிவாக் கினார். உடனே ரஜினியிடம் தயக்கம் எட்டிப்பார்த்தது.
‘அட! நீங்களே எப்பவோ வர்றீங்க. மத்த நாள்லாம் நாங்க இதைப் போட்டுப் பார்த்துக்கிறோம். இது ‘எந்திரன்’ எங்களுக்காக நடிக்கிற எக்ஸ்க்ளூசிவ் படமா இருக்கட்டும்’ என்று சுற்றி இருப்பவர்கள் சமாதானப் படுத்தவும், சிரித்துக்கொண்டே சம்மதித்திருக்கிறார். 15 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு அந்த உரையாடலை வீடியோவாக்கினார்கள்.
‘எந்திரன்’ படம் வெளியானவுடன் கோபிநாத் அதை எடிட்டிங், மிக்ஸிங் செய்து வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுடனான அனுபவங்கள் சிலவற்றையும் அந்தச் சந்திப்பின்போது ரஜினி பகிர்ந்துகொண்டாராம். அதுவும் பதிவு செய்யப்பட்டு இருந்தால், அந்த ரகசிய வீடியோவும் பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள் ரஜினியின் பெங்களூரு நண்பர்கள்!
நன்றி: ஆனந்த விகடன்
எந்திரன் பாக்ஸ் ஆபீஸ்… ரிலீஸுக்கு முன்பே சாதனை மேல் சாதனை!
எந்திரன் சென்னை உரிமை… முட்டி மோதும் விநியோகஸ்தர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் அதை நிரூபித்து வருகிறார் ரஜினி. இதே இப்போது எந்திரன் முறை!
தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.
ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள்.
எந்திரனின் தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது.
இந்தப் படத்தின் விநியோக உரிமையை பக்கத்து மாநிலங்களில் பெரும் விலைக்கு விற்றுள்ளது சன் பிக்சர்ஸ். தெலுங்கில் ரூ 33 கோடி, கர்நாடகத்தில் ரூ 9.5 கோடி, கேரளாவில் ரூ 6 கோடி என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை கதிகலங்கடிக்கும் விலைக்கு விற்பனையாகியுள்ளது எந்திரன்.
இந்திப் பதிப்பை வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் கைமாறிய தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இதுவரை தமிழகம் மற்றும் உலக உரிமை விற்பனை விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆனால் எந்தப் பகுதியும் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.
குறிப்பாக சென்னை நகர உரிமையைப் பெறுவதில் பெரும் விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். ரஜினியின் சிவாஜி பட சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார். வாங்கிய விலையை விட இருமடங்குக்கும் அதிகமாக வசூல் பார்த்தார். அந்த நப்பாசையில் எந்திரன் உரிமையைப் பெற்றுவிடத் துடிக்கிறாராம். அவரைப் போலவே இன்னும் பலரும் மோதுவதால், சன் தரப்பு அமைதி காக்கிறது.
“ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்… எந்திரன் சென்னை விற்பனை உரிமை என்பது தமிழ் சினிமா கனவிலும் நினைத்திராத பெரும் விலைக்குக் கைமாறவிருக்கிறது. அதே போல, சென்னை நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகப் போகிறது… இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக… அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி… வேறு யாராலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது” என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.
பத்தில் நான்கு இடம் எந்திரன் பாடல்களுக்கே!
பத்தில் நான்கு இடம் எந்திரன் பாடல்களுக்கே!
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படப் பாடல்கள்.
தமிழில் டாப் 10 பாடல்களில் முதல் நான்கு இடங்களை எந்திரன் பாடல்களே பிடித்துள்ளன.
தமிழ்சினிமா டாப் 10-ல் கிளிமாஞ்சாரே… பாடல் தொடர்ந்து இரு வாரங்களாக முதல் இடத்தில் உள்ளது. அரிமா அரிமா பாடல் இரண்டாவது இடத்திலும், காதல் அணுக்கள் மூன்றாம் இடத்திலும், இரும்பிலே ஒரு இதயம்… பாடல் நான்காம் இடத்திலும் உள்ளன.
மிர்ச்சி டாப் 10-ல் கிளிமாஞ்சாரோ முதல் இடத்திலும், மற்ற மூன்று பாடல்கள் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களிலும் உள்ளன.
இந்தியிலும் எந்திரன் பாடல்கள் புதிய சாதனைப் படைத்துள்ளன. வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியில் அரிமா அரிமா மற்றும் ரஹ்மான் பாடியுள்ள பாடல் பெரும் வெற்றியடைந்துள்ளன. ரஜினி நடித்த படம் ஒன்றின் பாடல்கள் இந்த அளவு இந்தியில் பேசப்படுவது இதுவே முதல்முறை. தெலுங்கில் ஏற்கெனவே பரபரப்பான விற்பனையில் உள்ளன எந்திரன் ஆடியோ சிடிக்கள்.
எந்திரனுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் தமிழில் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தமாகவில்லை. அவர் கைவசம் உள்ள இன்னொரு தமிழ்ப் படம் ரஜினியின் சுல்தான் தி வாரியர் மட்டுமே. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கூட இந்த முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
எந்திரன் – புதிய, எக்ஸ்க்ளூஸிவ் படங்கள்!
எந்திரன் – புதிய, எக்ஸ்க்ளூஸிவ் படங்கள்!

-என்வழி ஸ்பெஷல்
சீனாவிலும் சூப்பர் ஸ்டாரின் புகழ்!
சீனாவிலும் சூப்பர் ஸ்டாரின் புகழ்!
ரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான ‘சைனாடெய்லி’ பத்திரிகை ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினி நடித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான எந்திரன் மற்றும் பஸ் கண்டக்டராக இருந்து சர்வதேச புகழ் பெற்ற நடிகராக உள்ள அவரது சிறப்புகள் குறித்து எழுதியுள்ளது.
“ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்திய ரசிகர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி” என அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது சைனாடெய்லி.
மேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ரூ 165 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன் திரைப்படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம். தெலுங்கில் இந்தப் படத்தின் விற்பனை புதிய சாதனையைப் படைத்துள்ளது. தெலுங்கிலேயே தயாரிக்கப்பட்ட படம் கூட இந்த விலைக்கு விற்பனையானதில்லை.
இன்கா நாகரீகத்தின் சின்னங்கள் அமைந்துள்ள மாச்சு பிக்குவில் படமாக்கப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் என்ற பெருமையும் எந்திரனுக்கே உண்டு.
இந்தப் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெயிலர்களைப் பார்க்கும் போதே தெரிறது, இந்தியாவின் மிக ஸ்டைலான, ஆடம்பரமான படம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார் பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ்.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், ரோபோவின் விற்பனை மற்றும் புகழுக்கு முதன்மையான காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். எழுபதுகளில் ஆரம்பித்த அவரது அபார நடிப்பு மற்றும் ஸ்டைல்கள் இன்னமும் இந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்துகின்றன.
150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினிகாந்த், ஒரு பாயும் புலியைப் போல திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பெரிய பெரிய கட் அவுட்டுகள், பேனர்கள் என தங்கள் உற்சாகத்தை அவர்கள் பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறார்கள்.
“இந்தியா மட்டுமல்ல, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்… இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. அவர் மிகச் சிறந்த நடிகர்… மக்கள் இதயங்களை வென்ற மாபெரும் ஹீரோ” என்கிறார் தரண் ஆதர்ஷ்.
“ஸ்வைன் ப்ளூ, அதிகரிக்கும் தயாரிப்புச் செலவு, மோசமான ஸ்கிரிப்டுகள் என தெலுங்குப் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ரோபோ வெளியாகிறது. இந்தப் படத்துக்குள்ள உள்ள எதிர்ப்பார்ப்பும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் தெலுங்குப் பட உலகுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது”, என அந்தப் பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய, குறிப்பாக தமிழ் நடிகர் ஒருவரைப் பற்றி சீனப் பத்திரிகையில் இத்தகைய சிறப்புக் கட்டுரை வெளியாவது இதுவே முதல் முறை.
ஆங்கில சப் – டைட்டிலுடன் கூடிய எந்திரன் திரைப்படம் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.
-என்வழி
ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்! – தெலுங்கு பட அதிபர்
ரஜினியை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்! – தெலுங்கு பட அதிபர்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் வெளியாகும் முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
ஆடியோ உலகம் இதுவரை காணாத அளவு சிடிக்கள் விற்றுத் தீர்ந்த வண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் மாநிலம் தழுவிய விற்பனை உரிமை பல கோடிகளுக்கு விற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் வெளியாகும் எந்திரன் படத்துக்கு ரூ 30 கோடி விற்பனை உரிமையாக தரப்பட்டுள்ளது. இந்த விலை இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் டப்பிங் படத்துக்கு தரப்பட்டதில்லை. இது ஒரு புதிய சரித்திரம் என்றே தெலுங்கு சினிமா உலகம் வர்ணிக்கிறது.
இந்தப் படத்தை வாங்கியிருப்பவர் சதலவாடா ஸ்ரீனிவாச ராவ். இவரது திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ்தான் வாங்கிருக்கிறது.
எந்த நம்பிக்கையில் ஒரு டப்பிங் படத்துக்கு இவ்வளவு விலை கொடுத்தார் ஸ்ரீனிவாச ராவ்?
“ரஜினி – ஷங்கர் கூட்டணி மேல உள்ள நம்பிக்கைதான். சிவாஜி படம் இங்கே படைத்த வசூல் சாதனையை, பெரிய நடிகர்களின் ஒரிஜினல் தெலுங்குப் படம் கூட செய்ததில்லை. இன்றைய தேதிக்கு நாட்டிலேயே மிகவும் பவர்புல் நட்சத்திரம் என்றால் அது ரஜினி சார்தான். அவரை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். அடுத்து இந்திய அளவில் முதல் நிலைக் கலைஞர்களான ஷங்கர், ஐஸ்வர்யா ராய். ஷங்கர் படங்கள் தெலுங்கில் சோடை போனதே இல்லை.
கலாநிதி மாறன் நிச்சயம் இந்தப் படத்தை பெருமளவில் புரமோட் பண்ணுவார்.
என் கணக்குப்படி ஒரே வாரத்தில் இந்த 30 கோடியை எடுத்துவிடுவேன். ஆந்திர முழுவதும் 600 திரையரங்குகளில் ரோபோவை ரிலீஸ் செய்கிறோம். திருட்டு டிவிடி வராமலிருக்க போதிய நடவடிக்கையும் எடுத்துள்ளோம்” என்கிறார் ஸ்ரீனிவாஸ ராவ்.
கேரளாவில்…
எந்திரன் படம் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாக வெளியாகிறது. தமிழகத்தில் வெளியாகும் நேரத்திலேயே கேரளத்திலும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு சிவாஜிக்கு தந்ததை விட இருமடங்கு விலை தந்துள்ளார் கேரள விநியோகஸ்தர்.
கர்நாடகத்தில் ரூ 8 கோடி
கர்நாடகத்தில் மட்டும் இன்னும் விலை முடிவாகவில்லை என்று தெரிகிறது. சன் பிக்சர்ஸ் ரூ 8 கோடி வரை கேட்பதாகவும், விநியோகஸ்தர்கள் தரப்பில் இதற்கு இணக்கமான பதில் தரப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்…’ – ஒரு ரசிகரின் விமர்சனம்
August 5, 2010 by envazhi
Filed under Fans Activities
எந்திரன் திரைப்பட பாடல் விமர்சனம்!
படம்: எந்திரன்
நடிப்பு: ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்கள்: வைரமுத்து, பா.விஜய், கார்க்கி
இயக்கம்: ஷங்கர்
பாடல்: புதிய மனிதா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஏ.ஆர்.ரகுமான்,கதீஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பொதுவாக ஓப்பனிங் பாடலில் தன் புகழ் மற்றும் தன் ரசிகன் புகழ்பாடும் ரஜினிகாந்த், இதில் வழக்கத்திற்கு மாறாக எந்திரன் புகழ் பாடியிருக்கிறார். பதிலுக்கு இரண்டாவது சரணத்தில் எந்திரன் தன் “எஜமான்” புகழ்பாடுகிறது. சென்டிமென்டாக சிவாஜிக்கு பிறகு பாலு பாடியிருக்கும் இந்த பாடலின் பிரதான அம்சம் வைரமுத்துவின் வரிகள் மற்றும் அறிமுக பாடகி கதீஜாவின் குரல். நல்ல பயிற்சியோடு பிற இசையமைப்பாளர்களிடமும் தொடர்ந்து பாடினால் கதீஜாவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.
“ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி, ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி” போன்ற தனது ஸ்பெஷாலிட்டி வரிகளைக் காட்டிலும் “கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும், அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை”, “ஆண் பெற்றவன் ஆண்மகனே”, ” என் தந்தை மொழி தமிழ் அல்லவா” போன்ற வரிகளில் கவனத்தை ஈர்க்கிறார் வைரமுத்து.
விஞ்ஞானிக்கும் எந்திரனுக்கும் தனித்தனி குரல்களை பயன்படுத்தி வித்தியாசப்படுத்தியிருக்கலாம். பாட்டுக்கு மெட்டு போட்டது போலத் தெரியும் இந்த பாடலின் வரிகளும் மெட்டும் மொத்தப்பாடல் முழுவதும் ஓன்றுடன் ஒன்று ஒடாமல் பயனிப்பது பலவீனம். ஓப்பனிங் பாடலுக்குரிய துள்ளல் இல்லாதது சராசரி ரசிகனுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
பாடல்: காதல் அணுக்கள்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: வைரமுத்து
70 களில் வந்த ராஜா பாடலின் (தேவன் திருச்சபை மலர்களே – அவர் எனக்கே சொந்தம்) சாயலில் தொடங்கும் இந்த பாடல் ரகுமானின் ஸ்பெஷாலிட்டியான பல்லவி சரணம் என்ற கட்டுமானத்திற்குள் அடங்காத அற்புதமான மெல்லிசைப் பாடல். பாடலின் துவக்கத்தில் வரும் மெல்லிய கிடார் இசை மனதை மயிலிறகாய் வருடிச்செல்கிறது. விஜய் பிரகாஷ், ரகுமான் சாயலில் பாடியிருப்பது உறுத்தல். காந்தர்வக் குரலில் மயக்கும் ஷ்ரேயாவிடம் ஏனைய வடமொழி பாடகர்கள் உச்சரிப்பு பயிற்சியே பெறலாம்.
“பட்டாம் பூச்சி கால்களை கொண்டுதான் ருசியறியும்”, “ஓடுகிற தண்ணியில் ஆக்சிஜன் மிக அதிகம்” போன்ற அறிவியல் வரிகள் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் காதல் பாடலுக்கு தேவையில்லாதது. விஞ்ஞானி என்றால் காதல் செய்யும் போது கூடவா அறிவியல் தமிழில் பாடவேண்டும்!
” நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு எந்தன் நெஞ்சம் வீங்கிவிட்டதே” (காதலனை காணத ஏக்கத்தில் விடும் பெரும் மூச்சினால் நெஞ்சஞம் வீங்கி விட்டதாம்) என்ற வரியில் வைரமுத்துவின் அக்மார்க் குறும்பு ரசிக்க வைக்கிறது.
பாடல்: அரிமா அரிமா
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்க்கம்
பாடலாசிரியர்: வைரமுத்து
ரஜினி புகழ்பாடும் கம்பீரமான வரிகளோடு துவங்கும் இந்த காமம் கலந்த காதல் பாடலில் அரிமா அரிமா என்ற வரிகளுக்கு ஏற்ப இசையும் பாடகரின் குரலும் கர்ஜிப்பது ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தும்.
” உன் போல் ஒரு பொன்மான் கிடைத்தால் யெம்மா சும்மா விடுமா?”, “சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில் சட்டென்று மோகம் பொங்கிற்றே” போன்ற காமம் ததும்பாத காதல் வரிகளை வைரமுத்து தன்னுடைய பாணியில் பாடல் முழுவதும் பயன்படுத்தியிருப்பது பாடலுக்கு பெரும் பலம் சேர்க்கிறது. அதை ஹருஹரன் பாடியிருக்கும் விதம் அத்தனை அழகு.
குசேலன் படம் தொடங்குவதற்கு முன்பே எந்திரன் பட வேலைகளை ஷங்கர் துவங்கி விட்டார் என்பதை ஊர் அறியும். இந்த பாடலின் மெட்டும், குசேலன் படத்தில் உள்ள “ஓம் ஷாரரே” என்ற பாடலின் மெட்டும் எப்படி ஒரே மாதிரி அமைந்தது என்பதை ஏ.ஆர்.ரகுமானும், ஜி.வி.பிரகாஷூம் தான் தெளிவு படுத்தவேண்டும். ஒரு வேளை ரகுமானுக்கு தெரியாமலே மெட்டு களவு போகிறதோ என்னவோ?
பாடல்: கிளிமாஞ்சாரோ
பாடியவர்கள்: ஜாவித் அலி, சின்மயி
பாடலாசிரியர்: பா.விஜய்
முதல்முறை கேட்டவுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த பழங்குடிப்பாடல் தான் தற்போதய நிலவரப்படி முன்னனியில் இருக்கிறது.
அதிரடியான இசை, புதுமையான மெட்டு, இதுவரை கேட்டிராத ஒலிக்கோர்வை மூலம் பாடலின் தரத்தை எங்கோ உயர்த்திச் செல்கிறார் ரகுமான். முன்வரிசை ரசிகர்கள் திரையின் முன்னால் ஆடுவதற்கு தோதான பாடல் இது.
வழக்கமாக பெரும்பாலான ஷங்கர் படங்களில் கிளைமாக்ஸ்க்கு சற்று முன்பு வரும் அதிரடிப் பாடலுக்கு அதிரிபுதிரியாக வரிகளை எழுதி கைதட்டல் வாங்கும் கவிஞர் வாலி இந்த படத்திற்கு எழுதாத குறையை அவரது சிஷ்யர் பா.விஜய் தீர்த்து வைக்கிறார். மெட்டிற்கு தேவையான எளிமையான சந்த வார்த்தைகளை எழுதி பாடலை மெருகேற்றும் விஜயின் கிளிமாஞ்சாரோ வார்த்தை கவனிக்கத்தக்கது. இந்த வார்த்தையை தமிழ் அகராதியில் தேடினால் கிடைக்காது, ஏனென்றால் கிளிமாஞ்சாரோ என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரிமலைத் தொடரின் பெயர்.
பாட்டு புத்தகத்தில் உள்ள “அக்கக்கோ நான் கின்னிக்கோழி, அப்பப்போ என்னப் பின்னிக்கோ நீ” என்ற வரி பாடலில் காணாமல் போய்விட்டது தான் ஒரே குறை.
பாடல்: பூம் பூம் ரோபோடா…
பாடியவர்கள்: கீர்த்தி சகாத்தியா, யோகி, ஸ்வேதா, தன்வீஷா
பாடலாசிரியர்: கார்க்கி
இந்த பாடல் படத்தில் இருக்குமா என்பது சந்தேகமே, படம் முடிந்த பின்னர் வரும் ரோலிங் டைட்டில் / மேக்கிங் ஆப் எந்திரன் பாடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்குள்ளது.
அதிரடியான வித்தியாசமான இந்த பாடலின் கவன ஈர்ப்பாக இருப்பவர் சுஜாதாவின் குரலில் அப்படியே பாடும் அவரது மகள் ஸ்வேதாவின் குரலில் ஏகத்துக்கும் இளமைத் துள்ளல்.
“தவமின்றி வரங்கள் தருவதனாலே மின்சார கண்ணணோ?” என்ற வரியின் மூலம் எந்திரனை கலியுக கண்ணனாக உருவகப்படுத்தியிருக்கும் கார்க்கி கவனத்தை ஈர்த்தாலும் ஒட்டுமொத்த பாடலின் நடையில் தந்தையை பின்பற்றுவது அவரது வளர்ச்சிக்கு நல்லதல்ல.
பாடல்: இரும்பிலே ஒரு இருதயம்
பாடியவர்கள்:ஏ.ஆர்.ரகுமான், கிரிஸி
பாடலாசிரியர்: கார்க்கி
பாடல் வரிகளை கேட்கும்போது எந்திரன் விஞ்ஞானியின் வேடத்தில் சென்று காதலிக்க முயற்சி செய்யும் போட்டிப்பாடல் போலத் தோன்றுகிறது. இந்த வித்தியாசமான சூழலுக்கு அற்புதமாக வந்திருக்க வேண்டிய பாடல் இந்த ஆல்பத்தின் கடைசி இடத்தை பிடித்திருப்பது ஷங்கருக்கும் ரகுமானுக்கும் ஓர் பின்னடைவே.
கடைசிவரை இழுத்தடித்து கடைசியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு கடைசியாக படமாக்கப்பட்ட இந்த பாடலுக்கு ரகுமான் எந்த சிரத்தையும் எடுக்காமல் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு பயன்படுத்திய ”இளமை” என்ற பாடலை அப்படியே கலந்து கட்டி கொடுத்துள்ளார். ஷங்கர் இதை கவனிக்காதது ஆச்சர்யம்.
கார்க்கி எழுதிய இந்த பாடலின் நடையில் வைரமுத்துவின் சாயல் போன்ற பிரமை நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை “எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா?”, ” உளவியல் மொழிகளில் இந்திரன்” “பூஜ்ஜியம் ஒன்றோடு (1-0 லாஜிக் கேட்)” போன்ற வரிகள் நன்றாக இருந்தும்.
“மின் மீன்கள் விண்ணோடு” என்ற வரியில் “விண் மீன்கள்” என்று அல்லவா வரவேண்டும் !
“நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அணைப்பேன்” என்ற வரியில் எந்திரன் எப்படி தன்னைத் தானே அணைத்துக்கொள்ளும்? உன்னை என்று அல்லவா வரவேண்டும் !
மொத்தத்தில் கார்க்கி நல்ல துவக்கத்தை வீணடித்துள்ளார்.
ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு மியூசிக் ட்ராக் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மொத்தத்தில் பாடல்களை கேட்டவுடன் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று அறிவியல் தொடர்பான எல்லா பாடங்களையும் ஓரே நேரத்தில் படித்துவிட்டு வந்தது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. சிறு சிறு குறைகளும் படம் வருவதற்குள் காணாமல் போய்விடும் என்றே தோன்றுகிறது.
ரசிகர் பார்வை:
எங்கள் கிராமத்தில் 1970களின் இறுதியில் ரசிகர் மன்றத்தை துவக்கி இப்போது 50வயதை தாண்டிய மூத்த ரசிகரிடம் பாடல் வெளிவந்த சனிக்கிழமை பேசினேன்.
நான்: என்ன மாமா பாட்டு கேட்டீரா? எப்டி இருக்கு?
ரசிகர்: மாப்ளே ஒன்னுமே புரியல… ஆனாலும் நல்லாயிருக்குடா. படம் பெரிய ஹிட் ஆகும் பாத்துக்கிட்டேயிரு…..
ரஜினிகாந்த்: குழந்தைக்கு விதம் விதமாக மேக்கப் போட்டு ஆடு, பாடு என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது தப்பு தப்பாக செய்தாலும் கைதட்டி பாராட்டுவார்கள். என் ரசிகர்களான நீங்கள் எல்லாம் என்னை அப்படி அழகு பார்க்கிறீர்கள்.
தலைவருக்கும் ரசிகர்களுக்கும் உள்ள இந்த புரிதலே இருவரையும் 35 வருடங்களாக உச்சத்தில் வைத்திருக்கிறது!
-காத்தவராயன்
‘முதுமை இவருக்கு வாராது’ – எந்திரன் அசத்தல் படங்கள்
July 19, 2010 by envazhi
Filed under Uncategorized
சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ள ‘எந்திரன்’ அசத்தல் படங்கள்:

தீபாவளிக்கு ‘எந்திரன்’:3000 தியேட்டர்களில் ரிலீஸ்!
தீபாவளிக்கு ‘எந்திரன்’ ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ரூ 190 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படம் என்றைக்கு ரிலீஸானாலும் அதுதான் தங்களுக்கு தீபாவளி என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட், செப்டம்பர் என ஏற்கெனவே எந்திரன் ரிலீஸ் பற்றி செய்திகள் வந்த நிலையில், புதிய செய்தியாக, இந்த தீபாவளி ரிலீஸ் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 -க்கும் அதிகமான தியேட்டர்களில் எந்திரன் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பைடர்மேன், ஜேம்ஸ்பான்ட் படங்களுக்கு நிகரான எண்ணிக்கை இது. ஒரே நேரத்தில் 80 நாடுகளில் இந்தப்படம் வெளியாகிறது. இந்தியப் படம் ஒன்று இத்தனை நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாவது இதுவே முதல் முறை.
மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் எளிமையாக ஒரு ஆடியோ ரிலீஸ் இருக்கும் என்று தெரிகிறது.
எந்திரன் பாட்டும் படமும் ‘தாறுமாறுதான்’! – புதிய ஸ்டில்களுடன் ஷங்கர் தரும் உற்சாக பதில்!!
எந்திரன் பாட்டும் படமும் ‘தாறுமாறுதான்’! – உற்சாகத்தில் ஷங்கர்
எந்திரன் படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். இவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே ரசிகர்கள் பார்த்ததுதான் என்றாலும், இவை Hi – Resolution படங்களாக வந்துள்ளன. ரஜினி-ஐஸ்வர்யாவின் பெரு டூயட் பாடலின் சில காட்சிகள் இவை.
ரஜினியின் படம் மாதிரியே, இந்த ஸ்டில்களும் எத்தனை முறை பார்த்தாலும் ரசிகர்களுக்குச் சலிக்காதவை… எனவே இன்னும் ஒரு முறை இங்கே தருகிறோம். அதிலும் கிடார் வாசிக்கும் ரஜினியும், வைரமாக ஜொலிக்கும் ஐஸும் அசத்தல்!
படம் மற்றும் பாடல்கள் குறித்து ரசிகர்கள் சிலரின் கேள்விகளுக்கு ஷங்கர் கூறியுள்ள பதில்கள்:
ஸ்டில்கள் தாறுமாறா இருக்கு சார்… ஆனா புதுசா தலைவர் ஸ்டில்களை எப்போ வெளியிடுவீங்க?
‘பாட்டும் படமும் தாறுமாறுதான்… கவலையேபடாதீங்க!’
No one can, if can ? can? என்ற பாட்டுதான் எந்திரன் ஓபனிங் பாட்டா?
இல்லை
எந்திரன் வெள்ளித்திரையில் எப்போ?
வெகு விரைவில்…
லாஸ் ஏஞ்சல்ஸில் எந்திரன் (ஹாலிவுட்டில்) ஸ்பெஷல் ஸ்கிரீனிங் உண்டா?
ஸ்கிரீனிங் பற்றி ஐடியா இல்ல… ஆனால் விரைவில் ரசூல் பூக்குட்டியுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறேன். அங்குதான் எந்திரனுக்கு ஸ்பெஷல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் சேர்க்கிறோம் (லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குணால் ராஜனுடன் இணைந்துதான் ரசூல் பூக்குட்டி இந்தப் பணிகளைச் செய்கிறார் என நாம் முதன்முதலில் சிறப்புச் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்!).
3 டி உண்டா?
இல்லை… 3 டி இப்போது சாத்தியமில்லை!
எஸ்பிபி இந்தப் படத்தில் துவக்கப் பாடல் பாடுகிறாரா? அல்லது வேறு பாடல் பாடியுள்ளாரா?
அப்புறம் சொல்கிறேன்..
(இரண்டு நாள் கழித்து இப்படி கூறியுள்ளார் ஷங்கர்: ‘ஆம்.. துவக்கப்பாடல் பாடுபவர் எஸ்பிபி தான். இன்றுதான் ரிக்கார்டிங் முடிந்தது!’)
ஆடியோ ரிலீஸ் எப்போது?
ஜூலையில்!

ஷங்கர்: 'இதெல்லாம் ஜனங்களுக்கு பத்தாதுன்னு எனக்கும் தெரியும்... அடுத்த வாட்டி வட்டியும் முதலுமா சேர்த்து கொடுத்துடலாம்!'
-என்வழி ஸ்பெஷல்
நன்றி: இயக்குநர் ஷங்கர்
ரஜினிதான் மாஸ்… அவரேதான் பாஸ்!
‘நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கிறதுதான் பெரிய சவால். ரஜினி அந்தச் சவாலில் ஜெயிச்சவர்!’ – ஷங்கர்
ரஜினி, எந்திரன், படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி விகடனுக்கு இயக்குநர் ஷங்கர் அளித்துள்ள பேட்டி:
படப்பிடிப்பில்தான் படபடப்பு. நேரில் அத்தனை அமைதி. அடர்த்தியான குளிர் அறையில் ‘எந்திரன்’ பற்றிப் பேச ஆரம்பித்தார் ஷங்கர்.
எந்திரன் 3D படமா?
“அப்படியா பேசிக்கிறாங்க… குட்!
‘டெர்மினேட்டர்’, ‘அவதார்’ படங்களில் வேலை பார்த்தவர்கள் ‘எந்திரன்’ படத்துக்கு வேலை பார்த்திருக்காங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
இவ்வளவு நாளாகுதேன்னு சில பேர் கேட்கலாம். அவ்வளவு காரணங்கள் இருக்கு. நிறைய மெனக்கெடல் இருக்கு. ஒரு ரோபோ திடீர்னு மனிதனாக உருமாறி வெளியே மனிதக் கூட்டத்தில் திரிகிற விஷயம். ஏகப்பட்ட டெக்னாலஜி கலந்திருக்கு. இந்த அளவுக்குத்தான் ஒரு படம் இருக்கும்னு நினைச்சு வந்தால், அதுக்குப் பல படிகள் மேலே போயிருக்கோம். இதுவரைக்கும் நீங்க பார்க்காத புதுசு. கதையைப்பத்தி டீடெயிலாப் பேசலாம்தான். ஆனா, எங்க எல்லோருக்குமே, நான் படத்தின் டைரக்டராகவே இருந்தாலும்… இவ்வளவுதான் அனுமதி!”
எப்படி இருக்கார் ரஜினி?
“ரஜினி ரொம்ப அபூர்வம். புகழ், பணம், அந்தஸ்து அதெல்லாம் இல்லை விஷயம். எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துட்டே வர்றேன். அதுதான் நான் தேடுறதும்!
நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கிறதுதான் பெரிய சவால். ரஜினி அந்தச் சவாலில் ஜெயிச்சவர். அவர்கிட்டே மாறாத விஷயம், நடிப்பு மேல் இருக்கிற துடிப்பு. கமல், விக்ரம்தான் இப்படி கெட்டப் மாற்றம்னு முன்னணியில் நிற்பாங்க. அது அவங்களுக்குக் கைவந்தது. இதில் ரஜினியும் அப்படி மாறிட்டார். நாலு மணி நேரமா, ஆறு மணி நேரமா அசையாமல் உட்கார்ந்து மேக்கப் போட்டாலும் செய்றார். டப்பிங் பேசிட்டுக் கிளம்பினதும் போன்ல, ‘ஷங்கர்… அருமை அருமை’ன்னு சொல்வார். மாலையில் இன்னொரு போனில் ‘மணிமணியா இருக்கு’ன்னு ஆசையாச் சொல்வார். அவரை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்… அவரேதான் பாஸ்!”
ஐஸ்வர்யா ராயை ‘ஜீன்ஸ்’க்குப் பிறகு எப்படிப் பார்க்கிறீங்க?
“இன்டெலிஜென்ட் பொண்ணு. ‘எந்திரன்’ தமிழ்ப் படம்தான். ஆனால், எனக்கு இன்டர்நேஷனல் அளவுக்கு ஒரு முகம் தேவைப்பட்டது. அது ஐஸ்வர்யா ராயைத் தவிர யாராக இருக்க முடியும்? ரஜினியின் ஸ்டைலும், ராயின் அழகும் இந்தப் படத்துக்குப் பெரிய அட்ராக்ஷன்!”
நீங்களும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால், சந்தேகமே இல்லாமல் மியூஸிக்கல் ட்ரீட்தான். எந்திரனில் ரஹ்மானின் சாதனைகள் என்ன?
“ஆஸ்கரை விட ஆச்சர்யமான அம்சம், அதை இத்தனை நிதானமாகவும் பக்குவமாகவும் அவர் ஏற்றுக் கொண்ட விதம்தான். ‘எந்திரன்’ல ஆறு பாடல்கள். மெலடி, வெஸ்டர்ன், ஃபேன்டஸி என எல்லா ரகங்களிலும் இருக்கும். ரஹ்மான் தன் இசைப் பயணத்தில் உச்சத்தில் இருக்கிற நேரம். பாடல்களும் அப்படி இருப்பதுதான் நியாயம். இதில் அந்த மேஜிக் நடந்திருக்கு!”
இந்த ‘எந்திரன்’ கமல், ஷாரூக்கான்னு பெரிய ஸ்டார்கள் நடிக்கத் தீர்மானித்திருந்த படம்…”
“கமல் 2000-ல் இந்தப் படத்தில் நடிக்கிற மாதிரி இருந்தது. அவருக்கு ஏத்த மாதிரி கதையில் அவசியமான எல்லா விஷயங்களும் செய்தும், அது நடைமுறைக்கு வரலை. அடுத்து, ஷாரூக். அதுவும் ஏனோ டேக் ஆஃப் ஆகலை. ஆனால், எல்லாம் நல்லதுக்குத்தான். ‘எந்திரன்’ ரொம்ப நல்லா வரணும்னு என்னைவிட அக்கறைப்படுபவர் ஒருத்தர் இருக்கார். அவர்தான் ரஜினி!”
“ஏன் இன்னும் விஜய், சூர்யான்னு ரெண்டு பேரும் உங்க கண்ணிலேயே படலை?”
“நான் கதையை வெச்சுக்கிட்டு ஹீரோவைத் தேடுகிற ஆளு. எடுக்கப்போற கதைக்கு அவங்க ரெண்டு பேரும் பொருத்தம்னா, அவங்ககிட்ட கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. நிச்சயம் அவங்க ரெண்டு பேரும் என் படங்களில் நடிக்கிற காலங்கள் இருக்கு!”
ஜாலி கமர்ஷியலா ‘பையா’வும் நல்லாப் போகுது. அவ்வளவு கனமா ‘அங்காடித் தெரு’வும் மனசை இழுக்குது. இந்த ரசிகர்களை எப்படி எடைபோடுவீங்க?
“தமிழ் சினிமா இருக்கிற நிலைக்கு யாரோ ஒண்ணு ரெண்டு ஹீரோக்கள் படம் மட்டுமே ஓடினா, அது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. கமர்ஷியல், பரிசோதனை முயற்சிகள்னு எல்லாப் பக்கமும் தமிழ் சினிமா செழிக்கட்டும். ரசிகர்களுக்கு நிச்சயம் புதுசாத் தர கடமைப்பட்டு இருக்கோம்!”
மணிரத்னத்தை எடுத்துக்கிட்டா, அரசியலையும் சமூகத்தையும் அதிகம் கதைக் கருக்களா எடுத்துக்கிட்டார். உங்களுக்கு ஏன் ஊழல் என்ற விஷயம் மட்டுமே முன்னாடி வந்து நிக்குது?
“என் படங்களில் ஜனங்கள் பாதிக்கப்படுகிற எல்லாத்தையும் பேசியிருக்கேன். ஊழல், லஞ்சம்பற்றி மட்டும்தான் சினிமா செய்திருக்கேன்னு சொல்றது என்னைச் சின்னதாக ஆக்கிக் காட்டுகிற வேலை. ‘அந்நியன்’ல அலட்சியம்பற்றிச் சொல்லி இருக்கேன். நீங்க சின்ன விஷயம்னு நினைக்கிறது எல்லாம் பெரிய விஷயமாகி எங்கே போய் நிக்கும்னு சொல்லி இருக்கேன். என் சினிமாவை விமர்சிக்கலாம். என் அக்கறையை, மக்களின் மீதான பார்வையைச் சந்தேகப்படவே கூடாது!” – மெலிதாகச் சிரிக்கிறார் ஷங்கர்.
-நன்றி: ஆனந்த விகடன்
குறிப்பு: சில தினங்களில் தலைவரின் புதிய ஸ்டில்கள்…. அதுவரை பொறுமை ப்ளீஸ்!
துபாயி்ல் எந்திரன் இசை வெளியீடு!
சென்னையை அழிக்க எந்திரன் திட்டம்… காப்பாற்ற நடுக்கடல் யுத்தம்!

ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட்
‘எந்திரன்’ க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சம்!
ஜூலை அல்லது ஆகஸ்டில் துபாயி்ல் எந்திரன் இசை வெளியீடு
எந்திரனில் அமிதாப்பின் சிறப்புத் தோற்றம்!
திருப்பதியில் விசேஷ பூஜை!
-இவையெல்லாம் விகடன வெளியி்ட்டுள்ள எந்திரன் சிறப்புக் கட்டுரையின் ஹைலைட்ஸ் இவை.
இதோ அந்தக் கட்டுரை:
‘இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து… டிகிரி டிகிரியாக எகிறி வரு கிறது ‘எந்திரன்’ ஃபீவர். ‘என்னதான் நடக்கிறது உள்ளே?’ என்று எட்டிப் பார்த்ததில் இருந்து…
ஹீரோ, வில்லன்… இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல் களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!
‘உப்புக் கருவாடு… ஊறவெச்ச சோறு…’ என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ள லும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!
‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் ‘எந்திரன்’ மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!
சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, ‘காய்ந்துகிடக்கும்’ சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. ‘நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!’ என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!
‘எந்திரன்’ க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!
படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல… எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் ‘ஐ ரோபாட்’ போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!
அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!
‘அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி’, ‘வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்… வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்’, ‘அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி’ இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!
ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10… ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்…. அநேகமாக, துபாய்!
ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!
முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், ‘எந்திரன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!
‘எந்திரன்’ டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!













































