மாபலி விருந்துக்கு அழைப்பிதழ்!
மாபலி விருந்துக்கு அழைப்பிதழ்!
சில தினங்களுக்கு முன் விகடனில் வெளிவந்த மாலதி மைத்ரியின் கவிதை இது. கட்டுப்படுத்த முடியாத ஆற்றாமையில் வந்து விழுந்துள்ள வரிகள். சமகால இனத் துரோகிகளுக்கு இதெல்லாம் உரைக்குமா தெரியவில்லை…
ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.
குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!
நன்றி: ஆனந்த விகடன்
தமிழ் ஈழம் அழியாது.. அழியவும் விடமாட்டோம்! – வைகோ
முள்ளிவாய்க்கால் முடிவல்ல… அடுத்த கட்ட போராட்டத்தின் ஆரம்பம்! – வைகோ
தஞ்சை: சிங்களவர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத் தூண்கள் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத் தூணுக்கு, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் வைகோ அடிக்கல் நாட்டினார்.
ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த தியாகிகளுக்கான நினைவுத் தூணுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய க்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் நெடுமாறன் பேசுகையில், “இது போன்ற நினைவுத் தூண்கள் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நிறுவப்படும். தமிழகத்தில் மட்டுமல்ல. வேறு எங்கும் இந்த மாதிரி நினைவுத் தூண் அமைக்கப்பட்டதில்லை என்ற வகையில் நினைவுத் தூண் அமைக்கப்படும்.
இங்கு நினைவுத் தூண் மட்டுமல்லாமல் நினைவு மண்டபமும் அமைக்கப்படும். அடுத்த ஆண்டு மே 17ம் இதன் தேதி திறப்பு விழா நடைபெறும். இதில் தீக்குளித்த 18 பேரின் பெயர், ஓவியங்கள் இடம் பெறும்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தலைமையில் 5வது கட்ட ஈழப்போர் தொடங்கும்போது நாம் துணை நிற்க வேண்டும். அங்கு தமிழ் ஈழம் மலரும்” என்றார்.
முடிவல்ல… ஆரம்பம்! – வைகோ
நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில், “தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.
ஈழ விடுதலை வரலாறு, இந்தியா செய்த துரோகம், உலக நாடுகளின் மெளனம் இவை அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் முடிவல்ல, தொடக்கம் தான்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத் தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழ வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைக்கு எதிரான அனைத்தையும் நடத்தியது இலங்கை அரசு. ஈழத் தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம், அங்கு நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்.
சிங்களவர்களை பழிக்குப் பழி வாங்கி அந்த வெற்றித் தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்றார்.
நல்லக்கண்ணு…
நல்லக்கண்ணு பேசுகையில், 21ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் நடைபெறாத கொடூரமான இனப் படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இதனை செய்த ராஜபக்சவுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை. ஈழத்தில் நடந்தது மனிதகுல பிரச்சனை. அதை ஆதரிக்கக்கூடிய எந்த அரசையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்க முடியாது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமையை விட ராஜபக்ச அதிக கொடுமை செய்துள்ளார்” என்றார்.
தலைவன் பாதையில் பயணம் தொடரும்! – விடுதலைப் புலிகள்
May 17, 2010 by envazhi
Filed under உலகம் & இலங்கை
வலிகளால் சோர்ந்துவிட மாட்டோம்… தலைவன் பாதையில் பயணம் தொடரும்! – விடுதலைப் புலிகள்
எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இருப்பினும், இவ் வலிகளினால் சோர்ந்து விடாது தலைவன் பாதையில் பயணத்தைத் தொடர்வோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து சரியாக ஒரு ஆண்டு நிறைவுறுகிறது. கடந்த ஆண்டு இதே நாள் வன்னி நிலப் பரப்பெங்கும் தமிழ் மக்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தன. எங்கும் மனித ஓலம், மனித இனமே பார்த்திராத அரச பயங்கரவாதப் படுகொலைகள். ஆனால் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை கடைசி வரை.
இந்த கொடிய நிகழ்வை, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் வலி சுமந்த வாரமாக அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு இணைப்பாளர் ஞா பாலச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:
எமது உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!
எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் வலி மிகவும் கொடியது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது நமக்குநாமே ஆறுதல்படுத்திக் கொண்டு விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.
இலங்கை அரசும் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை புரிந்து கொள்ளாத சில நாடுகளும் சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்தை பின்னடைவுக்கு இட்டுசென்றன. எனினும் வரலாறுகள் தந்த படிப்பினையிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுவோம். எம் ஒவ்வொருவருக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தீயை சுடர்விட்டு எரியச் செய்வோம். எமது வரலாற்றில் இடி விழுந்த இந்நாளில் அனைத்து மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து வரலாற்றின் வலிகளைப் படிக்கற்களாக மாற்றி சிங்கள தேசத்துக்கும் உலகநாடுகளுக்கும் மீண்டும் நாம் யாரென்பதை உணர்த்துவோம்.
எம்மினத்தின் தாயக, புலம்சார் அரசியல் தலைவர்களே!
எதிரியின் சூழ்ச்சிக்குள் நாம் சிக்குண்டு சிதைந்து போகாமல் எம்மினத்தின் விடுதலையை மனதில் நிறுத்தி அரசியல் ஒருமைப்பாட்டுடனும் இலட்சிய உறுதியுடனும் அணிதிரண்டு எம் தலைவன் காட்டிய விடுதலைப் பாதையில் துணிந்து செல்வோம்.
தாயக உறவுகளே!
இன்று எம்மை சிங்களதேசம் அடிமை கொண்டுள்ளது. எமது உறவுகளை கொன்றொழித்து அனாதைகள் ஆக்கியுள்ளது. சொத்துக்களைச் சூரையாடி ஏதிலிகள் முகாம்களுக்குள் அடைத்துள்ளது. தமிழ்மக்கள் முளுமையாக மீள்குடியேற்றப்படாமல் எமது தாயக பிரதேசமெங்கும் முப்படை முகாம்களும் போலீஸ் நிலையங்களும் நிறுவப்படுகின்றன. தமிழ் மண்ணில் சமூக பண்பாட்டு சீர்கேடுகள் எதிரியால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.
தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களையும் எமது மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களையும் அழித்து சிங்கள – பெளத்த அடையாளச் சின்னங்களும் இராணுவ நினைவுத் தூபிகளும் நிறுவப்படுகின்றன.
சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு தமிழீழம் சிங்கள மயப்படுத்தப்படுகிறது. இந்நடவடிக்கைகள் எம்மினத்தின் தேசிய ஆன்மாவை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறது. சிங்களத்தின் இச்செயலைத் தடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் தாயகத்திற்கான கடமையும் பொறுப்புமாகும்.
தமிழ் மக்களினது போராட்டம் உரிமைக்கானதே தவிர சலுகைக்கானது அன்று, தமிழ் மண் உரிமைக்காகத் தொடர்ந்து போராடும், சலுகைகளுக்காக கையேந்தாது என்பதை உலகின் காதுகளுக்கு உரத்துச் சொல்வோம். எமது போராட்டத்திற்கு என்றும் பக்கபலமாக இருப்பது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழீழ உறவுகளே. தொடர்ந்தும் அவர்களது துணையுடன் சிதைக்கப்பட்டிருக்கும் எம் மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து நாம் மீண்டும் பிறப்பெடுப்போம் என்று இந்நாளில் உறுதிகொள்வோம்…”
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நித்யானந்தன் – யுவராணி படங்கள் கிடைத்தால் பிரசுரிக்கக் கூடாது! – ஒரு விநோத எச்சரிக்கை
நித்யானந்தனுடன் என் படம் வராமல் போலீஸார் பார்த்துக் கொள்ள வேண்டும்! – யுவராணி
சென்னை: “இணையதளங்களில் எனது பழைய படங்கள்தான் இதுவரை வந்துள்ளன. அவற்றில் தவறாக ஏதுமில்லை. ஆனால் நானும் நித்யானந்தனும் இருப்பது போன்ற புதிய படங்கள் எதுவும் வெளிவராமல் போலீஸார்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார் நடிகை யுவராணி.
நடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து, நித்யானந்தனுடன் நடிகை யுவராணியை இணைத்து தெலுங்கு சேனல்கள் பரபரப்பாக செய்திகளையும் சில படங்களையும் வெளியிட்டன. நித்யானந்தனுடன் யுவராணி உள்ள நிர்வாண வீடியோ வெளியாகி உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டது. ஆனால் இன்னும் அந்த வீடியோக்களை இந்தியாவில் யாரும் ஒளிபரப்பவில்லை.
இந்த நிலையில் நித்யானந்தனுடன் தான் இருப்பது போன்ற படங்களோ, வீடியோக்களோ வெளிவராமல் போலீசார்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி யுவராணி சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்தார். அவருடன் அவர் சார்ந்த சாதிச் சங்கப் பிரமுகர்களையும் அழைத்து வந்திருந்தார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் வெளியில் வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நித்யானந்தாவோடு என்னை இணைத்து கூகுள், யுடூப் ஆகிய இணையதளங்களில் செய்திகள் வெளியானதாக எனது உறவினர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நானும் அந்த இணையதளங்களை பார்த்தேன். அதில், தவறான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னுடைய பழைய படங்கள்தான் வெளியாகியுள்ளன.
இனி என்னைப் பற்றிய வேறு தவறான படங்கள் எதுவும் வெளிவந்தால் அதை தடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். என்னுடைய கணவரோடு கலந்து பேசி விரைவில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேட்டியும் கொடுப்பேன்…” என்றார்.
சாதி அமைப்பு எச்சரிக்கை!
இதற்கிடையே யுவராணி தொடர்பான ஆபாசப் படங்களோ, வீடியோவையோ வெளியிடக் கூடாது என்று குறிப்பிட்ட சாதி அமைப்பு ஒன்று அனைத்து மீடியா நிர்வாகத்துக்கும் மிரட்டல் கலந்த கோரிக்கை வைத்துள்ளது. அப்படிப்பட்ட படங்கள் வந்தால் தங்களிடமே முதலில் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மீறி வெளியிட்டால் பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனராம்.
தெலுங்கு சேனல் காரம் மணமெல்லாம் சேர்த்து தயாரித்து வெளியிட்ட ஒரு ‘மசாலா வீடியோ’ இது.
பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியை கண்டுபிடித்துவிட்டார்களாம்!
January 6, 2010 by envazhi
Filed under உலகம் & இலங்கை
பிரபாகரன் துப்பாக்கி… இலங்கை சொல்லும் இன்னொரு கதை!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிகைகள் இப்போது பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்க தயாரிப்பிலான அந்த துப்பாக்கியை முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதியில் இருந்து கைப்பற்றியதாக வுவுனியா டிஐஜி நிமல் லெவ்கேயை மேற்கோள் காட்டி இந்த செய்திகள் வந்துள்ளன.
நந்திக்கடல் பகுதியில் நிலத்துக்கு அடியில் புலிகள் புதைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களையும் ராணுவ வீரர்கள் சமீபத்தில் கைப்பற்றினராம். அப்போது அமெரிக்கத் தயாரிப்பிலான ‘கோல்ட் எம்16ஏ2′ ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
இந்த துப்பாக்கியை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்புவதாக அந்த டிஐஜி தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரிதான்… போரில் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி என்கிறார்களே.. அப்படியெனில் இந்த துப்பாக்கியை புதைத்து வைத்துவிட்டா போருக்குப் போனார் தலைவர்?
பிரபாகரன் உடலில் இருந்த துப்பாக்கி என்று கருணாவை சாட்சியாக வைத்து மே 19-ம் தேதி காட்டினார்களே… அது என்ன மேட் இன் சிவகாசியா?
பார்ப்போம்… இன்னும் எவ்வளவு கதைகள் வருகின்றனவென்று!
தமிழகம் முழுக்க பிரபாகரன் படங்களை அகற்றிவரும் போலீசார்!
தமிழகம் முழுக்க பிரபாகரன் படங்களை அகற்றிவரும் போலீசார்!
சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவப் படங்களை அகற்றி வருகின்றனர் தமிழக க்யூ பிரிவு போலீசார்.
குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் கவிதை நூல் வெளியீட்டையொட்டி வைக்கப்பட்டுள்ள மூன்று டிஜிட்டல் பேனர்களில் பிரபாகரன் படமும் திருமா படமும் உள்ளன. இவற்றை உடனடியாக போலீசார் அகற்றிவிட்டனர். ஜிகே மூப்பனார் பேரவை என்ற அமைப்பின் தலைவர் தந்த புகாரின் பேரில் இந்த பேனர்கள் அகற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மற்ற பகுதிகளிலும் இந்த நடிவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
தமிழகம் முழுக்க…
சமீபத்தில் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மாவீரர் நாளையொட்டி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரபாகரன் படங்களை டிஜிட்டல் பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளாக வைத்திருந்தனர் தமிழ் உணர்வாளர்கள்.
தமிழகம் முழுக்க பல இடங்களில் பிரமாண்ட போஸ்டர்கள் அடித்தும் தங்கள் உணர்வை காட்டியிருந்தனர். இது பொறுக்காமல் ஈரோட்டில் பிரபாகரன் பேனரை ஈவிகேஎஸ் இளங்கோவன் கிழித்ததும் அதனைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் நினைவிருக்கும்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டபோதும் எம்ஜிஆர் – பிரபாகரன் படங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தன.
மேலும் வருகிற ஜனவரி 17-ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் எம்ஜிஆர் பிறந்த நாளின் போதும் இதுபோன்ற போஸ்டர்கள், பேனர்கள் ஏராளம் வைக்கப்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களான தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தமிழீழத்துக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பிரபாகரனுக்கு போஸ்டர், பேனர் இருக்கக் கூடாது என்றெல்லாம் அவர்கள் கருத்து தெரிவித்து, தமிழக அரசை நெருக்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், மூப்பனார் பேரவை புகாரை காரணம் காட்டி தமிழக க்யூ பிரிவு போலீஸார், பிரபாகரன் படங்களை அகற்றும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
-என்வழி
‘பிரபாகரன் நலமாக உள்ளார்… வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்பார்கள்!’
December 23, 2009 by envazhi
Filed under கட்டுரைகள்
பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! – பழ நெடுமாறன் உறுதி
வன்னிப் போரில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப்பட்டதாகக் கூறி, சில படங்கள் இணையத்தில் பிரசுரமாகியிருந்தன.
அவை சகோதரி துவாரகாவின் படம் அல்ல, இசைப்பிரியா என்ற பெண் போராளியின் படம் என்று சீமான் உறுதிப்படுத்தியிருந்ததை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
சீமான் சொன்னதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன், சமீபத்திய தனது ஜூவி பேட்டியில்.
இதைவிட முக்கியம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் ஆணித்தரமாக கூறியுள்ள சில விஷயங்கள்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பழ நெடுமாறன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி:
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன!
‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.
வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.
‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’
‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.
எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’
‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’
‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’
‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’
‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.
சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.
பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’
‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’
‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.
தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத் திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’
‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’
‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.
ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’
‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”
‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.
‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’
‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’
‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார்.
உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.
தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது.
இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.
சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது!
ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.
அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம்.
‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு.
நன்றி: ஜூனியர் விகடன்
இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு: சென்னையில் பிரச்சாரம் தொடங்கியது!
‘இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்’ – சென்னையில் பிரச்சாரம் தொடங்கியது!
சென்னை: மனித குலத்தின் அனைத்துக் கோரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இலங்கையின் தயாரிப்புகள் எதையும் வாங்காதீர்கள் எனும் போராட்டம் இப்போது தமிழகத்தில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள மிக முக்கியமான, பெரிய வர்த்தக மையம் ஸ்பென்சர் பிளாஸா முன் நின்ற வண்ணம் தமிழரைக் காப்போம் – Save Tamil- என்ற அமைப்பு இந்த புறக்கணிப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்களை நேரில் சந்தித்து, தங்கள் முதலீடுகளை
‘தமிழரின் ரத்தம் குடிக்கும் இலங்கை மண்ணிலிருந்து வாபஸ்’ பெறுமாறு தமிழ் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் நடந்த இந்த புறக்கணிப்புப் போராட்டத்துக்கு வெளிநாட்டவர்கள் மனப்பூர்வமான ஆதரவை வழங்கியதில் ஆடிப்போயுள்ளன இலங்கை நிறுவனங்கள்.
அதேநேரம், நியாயமாக இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்தான் நடந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்தக் கேள்விக்கான விடையாக இப்போது தலைநகர் சென்னையில் ‘தமிழரைக் காப்போம்’ என்ற அமைப்பின் சார்பில் இலங்கை தயாரிப்புகளுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நிறைந்த இந்த ஷாப்பிங் மால் எதிரில் நின்றவண்ணம், மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழகங்கினர்.
“இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்” என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதில், “அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா ஆகிய நாடுகளில் தொடங்கப்படவுள்ள இலங்கைப் பொருட்களுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு நிம்மதியும், நீதியும் கிடைக்க வேண்டுமென்ற உங்கள் வேட்கை அசைக்க முடியாத உறுதி பெற வேண்டும்.
இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் இலங்கையை மண்டியிடச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
ஈழத் தமிழர்களின் மரியாதைக்காக போராட நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஆயுதப்போர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக அரசியல் களத்தில் நடத்தப்பட்டு வரும் போரில் வென்றாக வேண்டும்.
கண்டனத்திற்குரிய இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை அரசை மண்டியிடச் செய்ய வேண்டும்.
இலங்கை அரசின் தலைவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டு தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களுக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இலங்கப் பொருட்களை தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள். இந்த அழைப்பை ஏற்று செயலில் இறங்குங்கள். ஆயிரக்கணக்கானோர் ஆதரவளித்து இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இந்த புறக்கணிப்பில் எங்களோடு சேர்ந்து ஒன்றுபடுவதன் மூலம், அனைத்துத் தடைகளையும் மீறி வெல்வோம..” என அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிட் நோட்டீஸ்களைப் பெற்றுக் கொண்ட பலர், ‘நிச்சயம் நாங்கள் இலங்கை பொருட்களை வாங்கமாட்டோம்’ என்று கூறிவிட்டுச் சென்றனர்.
இந்தப் பிரச்சாரம் நகரின் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் தொடரும் என அறிவித்துள்ளது ‘தமிழரைக் காப்போம்’ அமைப்பு.
என்வழி
சேவ் தமிழ் பிரச்சார படம்: வெப்துனியா
‘நான் புறக்கனிக்கிறேன், இலங்கை பொருட்களை, கிரிக்கெட்டை!’
‘அது துவாரகாவின் புகைப்படம் அல்ல!’
‘அந்தப் படத்தில் இருப்பது துவாரகா அல்ல…” – உதய நாணயக்கார
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உயிரற்ற உடல் என்று கூறி சில தினங்களாக ஊடகங்களில் ஒரு தமிழ்ச் சகோதரியின் உடலைக் காட்டி வருகிறார்கள்.
இதைப் பார்த்து பல தமிழர்கள் மனம் வெதும்பிப் போய் என்ன செய்வதென்று கைபிசைந்து நிற்கும் நிலையில், அந்த உடல் துவாரகாவுடையது அல்ல என்றும், இசைப் பிரியா எனும் பெண் போராளிக்கு சொந்தமானது என்றும் இப்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கார இவ்வாறு கூறியுள்ளார்:
இறுதிச் சண்டையின் போது வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை. அதனை ஒத்த சடலம் என இணையத் தளங்களில் வெளியாகிய படங்கள் தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது.
எனவே துவாரகாவின் சடலம் என தெரிவித்து இணையத் தளங்களில் வெளியாகி வரும் புகைப்படத்தை உறுதி செய்ய முடியாது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்டனியின் சடலம் தவிர அவரின் குடும்ப உறுப்பினர்கள் வேறு எவரினதும் சடலங்களையும் நாங்கள் கண்டெடுக்கவில்லை. பெண் உறுப்பினர்கள் பலரின் சடலங்களை கைப்பற்றப்பட்ட போதும், அவற்றில் துவாரகாவின் சடலத்தை இனம் காணவில்லை. இணையத்தளங்களில் வெளியாகிய படங்களை ஒத்த சடலத்தையும் இன்றுவரை நாம் காணவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, புகைப்படத்தில் காணப்படும் உடல், இசைப்பிரியா எனும் தமிழ்ப் பெண் போராளியின் உடலாக இருக்கலாம் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளின் கடற்படை தளபதி ஸ்ரீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியா வேலி எனும் குறும்படத்திலும் நடித்துள்ளாராம்.
இதுகுறித்து சீமான் கூறுகையில், “சிங்களர்கள் நம்மீது தொடுக்கும் உளவியல் போரின் இன்னொரு கோரமுகம் இது. நமது தங்கை துவாரகாவின் உடல் அல்ல இது என எனக்கு நன்கு தெரியும். அதேநேரம் வீரச் சாவடைந்த பெண்போராளியின் உடலை நிர்வாணப்படுத்தி சிங்கள இராணுவமும் அதன் கூலிகளும் தமது இனவெறியை உலகுக்கு பறைசாற்றியுள்ளன.
இந்த வக்கிரத்தைக் கண்டிக்க முன்வராதவர்கள், இது தலைவர் மகளின் உடல்தான் என நிரூபிக்க முயல்வதைப் போல செய்திகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவது வருத்தம் அளிக்கிறது. தமிழர்கள் ‘ஒற்றுமை’ பற்றி நன்கு தெரிந்து கொண்ட சிங்களம் ஆடும் நாடகம் இது..” என்றார்.
சரணடைந்த விடுதலைப் புலிகள் தலைவர்களை கொல்ல உத்தரவிட்டது கோத்தபயதான்!- பொன்சேகா
December 13, 2009 by envazhi
Filed under உலகம் & இலங்கை
சர்வதேச நீதிமன்றத்தின் முன் இனியாவது நிறுத்தப்படுவாரா கோத்தபய?
கொழும்பு: வன்னிப் போரின் இறுதி கணங்களில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள்
யாரையும் விட்டு வைக்காமல் சுட்டுக் கொன்று விடுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சே நேரடியாக உத்தரவிட்டார் என பகிரங்கப்படுத்தியுள்ளார் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா.
இந்த உத்தரவு களமுனையில் இருந்த முக்கிய இராணுவத் தளபதிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புவிலிருந்து வெளியாகும் லீடர் எனும் இதழுக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
போரின் இறுதி நாட்களில் புலிகளின் மூன்று முக்கிய தலைவர்கள் படையினரிடம் சரணடைவது பற்றிப் பேசப்பட்டது குறித்து நான் அறிந்திருக்கவில்லை.
புலிகளின் தலைவர்கள், நோர்வே அரசு, பல்வேறு வெளிநாட்டுத் தரப்புகள், பசில் ராஜபக்சே போன்றோருக்கு இடையிலேயே இது பற்றிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முன்வந்தது பற்றி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அப்போது – களத்தில் போரில் ஈடுபட்டிருந்த 58வது டிவிசனின் தளபதியான பிரிகேடியர் சவீந்திர சில்வாவுடன் உடனடியாக தொடர்பு கொண்டு – “புலிகளின் முக்கிய தலைவர்கள் எவரும் சரணடைவதற்கு இடமளிக்க வேண்டாம்; அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்” என்று கோத்தாபய கட்டளை இட்டிருந்தார் என்று பின்னரே எனக்குத் தெரியவந்தது.
மே 17ம் திகதி முள்ளிவாய்க்காலுக்கு வடக்கே புலிகள் 100 X 100 மீற்றர் அளவுள்ள பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் – விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரான நடேசன், புலித்தேவன் மற்றும் தளபதி ரமேஸ் ஆகியோர் படையினரிடம் சரணடைய முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக – விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எப்படிச் சரணடைவது என்பது குறித்து – மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடான பல தகவல்கள் பரிமாறப்பட்டன.
விடுதலைப் புலிகளின் இரு அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அரசு ஒன்று, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இலங்கை அரச அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் இந்தப் பரிமாற்றஙகள் நிகழ்ந்தன.
அப்போது – வெள்ளைத் துணியை உயர்த்திக் காட்டிய படி படையினரிடம் செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதன்படியே அந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் சரணடைய முயற்சித்தனர்.
ஆனால் – அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
மே 17ஆம் தேதி நள்ளிரவில் அல்லது அடுத்த நாள் விடிகாலையில் விடுதலைப் புலிகளின் மூன்று தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக – கோத்தாபய ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் கலந்து பேசிய பிறகே – வெள்ளைத் துணியுடன் படையினரிடம் போகுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த அறிவுறுத்தல் சர்வதேச தொடர்பாளர்கள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது…” என்று அவர் கூறியுள்ளார்.
பொன் சேகா வெளியிட்டுள்ள இந்த உண்மைகள் குறித்து ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கரா மற்று ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா ஆகியோரிடம் விசாரித்த போது, அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
அமெரிக்காவும் அடித்தது அந்தர் பல்டி!
December 9, 2009 by envazhi
Filed under உலகம் & இலங்கை
‘மனித உரிமை மீறல் கிடக்கட்டும்… இனி இலங்கையின் நட்புதான் முக்கியம்!‘
இலங்கை இழைத்த போர்க்குற்றம் குறித்து இத்தனை நாளும்
அனல் பறக்கப் பேசி வந்த அமெரிக்கா இப்போது அப்படியே அந்தர் பல்டி அடித்துவிட்டது.
இலங்கையுடன் இனி முரண்பாடுகள் வேண்டாம் என்றும், போர் முடிந்து அங்கு புதிய சூழல் உருவாகியிருப்பதால் இலங்கையுடன் நட்புறவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க செனட் முடிவு செய்துள்ளதால், அதற்கேற்ப இலங்கை தமிழர் விஷயத்தில் தனது வெளியுறவுக் கொள்கையையும் மாற்றிக் கொண்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தங்களை மனித உரிமை மீறல் நெருக்குதலுக்கு உள்ளாக்குவதைக் காரணம் காட்டி சீனாவுடன் இலங்கை மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறது.
இதனை உணர்ந்த அமெரிக்கா, கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் கடல்பிராந்தியம் தனது எதிரியான சீனாவின் முழுக் கட்டுப்பாட்டில் போவதை விரும்பாத காரணம்தான் இந்த புதிய முடிவுக்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இன்னொரு பக்கம் தேர்தலில் பெரும் சிக்கலை சந்தித்து வரும் ராஜபக்சேவுக்கு அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு பெரும் உற்சாகத்தையும், மனரீதியான பலத்தையும் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்கான கமிட்டி, இலங்கையை கடுமையாக குற்றம் சாட்டி முன்பு அறிக்கை சமர்ப்பித்தது.
குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகிய இருவரும் கடுமையான போர்க்குற்றங்களைப் புரி்ந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவசரம் அவசரமாக ஒரு விசாரணைக் கமிட்டியை அறிவித்தார் மகிந்தா ராஜபக்ச. மேலும், சமீபத்தில் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது அவரை விசாரிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கடைசி நிமிடத்தில் பொன்சேகாவை அமெரிக்கா விசாரிக்கவில்லை.
பொன்சேகா, அமெரிக்காவுக்கு சாதகமானவராக மாறிவிட்டார் என்று கூட பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல கோத்தபாயவும் கூட அமெரிக்காவிடம் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி தலைமையிலான அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில், “இலங்கை நமக்கு அவசியமான நாடு. அதன் மீதான போர்க்குற்றங்களை நாம் வலியுறுத்தினால், விசாரணைக்கு உட்படுத்தினால், கடுமையான நிலையை மேற்கொண்டால் அந்த நாட்டை நாம் இழக்க நேரிடும். தெற்காசியாவில் குறிப்பாக வங்கக் கடல் பிரதேசத்தில் இலங்கையின் தேவை நமக்கு முக்கியமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனது இலங்கை நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது அமெரிக்கா. அதாவது, போர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் அப்படியே கைவிட்டுவிட அது தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்திய நிலைப்பாட்டின் ஜெராக்ஸ்…
கெர்ரி தலைமையிலான வெளியுறவு விவகார கமிட்டி அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை அடுத்த வாரம் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. இந்த அறிக்கையின் சாராம்சம் என்னவென்பதை நியூயார்க் டைம்ஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது. அந்த விவரம்:
* இலங்கையுடன் தீவிரமான போதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. தெற்காசியாவிலும், இந்தியப் பெருங்கடல் பிரதேசத்திலும் அமெரிக்காவின் நலன் பாதிக்கப்பட்டு விட இது காரணமாக அமைந்து விடக் கூடாது.
* இலங்கையில் போர் முடிந்து விட்டது. மிகப் பெரிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகள் இயக்கத்தைத்தான் இலங்கைப் படையினர் அழித்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான உலகப் போரின் ஒரு பகுதியாகவே இதை கருத வேண்டும்.
* ராஜபக்சே சகோதரர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது.
* ராஜபக்சே சகோதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த நெருக்குதல்களையும் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பு ஒன்றினை அழித்துள்ளனர். எனவே இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
* மனிதாபிமான விவகாரங்கள், கவலைகளை நாம் புறக்கணித்து விடத் தேவையில்லை. அவையும் முக்கியமானவைதான். இருப்பினும் போர்க்குற்றம் என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இலங்கையுடன் மோதுவது தேவையில்லை.
* உண்மை நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
* விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசு நடத்திய விதம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் கூட, மீள்குடியேற்ற நடவடிக்கைள், சீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் அந்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
* போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மாணப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
* இலங்கையுடன் வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான உறவுகளையும் அமெரிக்கா வலுப்படுத்த வேண்டும்.
* இலங்கையில் அமைதி நிரந்தரமாக அமெரிக்கா உதவ வேண்டும். அதற்கு மோதல் போக்கு சரியானதாக இருக்காது.
* அமெரிக்கா – இலங்கை இடையிலான மோதல் முற்றினால், இலங்கை மேற்கத்திய நாடுகள் அல்லாத பிற நாடுகளை நோக்கிச் செல்லக் கூடும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.
* இதற்கு மாறாக இலங்கையுடன் இணக்கமாக செயல்பட்டு, இலங்கையின் வளர்ச்சி, அமைதிக்கு ஆக்கபூர்வமாக அமெரிக்கா உதவ வேண்டும்.
* அதேசமயத்தில் வடக்கு இலங்கை மக்கள் வளர்ச்சியுடனும், சுதந்திரமாகவும் வாழ வழி செய்யவும் இலங்கைக்கு அமெரிக்கா வழி காட்டி உதவ வேண்டும்.
- இவ்வாறு அதில் இடம் பெற்றுள்ளது.
ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி…!
அமெரிக்க செனட் கமிட்டியின் இந்தப் புதிய மாறுதல் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மனித உரிமைகளை பெரிதும் மதிக்கும், காக்கும் நாடு என நம்பப்பட்ட அமெரிக்காவும், தனது சொந்த நலனுக்காக தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தை குழிதோண்டிப் புதைக்க முடிவு செய்துவிட்டதையே இது காட்டுவதாக பெரும்பான்மைத் தமிழர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த நிலை, அங்கு வசிக்கும் ஈழத் தமிழர்கள் மீது அழுத்தங்களைத் தரும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ராஜபக்ச தரப்பு உற்சாகம்
அமெரிக்க செனட் கமிட்டியின் இந்த புதிய அறிக்கை ராஜபக்சவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகக் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஈழத் தமிழரைக் காட்டிக் கொடுத்த ‘ஈனத் தமிழரி’டம் எச்சரிக்கையாய் இருங்கள்!’
December 1, 2009 by envazhi
Filed under உலகம் & இலங்கை
‘ஈழத் தமிழரைக் காட்டிக் கொடுத்த ‘ஈனத் தமிழரிடம்’ எச்சரிக்கையாய் இருங்கள்!’
தமிழர்களைக் காட்டிக் கொடுத்த சில ‘ஈனத் தமிழ் துரோகிகள்’ இப்போது புலம் பெயர் தமிழரிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்; அவர்களை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் எதிர்கொள்ளவும்” என ஈழநாடு பத்திரிகை கூறியுள்ளது.
இதுகுறித்து அப்பத்திரிகை வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:
“தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கப்பட்டுள்ளார்கள். அந்த சோகத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையினர் இதயத்தில் சுமந்து வகை தேடி அலைகின்றார்கள். ஒன்றிணைந்து போராடுகின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் போரின் இன்றைய பின்னணிக்கு எதிரிகள் மட்டும் காரணமல்ல. சிங்கள இனவாத அரச படைகளை தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகள் தனித்து நின்று எதிர்க்க, சிங்கள தேசத்திற்குப் பின்னால், இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ஈரான் உட்பட 21 நாடுகள் அணிவகுத்து ஆயுதங்களும், யுத்த தளபாடங்களும் வழங்கியதுடன் உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொண்டன.
காட்டிக் கொடுத்த கருணா…
ஆனாலும் தமிழர் படை வீராவேசத்தோடு களத்தில் நின்று போராடின. எதிரிகளை அழிக்க முனைந்த விடுதலைப் புலிகளைத் துரோகிகள் அதே களமுனைகளில் நின்று காட்டிக் கொடுத்த கொடுமைகளும் அரங்கேறியது.
தமிழினத் துரோகியாக மாறி, மகிந்தவின் கைப்பிள்ளையாக அவர் மடியில் வீற்றிருந்த கருணா, புலிகளின் போர் யுக்திகளை தான் பெற்ற அனுபவங்களிலிருந்து சொல்லிக் கொடுத்தது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் அணிகள் எந்தெந்த திசைகளில் நகரும், அந்தப் பகுதிகளின் நில அமைப்புக்கள், பாதைகள் என்பவற்றை எல்லாம் படம் போட்டுக் காட்டிக் கொடுத்து ராஜபக்சே சகோதரர்களிடமிருந்து பதவிகளையும் சன்மானங்களையும் பெற்றுக்கொண்டார்.
சமாதான காலத்தில் விடுதலைப் புலிகள் அணியினுள் பல துரோகிகளும் கருணாவால் களம் இறக்கப்பட்டனர். விடுதலைப் போராளிகளுடன் போராளிகளாகக் கலந்துகொண்ட இந்தத் துரோகிகளை விடுதலைப் புலிகள் இனம் காணத் தவறிவிட்டார்கள். அவர்கள் உள்ளேயிருந்தே தகவல்கள் சொல்லி இலக்குத் தவறாத தாக்குதல்களுக்கு வழி செய்து கொடுத்தார்கள்.
தமிழீழ மண் அந்த மக்களின் இரத்தத்தால் சிவந்த போதும், தமிழ்த் துரோகிகளின் நெஞ்சத்தில் கருணை சுரக்கவில்லை. மனிதாபிமானம் மிக்க சர்வதேச நாடுகள் யுத்தத்தை நிறுத்திப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க விடுத்த வேண்டுகோள்களெல்லாம் நிராகரிக்கப்பட்டு, உலக அமைப்புக்களால் தடை செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் பாவித்து தமிழின அழிப்பைத் தீவிரப்படுத்தியது சிங்கள அரசு. மனிதப் பேரவலங்களைத் தடுக்க விடுதலைப் புலிகளால் முடியவில்லை.
முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளிடம் சரணடைந்தாவது அந்த அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும் முடிவினை எடுத்து, சரணடையவும் முன் வந்தார்கள். வெள்ளைக் கொடி ஏந்தி நிராயுத பாணிகளாக வந்த தமிழீழ அரசியல் துறைப் பணிப்பாளர் நடேசன், தமிழீழ சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உட்பட பலர் சிங்களப் படைகளால் யுத்த தர்மங்களையும் மீறிச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இத்தனை அவலங்களும் இடம் பெற்ற பின்னரும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. முள்ளிவாய்க்கால் முனையில் வைத்தே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வயது, பால் வேறுபாடுகளின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். கற்பிணிப் பெண்களது வயிறு கிழிந்து சிசுக்களின் உடல் பாகங்கள் வெளியே வந்த கொடூரக் காட்சிகள் கூட அந்த ஈனத் தமிழர்களின் கோர இதயங்களில் இரக்கத்தை உருவாக்கவில்லை. சிங்கள இனவாதிகளின் கோர தாண்டவத்திற்கு அத்தனை கூலிக் குழுக்களும் தாளம் போட்டன.
நடந்து முடிந்த மனிதப் பேரவலங்கள் கருணாவுக்கும், டக்ளசுக்கும், ஆனந்தசங்கரிக்கும் எந்தக் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. சிங்களத்தின் வெற்றிச் சிரிப்பில் இந்த வெட்கம் கெட்ட மனிதர்களும் இணைந்து கொண்டார்கள். தமிழினம் அதற்காகவும் வெட்கித் தலை குனிந்தது.
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலங்களில் தப்பிய தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் வைத்து வதை பட்டார்கள். சந்தேகத்திற்கிடமான தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுப் புதைகுழிக்கு அனுப்பப்பட்டார்கள். சிங்களப் படைகளின் பாலியல் வெறிக்குப் பல யுவதிகளும், சிறுமிகளும் பலியானார்கள். ஆனாலும் எம் இனத்தை சிங்கள இனவாத அரசும், அதன் கூலிக் குழுக்களும் நிம்மதியாக வாழ விடுவதாக இல்லை.
ஈழத் தமிழர்களின் அத்தனை இன்னல்களையும் போராடித் தீர்க்கவேண்டிய பெரும் பொறுப்புக்கள் புலம் பெயர் தமிழர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் சிங்கள தேசத்தின் கோரக் கரம் புலம்பெயர் தேசங்களிலும் நீண்டு வருகின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கான பல சதித் திட்டங்கள் அரங்கேறுவதற்கு ஆயத்த நிலையில் துரோகத் தமிழர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அவர்களின் துரோக அரங்கேற்றத்தில் ஒன்றே மாவீரர் நாளன்று வெளியிடப்பட்ட கோத்தபாயாவால் தயாரிக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டு, தளபதி ராம் என்ற பெயரில் வெளிவந்த துண்டுப் பிரசுரமும், இறுவட்டும் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புலம்பெயர் தமிழீழ மக்களே!
எம்மையெல்லாம் முட்டாள்களாக்கி இவர்கள் அரங்கேற்றத் துடிக்கும் துரோகங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அத்தனை துரோகங்களையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். “இத்தனை காலம் எங்கிருந்தாய்? என்பது எமக்குத் தேவையற்றது. இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்பதே எமக்குத் தேவையாக உள்ளது” என்ற இறுக்கமான கேள்வியுடன் அவர்களை எதிர்கொள்ளுங்கள்.
“எதிரிகளைக் காட்டிலும், துரோகிகளே ஆபத்தானவர்கள்” – தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரன்”, என அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது ஈழநாடு.
கோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்!
கோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்!
கோத்தபயா ராஜபக்சேவுடன் இணைந்து மோசடி நாடகத்தை அரங்கேற்றுகிறார் புலிகளின் முன்னாள் தளபதி ராம். இந்த நாடகத்தில் தலைமை எருமையாக கோத்தபயாவும், சூர்ய காந்தியாக ராமும் சிறப்பாக நடித்து எருமைக்கூட்டத்தின் விருதுகளை தட்டிக் கொண்டாலும் தமிழர்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லை என ஈழநாடு பத்திரிகை கூறியுள்ளது.
மாவீரர் நாளில், விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் கொள்கை விளக்க உரை அளித்தது. தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில் தொடர்ந்து போராட்டம் என்றது அந்த அறிக்கை.
ஆனால் தலைவர் பிரபாகரன் இனி இல்லை என்றும், அவரது இடத்தில் இனி தாமே இருந்து போராட்டத்தை நடத்தப் போவதாகக் கூறி மாவீரர் அறிக்கை வாசித்தவர் முன்னாள் புலி தளபதி ராம். இலங்கை அரசின் கைப்பாவையாக இவர் மாறி வருவதாகவும், பனகொட முகாமில் சகல வசதிகளுடனும் தனக்கு சாதகமான சில முன்னாள் தளபதிகளுடனும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலை ஒரு சொற்சித்தர வடிவில் வெளியிட்டுள்ளது ஈழநாடு பத்திரிகை.
‘கோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்!’ என்ற நாடக வடிவில் சமீபத்தில் ஈழநாடு வெளியிட்டுள்ள அந்த சொற்சித்திரம்:
சூரிய தேவனின் வரவினால் சூரியகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. சூரிய தேவனை வாழ்த்தித் துதித்தன.
சூரிய தேவனே! தங்களது வாழ்தலுக்கான உயிர் சக்தி எனத் தொழுதன. நண்பகல் பொழுது நெருங்க நெருங்க சூரிய தேவனின் ஒளிக் கதிர்களின் வெப்பம் அதிகரித்துச் சென்ற போதும், அதனையும் சுகமாகவே மகிழ்ந்து அனுபவித்தன சூரியகாந்திப் பூக்கள்.
மாலைப் பொழுது நெருங்கி வந்து கொண்டிருந்த வேளையில், காட்டெருமைக் கூட்டம் ஒன்று இந்தத் தோட்டத்தினுள் நுழைந்து அத்தனை செடிகளையும் நாசம் பண்ணின. சூரிய காந்திகள் குய்யோ முறையோ என்று ஓலமிட்டன. ஆனாலும் அழிவுகள் தடுத்து நிறுத்தப்பட முடியாததாகி விட்டது.
அந்த மூத்த சூரியகாந்தி இந்த அழிவுகளிலிருந்து தான் மட்டுமாவது தப்பிவிடலாம் என்று முயற்சி செய்தது. எருமைக் கூட்டத்தின் தலைமை எருதுடன் சமரசம் பேசியது. ‘என்னை விட்டுவிடு! என்னை மட்டும் விட்டுவிடு! உனக்கு என்ன வேண்டுமோ, அத்தனைக்கும் நான் உனக்கு உதவுகின்றேன்’ என்று ஓலம் போட்டது.
‘உங்கள் இனம் சூரிய தேவனைக் கடவுளாக வழிபடுகின்றது. நிலத்தில் வாழும் எங்களது சக்தியை உணரவில்லை. நாங்கள் நினைத்தால் எங்களால் உங்களை அழித்து விட முடியும்… எங்கள் சக்திக்கு மேற்பட்டவனா இந்த சூரிய தேவன்…?
எங்களைத் தொழுது… உங்களை வாழவிடும் தெய்வங்களாக எங்களை ஏற்றுக்கொண்டால் உன்னையும் உனது குடும்பத்தினரையும் விட்டு விடுகிறேன். உன்னை எங்கள் பட்டித்தொழுவத்தில் இராஜ மரியாதையுடன் வாழ வைக்கிறேன்’ என்றது.
அந்த சூரியகாந்திக்கு வேறு தெரிவு கிடைக்கவில்லை. எருமை கூறிய அத்தனைக்கும் ஒப்புக்கொண்டு, அந்த எருமையுடன் புறப்பட்டது.
போகும் பாதையில் அந்த எருமை கேட்டது… ‘உண்மையாகவே… உங்கள் இனம் எங்களைக் கடவுளாக ஏற்றுக்கொள்வார்களா…?’ சந்தேகத்துடன் கேட்டது.
சூரிய காந்தி எதிர்பார்த்திராத கேள்வி அது. எருமையின் வாயில் அதன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது.
வேறு வழியின்றித் தவித்த அந்த சூரியகாந்தி ‘அது உடனடியாகச் சாத்தியப்படாது… சாத்தியப்படாது. நான் முதலில் என்னை சூரிய தேவனாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றேன். அதன் பின்னர் எங்கள் இனத்தை உங்கள் விருப்பப்படியே எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளச் செய்ய என்னால் முடியும். தயவு செய்து எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிடாதே’ என்று கெஞ்சியது.
‘நீ என்ன செய்வாயோ… ஏது செய்வாயோ… எங்களைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளச் செய்யாவிட்டால் உன் எதிர்காலத்தையே சிதைத்து விடுவோம்’ என்று மிரட்டியது.
அதற்குச் சம்மதித்த அந்தச் சூரியகாந்தியை அதன் கூட்டத்திடம் தொடர்பு கொள்ள அனுமதித்தது.
மாலை… சூரிய தேவன் மறைந்த தருணத்தில் சூரியகாந்தி தன் கூட்டத்துடன் பேசியது.
‘அன்பான சூரியகாந்திச் செடிகளே! சூரிய தேவன் மறைந்துவிட்டான். இனி அவன் மீண்டும் வருவதற்குச் சாத்தியமே இல்லை. அவன் மறையும் முன்னதாக எனக்கு ஒரு ஆணை இட்டுள்ளான்.
சூரிய தேவன் இல்லாத உங்கள் குறையை என்மூலம் தீர்க்கும் தனது முடிவை எனக்குத் தெரிவித்துவிட்டே மறைந்தான். எனவே நான்தான் இனி உங்கள் சூரிய தேவன். என்னையே நீங்கள் கூரிய தேவனாக ஏற்றுக்கொண்டு தொழ வேண்டும்’ என்றது.
சூரியகாந்திகள் மனதுக்குள் சிரித்துக்கொண்டன. எருமையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட தனது நண்பனுக்காக அவை வருந்தின. எருமையின் திட்டத்தை அந்த சூரியகாந்தி நிறைவேற்றத் துடிக்கும் அதன் அவலத்தைப் புரிந்து கொண்டன.
இந்த உருவக நாடகத்தில் பாவப்பட்ட சூரியகாந்தியாக தளபதி ராம் அவர்களும், தலைமை எருமையாக கோத்தபாய ராஜபக்சேவும் திறமையாக நடித்து எருமைக் கூட்டத்தின் பல விருதுகளைத் தட்டிக்கொண்டாலும் சூரியகாந்திகள் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை.
‘பாவம்… அந்த சூரியகாந்தி…’ என்ற வருத்தத்துடன்… விடியும் பொழுதில் சூரிய தேவன் மீண்டும் வருவான்’ என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தன.
நன்றி: ஈழநாடு, பாரிஸ்
‘பிரபாகரன் மற்றும் தளபதிகள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!’
‘பிரபாகரன் மற்றும் தளபதிகள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!’
பிரபாகரன் மற்றும் முக்கியத் தளபதிகளில் பாதுகாப்பாக வேறு ஒரு தளத்தில இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.
சிங்கள ராணுவம் நடத்திய முள்ளிவாய்க்கால் படுகொலையில் தலைவர் பிரபாகரனும் தளபதிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் மற்றும் இலங்கை அரசு உலகை நம்ப வைத்தாலும், தமிழ் மக்களின் பெரும்பான்மையானோர் பிரபாகரனின் இருப்பு குறித்த நம்பிக்கை மாறாத மனநிலையில்தான் உள்ளனர். காரணம் பிரபாகரன் என்பவர் ஒரு இனத்தின் அடையாளமாக, குறியீடாகத் திகழ்வதுதான்.
மேலும் கடந்த மே 16-ம் தேதி வரை தலைவர் பிரபாகரன் களத்தில் நின்று போராடினாலும், பின்னர் இயக்கம் மற்றும் தமிழீழ போராட்டத்தின் நன்மை கருதி போர்க்களத்திலிருந்து வெளியேறினார் என போராளிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர். கரும்புலிகள் அணியுடன் பிரபாகரன் வெளியேறியது உண்மையே என இப்போதும் செய்திகள் வருகின்றன.
மேலும் தமிழர்கள் யாரும் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு பிரதேசத்தில் பிரபாகரன் தனது தளபதிகளுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக தமிழீழ ஆதரவு தளங்களில் கட்டுரைகளும் செய்திகளும் வந்துள்ளன.
அதேநேரம், இந்த மாவீரர் தினத்தில் அவர் வெளிப்படுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாது என்றும், அவர் வெளிப்படுவதற்கான காலம், புறச் சூழல் இன்னும் அமையவில்லை என்றும் அச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம்-
இலங்கை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில துரோகப் புலிகளை வைத்து ஒரு பொய்யான மாவீரர் உரையைத் தயாரித்து, வரும் 27-ம் நாளன்று வாசித்துக் காட்டி, பிரபாகரன் இல்லை என்ற தங்கள் புனைவை நிலை நிறுத்த முயற்சிப்பதாகவும் ஆதாரங்களுடன் செய்திகள் வெளி வருகின்றன.
எனவே மாவீரர் உரை / அறிக்கை என்ற பெயரில் வெளியாகும் எதனையும் நம்ப வேண்டாம் என்றும் புலிகளின் தலைமைப் பீடமான பிரபாகரன் மூலம் வருவது ஒன்று மட்டுமே உண்மையான அறிக்கை என்றும் அதிர்வு உள்ளிட்ட தமிழர் தளங்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
‘நாங்களும் அடிப்போம் நோட்டு… இப்படி!’
November 21, 2009 by envazhi
Filed under இது எப்படி இருக்கு
Photoon: ‘நாங்களும் அடிப்போம் நோட்டு… இப்படி!’
படம்: www.eelamhomeland.com





















