ஆயிரத்தில் ஒருவன்.. தடை கோரி வழக்கு!
Saturday, February 6, 2010 at 3:54 am | 688 views
ஆயிரத்தில் ஒருவன்.. தடை கோரி வழக்கு!
கொஞ்ச நாளாகவே புகைந்து வந்த விஷயம்தான்… இப்போது நீதிமன்ற வழக்காக உருமாறியுள்ளது.
தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் ஆட்சியை ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் இழிவுபடுத்துவதாகவும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி சோழர் பேரவை தலைவர் டிவிகே அழகிரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மனுவில் அவர் இப்படிச் சொல்கிறார்:
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் தமிழர்களின் தனி அரசை அமைத்தார்.
குடி ஆட்சி, கிராம நீதிமன்றங்கள், நீர்ப் பாசனத்துக்கு ‘கல்லணை’, தஞ்சை பெரிய கோயில் என அவரது ஆட்சியில் ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டன.
அதேபோல், முதலாவது நூற்றாண்டில் அமைந்த சோழர் ஆட்சியில் வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்பு உள்ளிட்டவை இருந்துள்ளன. சோழர்களின் ஆட்சிக் காலத்தைப் ‘பொற்காலம்’ என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் சோழர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அரசனுக்காக மனித உயிர்ப் பலி அளிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் தொடக்கத்தில் இது ஒரு கற்பனைக் கதை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் சரித்திரக் காலப் பெயர்களே இடம்பெற்றுள்ளன.
இதனால், அவை உண்மையானவை போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் சோழ அரசர்களைப் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும்.
எனவே, இந்தப் படத்தை திரையிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும். அதற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நேற்று வெள்ளிக் கிழமை நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக பிப்ரவரி 17-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கிரீன் வேலி தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
சிங்கமுத்து மீது வடிவேலு மானநஷ்ட வழக்கு
வடிவேலு – சிங்கமுத்து விவகாரம்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் பரபரப்பு. இதுபற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். இதுவரை சிங்கமுத்து பற்றி வடிவேலு புகார் சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்போது தலைமறைவாக இருந்தபடி சிங்கமுத்து, வடிவேலு பற்றி வில்லங்கமான விவகாரங்களை கூறி வருகிறார். இதில் கொலைப்பழியெல்லாம் வேறு வருகிறது.
இதை இப்படியே விடக்கூடாது என முடிவு செய்த வடிவேலு, வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜை தனது வழக்கறிஞராக்கி, சிங்க முத்து மீது பெரிய அளவில் மான நஷ்ட வழக்கு போடச் சொல்ல, அவரும் மனுவை தாக்கல் செய்துவிட்டார்.
சொத்து மோசடி, கொலை மிரட்டல், மான நஷ்ட வழக்கு என சிங்க முத்து அத்தனை சுலபத்தில் எஸ்கேப் ஆக முடியாதபடி வலுவான வழக்குகளைப் போட்டுள்ளார் வடிவேலு.
ஆனால் யார் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று மட்டும் போலீசாருக்கு பிடிபடவே இல்லையாம்!











ஏற்கனவே இனையதளங்களில் வந்த எதிர்மறை விமர்சனங்களால் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு படத்துக்கு மேலும் ஒரு போனஸ் இலவச விளம்பரம். படம் இன்னும் பிக்கப் ஆகும்.