அரசியலே வேண்டாம்! – அஜீத்
Thursday, February 4, 2010 at 1:51 pm | 988 views
சினிமாவையும் நிஜத்தையும் ரசிகர்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்! – அஜீத்
அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை… அதற்கான திட்டங்களோடும் நான் சினிமாவில் நடிக்க வரவில்லை. எனக்கு நடிப்பே போதும் என்றார் நடிகர் அஜீத் குமார்.
நடிகர் அஜீத்குமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், “அசல் படத்தில் நான் இணை இயக்குநராக விரும்பித்தான் பணியாற்றினேன். ஆனால் இப்படி எனக்கு வாய்ப்பு தரகவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. அதற்கு அனுமதித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இதற்கு முன்பும் சில படங்களில் உதவி இயக்குநர் போல் வேலை செய்து இருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு ஈடுபாடுடன் செய்ததில்லை.
ஆனால் இதை வைத்து நான் இயக்குநராக மாறுவேன் என்று எண்ண வேண்டாம். அப்படி எந்த திட்டமும் இல்லை.
அசல் படத்தில் நடித்த அனுபவம்…
நான் 48 படங்களில் நடித்துவிட்டேன். அசல் என்னுடைய 49-வது படம். மற்ற 48 தயாரிப்பாளர்களும் கவனித்ததை விட, சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமார், பிரபு இருவரும் ஒருபடி மேலாக என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அந்த குடும்பத்தின் நல்ல மனதுக்காக, அசல் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
புகைபிடிக்கும் காட்சிகள் குறித்து…
புகைப் பிடிக்கும் காட்சிகள், படத்தில்தான். நிஜத்தில் அதை நானும் எதிர்க்கிறேன்.
மற்றபடி சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை. சினிமா தவிர இன்னொரு வாழ்க்கையும் இருக்கிறது. அதனால் எந்த விஷயத்திலும் நான் ஒதுங்கியே செல்கிறேன்.
சினிமா வேறு.. நிஜம் வேறு!
ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சினிமாவில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் பின்பற்ற வேண்டும்.
நடிகர்களுக்கு அரசியல் தேவையா?
எனக்கு அரசியல் வேண்டாம். நிம்மதியாக படங்களில் நடித்தால் போதும். என் படங்களை தேர்தலில் ஜெயித்தவர்களும் பார்க்க வேண்டும்… தோற்றவர்களும் பார்க்க வேண்டும். தேர்தலில் ஜெயித்தவர்கள் சந்தோஷத்துக்காகவும், தோற்றவர்கள் ஆறுதலுக்காகவும் பார்க்க வேண்டும்.
மகள் எப்படி இருக்கிறாள்?
அவளுக்கு இப்போது 2 வயதாகிறது. நன்றாக ஓடி ஆடி விளையாடுகிறாள். எனக்கு இப்பொழுதெல்லாம் பொழுதுபோவது, அவளால்தான்…, என்றார்.











